திங்கள், டிசம்பர் 19, 2011

காதல் வெண்பாக்கள் 26

 அடைமழைக் காலம்
  அடிக்கும் வெயிலாய்
கொடைக்கானல் காலைக்
  குளிராய் - மடைதிறந்த
வெள்ளத்தைக் கண்ட
  விளைநிலமாய் நீயென்னை 
தெள்ளத் திருடிய 
       தீ .




தீபுகுந்த முட்காடாய்                       
  தீய்ந்தெரியும் என்வாழ்வில்
நீபுகுந்தாய் வெள்ளமென
  நீர்சுமந்து ! - கோபுரத்தின்
உச்சியினில்   வீசும்
  ஒளியாய் நுழைந்திட்டாய்
குச்சுக் குடிலில்
   குனிந்து.


சிவகுமாரன் 

புதன், டிசம்பர் 14, 2011

ஹைக்கூ கவிதைகள் 50



பச்சை வயலின்  
பரிணாம வளர்ச்சி
மச்சு  வீடுகள்






விரட்டப்பட்டனர் பிச்சைக்காரர்கள்.
வெகு விமரிசையாய்
அன்னதானம்.




என் வீட்டில் திருட
எனக்கே லஞ்சம்.
ஓட்டுக்குப் பணம்.





முதுகில்  தொற்றியது  குழந்தை.
இறங்கிக் கொண்டது
அலுவல் அழுத்தம்.







காலை  கடித்ததாம்
வேறு செருப்பு கேட்டாள்.
கையை கடித்தது.




- சிவகுமாரன்


திங்கள், டிசம்பர் 05, 2011

ஊருக்கெல்லாம் வீடுகட்டி
















(ஆறுமுகம் கொத்தனார் - அஞ்சலை சித்தாள் தம்பதியினரின் உரையாடல் )

அஞ்சலை :
ஊருக்கெல்லாம் வீடுகட்டி 
  ஒழைச்சிக் களைக்கிறியே
பேருக்கொரு சின்ன வீடு
  நமக்கு உண்டா சொல்லு மச்சான் .


ஆறுமுகம்:
ஆண்டவன் கொடுத்ததெல்லாம் 
  அளவா இருக்குதடி
வேண்டாத ஆசைகளை 
  வீணாய் வளக்காதடி.

அஞ்சு:
நேத்தடிச்ச மழைத்தண்ணி 
  நெறஞ்சிருக்கு வீட்டுக்குள்ள 
காத்தடிச்ச வேகத்தில 
  கலைஞ்சிருச்சு கூரையெல்லாம் 


பொத்தல் குடிசையில
  பொட்டுத் திண்ணையில 
எத்தனை நாள் வாழுறது ?
  ஏதாச்சும் பண்ணு மச்சான் 

ஆறு :
மாடி வீட்டைக் கண்டு 
  மனசு மயங்காதேடி 
கோடிப்பணம் இருந்தாலும் 
  கெடைக்காதடி இந்தசுகம் 


ஓலைக் குடிசைக்குள்ள 
  ஒன்னோட இருக்கையில 
வேலை செஞ்ச களைப்போடு 
  வேதனையும் தீருமடி.

மாளிகை வீட்டுக்காரன்
  மனசார தூங்கலைடி
தூளி அசைஞ்சாலும் 
  துடிச்சு முழிக்கிறான்டி


ஆசை அதிகரிச்சா 
  அப்புறமா கஷ்டம் தான்டி 
மீசைக்கும் கூழுக்குமாய் 
  மீளாத் துயரந்தான்டி     

அஞ்சு:
அழகான ஓட்டு வீடு
  அருகே ஒரு பூந்தோட்டம் 
பழக ஒரு பசுமாடு
  பார்த்திருக்க ஒங்க முகம் 


ஆசை அதிகமில்லை 
  அளவாத்தான் கேட்கிறேன் நான் 
காசுபணம் இல்லாட்டி 
  கடன்வாங்கி கட்டு மச்சான் 


ஆறு:
என்னைநம்பி கடன்கொடுக்க 
  எவன் இருக்கான் ஊருக்குள்ள ?
உன்னைச்  சொல்லி குத்தமில்லை -உனக்கு 
  உலகம் புரியவில்லை .

அஞ்சு:
கட்டிவந்த தாலியில
  தங்கம் கொஞ்சம் இருக்கு மச்சான்
வட்டிக்கு வச்சுப்புட்டா 
  வழி கிடைக்கும் வீடுகட்ட .

ஆறு:
கழுத்து நகை பறிச்சு 
  கட்ட வேணாம் வீடு ஒண்ணும்
உழைச்சு சம்பாதிச்சு 
  உனக்காக கட்டுறேன்டி.


இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு 
  ஏதாச்சும் கையில் சேர்த்து 
நின்னு நிலைச்சுக்கிட்டு 
  நெனைக்கலான்டி வீடுகட்ட 


அஞ்சு:
இப்படியே சொல்லி சொல்லி 
  என்வாயை அடைச்சிடுறே.
எப்பத்தான் என்பேச்சு
  எடுபடுமோ தெரியவில்லை 


ஆறு:
வேலை நேரத்தில 
  வெட்டிப்பேச்சு பேசுறேன்னு 
மேலே விழுந்து நம்மை 
  மேஸ்திரிதான் கத்துவாரு 

ஓயாம சத்தம்போட்டா 
  ஒதைவிழும் சொல்லிப்புட்டேன்
வாயைக் கொஞ்சம் மூடிக்கிட்டு 
  வந்த வேலை பாரு புள்ள..