வெள்ளி, அக்டோபர் 16, 2020

காட்டுக்குள்ளே

            
                (காவடிச் சிந்து)

ஓங்கி உயர்ந்து நிற்கும் காடு- அதன்
  உள்ளே சிறியதொரு   வீடு - நீர்
தேங்கிடும் குளத்தருகே
  துள்ளித்துள்ளி மானினங்கள்
  ஓடும்-விளை-யாடும்.

அன்னை நிலத்தின் வளைக் கரங்கள்-போல
  அங்கே வளர்ந்திருக்கும் மரங்கள் -அதன்
சின்ன இலை நடுவே
  சிந்தும் பனித்துளிகள்
  இறங்கும்-வந்து-உறங்கும்.

காய்ந்த இலை மேலிருந்து உதிரும்-சிறு
  காற்றடித்தால் பூமரங்கள் அதிரும்-நீர்
பாய்ந்துவரும் ஒடையினில்
  பால்நிலவும் சூரியனின்
  கதிரும்-பட்டுச்- சிதறும்.

கொட்டும் மழை போன்றதொரு ஊற்றும்-உடல்
  தொட்டுச் செல்லும் தென்பொதிகைக் காற்றும்-தேன்
சொட்டும்பல கீதங்களை
  சொல்லுமொரு பூங்குயிலின்
  பாட்டும்- சுவை- கூட்டும்.

நாட்டுக்குள்ளே பேய்கள் பல கோடி- அவை
  நம்மைத் துரத்தும் முன்னே ஓடி -அந்தக்
காட்டுக்குள்ளே வீடுகட்டி
  காலம் கழித்து வந்தால்
  தொல்லை-ஏதும்-இல்லை.

                                                               -சிவகுமாரன்.




இது ஒரு மீள் மீள்பதிவு. இந்தக் கவிதை 1986 ஆம் ஆண்டு பதினோராம் வகுப்பு படிக்கும் போது எழுதி என் தமிழ் அய்யா திரு.மாரிமுத்து அவர்களால் பாராட்டப் பெற்றது.
34 வருடங்களுக்கு பிறகு ஒரு வகையில் இந்தக் கவிதைக் கனவு பலித்துக் கொண்டிருக்கிறது. ஆம் ஆப்பிரிக்காவின் காட்டுக்குள் கட்டப்பட்டுள்ள வீட்டில் குடி இருக்கிறேன்.:) )  

15 கருத்துகள்:

  1. Great..you have been rightly blessed by your Tamil ayya..keep it up..I went thru most of your blog..a great pleasure..

    பதிலளிநீக்கு
  2. நல்ல பாடல்...

    காவடிச்சிந்து... அழகு நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு வரியும் ரசனைக்குறியது நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. கொட்டும் மழை போன்றதொரு ஊற்றும்-உடல்
    தொட்டுச் செல்லும் தென்பொதிகைக் காற்றும்-தேன்
    சொட்டும்பல கீதங்களை
    சொல்லுமொரு பூங்குயிலின்
    பாட்டும்- சுவை- கூட்டும்.


    good sivakumaran

    பதிலளிநீக்கு
  5. காய்ந்த இலை மேலிருந்து உதிரும்-சிறு
    காற்றடித்தால் பூமரங்கள் அதிரும்..//

    பூ மரங்களின் அதிரலைக் கூட கவியுள்ளங்களால் தான் கண்டு கொள்ள முடியும்.. உண்மை!

    பதிலளிநீக்கு
  6. சின்னக் கவி சிவாவின் கவிதை இன்னமும் இளமை மாறாமல் இருக்கிறது.. வாழ்த்துகள் சிவா...

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. பதினோராம் வகுப்பு வடிக்கும் காலத்திலேயே என்றால
    உண்மையில் தாங்கள் கருவிலேயே திரு உடையவர்தான்
    இல்லையெனில் எங்களைப் போல்
    வார்த்தைகளுக்கு மல்லுக்கட்டிக் கொண்டிராமல்
    இத்தனை சரளமாக கவி படைத்தல் என்பது நிச்சயம் முடியாது
    அதுவும்வெண்பாவுக்கு வாய்ப்பே இல்லை
    தங்கள் பா மழையில் தொடர்ந்து நனைகிறோம்
    கொஞ்சமாவது உடலில் குளிர்ச்சி ஏறுகிறதா பார்ப்போம்
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் சொற்களைக் கூட்டி எழுதும் முறை மிக அழகு !

    பதிலளிநீக்கு
  10. காடழகு காட்டிடும் காவடிச் சிந்தழகு

    பதிலளிநீக்கு
  11. காட்டுக்கவிதை நன்றாக இருக்கிறது. மீள்வருகை நன்று

    பதிலளிநீக்கு
  12. மிக அருமை அய்யா, எங்கள் ஆசான் ஒரு தமிழ் சிற்பி என்பதை இதுவரை நானறியேன்..மிகச் சிறப்பு...

    பதிலளிநீக்கு