செவ்வாய், செப்டம்பர் 30, 2014

ஒரு தேவதையும் சில தெய்வங்களும்.




கொள்ளையர்களின் கூடாரங்கள் 
கோயிலாய் பரிமளிப்பதால்
குற்றவாளிகள் கும்பிடப்படும் 
காலமிது.

கர்ப்பக்கிரகம் கதவடைக்கப்பட்டதில்
பரிதவித்துப் போகிறார்கள்
பக்தர்கள்.
பாவம்....
பிரசாதம்  தின்றே 
பிழைப்பு நடத்தியவர்கள்.

உழைத்துப் பிழைக்க 
வழி தெரியாதவர்கள் 
வன்முறை  முகம்காட்டி
வழி மறிக்கிறார்கள்.
நீதி தேவதையை 
நிந்திக்கிறார்கள்.

ஆனாலும் 
நிந்தனைகளாலும் 
வந்தனைகளாலும் 
நிலை தடுமாறாமல்
நிமிர்ந்து நிற்கிறாள். 
அவள் 

அடுத்த வேட்டைக்கு 
ஆயத்தமாகிறாள்.
கண்ணில் கட்டிய 
கருந்துணியோடும்
கையில் ஏந்திய 
கொடுவாளோடும்.

பயந்துபோய் கிடக்கின்றன(ர்)
இன்னும் சில 
தினவெடுத்த தெய்வங்களும் 
தின்று கொழுத்த  பக்தர்களும்.
சிவகுமாரன் 


சனி, செப்டம்பர் 13, 2014

காதல் வெண்பாக்கள் 45


கவிதை 1

(படத்துக்குக் கவிதை)

பூத்துக் குலுங்குதையா

(வெண்பா அந்தாதி) 

எப்ப வருவீக ? ஏங்கித் தவிச்சிருக்கேன்.
வெப்பப் பெருமூச்சில் வெந்திருக்கேன் - அப்பப்பா
காத்தைப்போல் வந்தீக! கன்னி மனசெல்லாம்
பூத்துக் குலுங்குதையா பூ.

பூக்கூடை தூக்கி புறப்பட்டால், நான்கோர்த்த
பூகூட வாடிப் புலம்புதையா - பூகூட
சேர்ந்திருக்கும் நாராகச்  சேர்ந்து மணம்வீச
தேர்ந்தெடுத்து நாளொன்று சொல்.

சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய் மனம்திருடி!
எல்லாம் இருந்தெனக்கு ஏதுமில்லை - பொல்லாத
காதல் புகுந்து கரைக்குதையா தேகத்தை !
வாதைக்கு வைத்தியமாய் வா!

வாசற் படியெங்கும் வந்திருந்து நீபோன
வாசம் கலந்து வழியுதய்யா - வாசற்
படியாய்த் தவமிருந்து பார்த்திருக்கேன் உன்னை
விடியாப் பொழுதில் விழித்து.

விழித்தால் கனவு விலகுமென  எண்ணி
விழி-தாழ் திறக்கவில்லை வீணாய்! - விழித்து
உனைத்தேடி வாசலில் உட்கார்ந்தேன், ஆனால்
எனைத்தேடி யார்தருவார் இங்கு?

-சிவகுமாரன் 

கவிதை 2
(விருப்பக் கவிதை)

கேட்பாரில்லா  கீதாஞ்சலி 


சலனமற்று ஓடிக்கொண்டிருக்கிறது
நதி.
உருட்டிச் சிதைத்த
கூழாங்கற்களின்
குரலை அமுக்கி.                                        

விண்முட்ட பறக்கிறது.
வெண்ணிறக் கொடி .
குருதிச் சாந்தில்
குழைத்து எழுப்பிய
கம்பத்தின் உச்சியில்.                        

எடுத்து உரச எவருமின்றி
பெட்டிக்குள் கட்டுண்டு
அடுக்கடுக்காய் தீக்குச்சிகள்.
ஒரு
வனத்தையே எரிக்கும்
வன்மத்துடன்.                                        

கூட்டைச் சிதைத்து
விரட்டியடித்த பின்
வேகவேகமாய்
புனரமைப்பு வேலைகள்.
பறவைக்கூட்டில்
பாம்புகளைக்  குடியேற்ற.                  

கிளிகளும் குயில்களும்
கீதாஞ்சலி இசைக்கின்றன.
கேட்பாரற்றும்
கிளைகளற்றும்!                                      

ஒப்பாரிப் பாடலில்
ஒளிந்து கொண்டிருக்கிறது.
ஓர் அறைகூவல்.                                            
சிவகுமாரன் 

காதல் வெண்பாக்கள் 45