சனி, பிப்ரவரி 22, 2014

ஒருத்தனையுங் காணலியே!



                                                         கவிஞர்.சுந்தரபாரதி 

காரு போட்டு  ஓடிவந்து கையெடுத்து சலாம் போட்டு 
அக்கான்னு தங்கச்சின்னு அவசரமா ஒறவு சொல்லி  
ஓட்டு கேக்க வந்தாங்களே சின்னாத்தா - இப்போ 
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?

சாதி நம்ம சாதியின்னா தாயே சரணமின்னா 
ஒங்க வீட்டுப்  புள்ளையின்னா ஓட்டுப்போட வேணுமின்னா 
ஓட்டுப்போட்ட கையோட சின்னாத்தா -இப்போ
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?

வீதியெல்லாம் தோரணங்க வெதவெதமா கொடியைக்கட்டி 
சாலையெல்லாம் தூள்பறக்க சரஞ்சரமா "பிளேசர்" விட்டு
ஓட்டு கேக்க வந்தாங்களே சின்னாத்தா-இப்போ
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?

மல்லுவட்டுத் துண்டு போட்டு மைக்குவச்சு விளம்பரங்க
வாழ்வு  மலருமின்னா வறுமை தொலையுமின்னா
போடுங்கம்மா ஓட்டுயின்னா பொடலங்காயைப் பாத்துயின்னா
ஓட்டுக் கேக்க வந்தாங்களே சின்னாத்தா-இப்போ
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?

ஏழை எளியதுக எல்லார்க்கும் நன்மையின்னா
வேலை கெடைக்குமின்னா வெலைவாசி குறையுமின்னா
சாலை தெருவிளக்கு சர்க்காரு வசதியின்னா
போட்ட வெளக்கு  கூட சின்னாத்தா -இப்போ
பொசுக்குன்னு நின்னுபோச்சே என்னாத்தா? 

தாலிக்குத் தங்கந்தாரேன், தாளிக்க  வெங்காயந் தாரேன்
கூலிக்கு வேலை தாரேன் கூப்பிட்டாக்க ஓடிவாரேன்
ஆட்சிக்கே வந்துட்டாக்க அத்தனையும் செஞ்சு தாரேன்
ஓட்டுபோட வேணுமின்னா சின்னாத்தா -இப்போ
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?

வானம்  மழை பெய்யவில்லை வயக்காடும் வெளயவில்லை
கையிலே காசுமில்லை கடங்கொடுக்க யாருமில்லை
குண்டி கழுவக் கூட சின்னாத்தா -இப்போ
குளத்திலயும் தண்ணியில்லே என்னாத்தா?

குடிக்க இப்போக் கூழுமில்லே குடிசையில வெளக்குமில்லே
கோதுமைக்கும் மண்ணெண்ணைக்கும் கூட்டம் குறையவில்லை
அங்காடிக் கார்டுக்கு அரிசி கெடைக்கவில்லை
எறகு மொளச்ச விலை இன்னும் இறங்கவில்லை
ஓட்டுக்  கேக்க வந்தாங்களே சின்னாத்தா -இப்போ
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?