ஞாயிறு, மார்ச் 31, 2013

காதல் வெண்பாக்கள் 36



எப்போது இளகும் இரும்பு இதயமடி?
அப்போது இருப்பேனோ ஆரறிவார் ? - இப்போதே 
வந்தென்னைப் பார்த்தால் வரலாறு மன்னிக்கும்.
முந்திக்கொள் காலனுக்கு முன்.

உனக்காக ஏங்கி உயிர்துடிக்கக் காத்து
கணக்கின்றி போனதடி காலம் - பிணக்காட்டில்
நொந்து விழுந்து நெருப்புக் கிரையாகி
வெந்து மடியும்முன் வா!

சிவகுமாரன் 


வெள்ளி, மார்ச் 22, 2013

தேறாத் தேடல்


தூக்கத்தில் மட்டும் சுகங்கண்டு, நாட்களைப்
போக்கிக் கழித்து பொழுதெல்லாம் - ஏக்கத்தில்
வாடுதல் மட்டுமா வாழ்க்கை ? இனிவேண்டும்
தேடுதல் இல்லாத் தினம்.

தினமொரு போராட்டம், தேயும் இளமை
கனவினில் மட்டும் களிப்பு - மனதினில்
மாறா வடுக்கள் , மகேசா இனிநானும்
தேறாமல் போவேனோ தீர்ந்து?



-சிவகுமாரன் 
22.03.2013

திங்கள், மார்ச் 04, 2013

பாவிகளை மன்னிப்பாய்.



புலிக்குப் பிறந்தவனே, போர்க்களத்தில் சிறைபட்டு
எலிக்கு கருவாடாய் இட்டதைத் தின்றாயோ?

 இனங்காத்த தந்தை இல்லாது போனதனால்
பிணந்தின்னிப் பேய்தந்த பிஸ்கட்டை தின்றாயா?

வஞ்சக உலகில் வாழ வேண்டாமென
நெஞ்சிலே தோட்டாக்கள் நீ-வாங்கி னாயா?

நீயுறங்க தாலாட்டு நின்அன்னை இசைப்பதற்கு
பீரங்கி முழக்கங்கள் பின்னணியாய் கேட்டதடா

வீட்டோரம் வெடிகுண்டு வேலியெல்லாம் துப்பாக்கி
தோட்டாக்கள் எல்லாம்நீ தொட்டுவிளை  யாடியவை

ஒரு தோட்டா போதாதா உன்னைக் கொல்வதற்கு
மறுபடியும் சுடடா வென மார்பைக் காட்டினாயா ?

" அப்பா" வென  அலறியதால்  அச்சமுற்று சிங்களவன்
அப்பாவி உன்னை ஐந்துமுறை சுட்டானோ ?

வளர்ந்தால் தந்தைபோல் வரலாறு படைப்பாயென
மலர்ந்ததும் கொன்றாரோ மாபாவிக் கோழையர்கள்

தின்னக் கொடுத்து தீர்த்துக் கட்டியவன்
என்ன பிறப்போ இழிகுலத்து நாய்ப்பிறப்போ ?

சிறுபிள்ளை உனைக்கொன்ற சிங்களவன் நிச்சயமாய்
ஒருதந்தை விந்தணுவில் உதித்திருக்க வாய்ப்பில்லை
                                            ********
இறக்கும் தருவாயில் என்ன நினைத்தாய் ?
பிறப்பேன் மறுபடி பிரபாகரனாய்  என்றா ?

கட்டிச் சுடுகின்ற கருங்காலி நாய்களே
கட்டவிழ்த்து கொடுங்கடா கைத்துப்பாக்கி என்றா?

வங்கக் கடலோரம் வாழும் உறவுகள்
எங்கே போயின இந்நேரம் என்றா ?

புத்தமதப் பேய்களுடன் போர்க்காமம் கொண்டிருந்த
ரத்த உறவுகளின் ரகசியம் அறிந்தாயோ ?

கொலைக்களத்தில் உறவெல்லாம் குற்றுயிராய்க் கிடக்கையிலே
தலைக்கு முக்காடிட்ட தலைவர்களை நினைத்தாயோ?

உடன்பிறப்பே என்று உருகித் தவித்தவர்கள்
கடன்பிறப்பு  என்று கைவிட்டது அறிந்தாயோ?

எப்போதும் நம்பாதே எங்கள்  தமிழினத்தை
ஒப்பாரியைக் கூட ஓசையின்றிப் பாடுவோம்யாம்

கொன்று குவித்தவனை குலவே ரறுத்தவனை
ஒன்றுமே செய்யாமல் ஊமையாய் நிற்கின்றோம்.

கொலைகாரப்  பாவிக்கு கூட்டிக் கொடுத்தவரை
தலையாட்டிப் பொம்மைகளை தலைவரென துதிக்கின்றோம்

கூலிக்கு மாரடிக்கும் கூட்டங்கள் வடிக்கின்ற
நீலிக் கண்ணீரை நிஜமென்று நம்புகிறோம்.

இரக்கமின்றி உனைக்கொன்ற ஈழத்துப்  பேய்க்கெதிராய்
உரக்கப்  பேசுவோரில் உத்தமர்கள் யாருமில்லை.

உன்படத்தைப் போட்டு ஓட்டு வாங்க எண்ணுகிற
சின்னபுத்திக் கூட்டம் தான் சிலிர்க்கிறது வேடமிட்டு.

அமெரிக்கத் தீர்மானம் ஆர்ப்பாட்டம் கண்டனங்கள்
திமிர்கொண்ட பக்ஷேயை தீண்டாது அணுவேனும் .

ஆயுதம் விற்பதற்கும் அடக்கி ஆள்வதற்கும்
பாய்கிறது கண்டனங்கள் பச்சைத் தே....த்தனங்கள்.

உன்னினத்தில் ஓர் தலைவன் உதிக்கின்ற நாள்வரையில்
என்னதான் கதறினாலும் எதுவும் நடக்காது.
                                   **********
நிலைகுலைந்து நிற்கின்றோம் நீகிடக்கும் நிலைகண்டு
தலைகுனிந்து நிற்கின்றோம் தமிழராய்ப் பிறந்ததற்கு.

காலம் கடந்து கண்ணீர் வடிக்கின்றோம்
பாலச் சந்திரா பாவிகளை மன்னிப்பாய்.

-சிவகுமாரன் .

(சென்ற வருடம் குமுறியது உன்னை எப்படி மன்னிப்போம் )