திங்கள், செப்டம்பர் 24, 2012

சாட்டை



கவிதை எனது 
  கரங்களில் சாட்டை
புவியை புரட்டவந்த 
  போர்வாள் - செவியைக்
கிழிக்கும் கருத்துக் 
  கிடங்கு; பகையை
அழிக்கத் துடிக்கும்
  அணு.
-சிவகுமாரன் 
கனல் பறந்த கல்லூரிப் பருவம்
 1990

வெள்ளி, செப்டம்பர் 21, 2012

இதுவும் ஒரு யாகம்




நாதஸ்வரம்:
அடிவயிற்றின் உள்ளிருந்து கிளம்புகின்ற நாதம்  
  அதையழகாய் இசையாக்கி இதழிரண்டும் ஊதும் 
படியாத மனங்களையும் படியவைக்கும் கீதம் - அது 
  பலபேரை மயங்க வைத்த இசையென்னும் வேதம்.

மேளதாளம்:
மேளமென்றும்  தாளமென்றும் வழங்கும் மிரு தங்கம் 
  மெதுவாகத் தட்ட இசை மேகமேனப் பொங்கும்.
தாளமதை விரும்பாத உயிரில்லை எங்கும் - இத் 
  தாரணியில் இசை என்றும்  அழியாமல் தங்கும்.

நாதம்:
மூச்சடக்கி வாசிக்க மூச்சிரைப்பு வாங்கும் 
  முன்னுதடு கன்னங்கள் முகமெல்லாம் வீங்கும் 
பேச்சு கூட தடைபட்டு உள்மனது ஏங்கும் - ஒரு 
  பாராட்டு வார்த்தையிலே அத்தனையும் நீங்கும்

தாளம்:
பத்துவிரல் அத்தனையும் பலமாக நோகும் 
  பழகிவிட்ட பின்னாலும் வலியெடுக்கும் தேகம் 
இத்தனையும் தாண்டித்தான் தாளம்உரு வாகும்
  இறுமாந்து சொல்லிடுவோம் இதுவும் ஒரு யாகம்.

நாதம்:
காலை கையை அங்குமிங்கும் பலவிதமாய் ஆட்டி 
  கண்டபல கருவிகளை கணக்கின்றி மீட்டி - வரும் 
மேலைநாட்டு சங்கீதமா எங்களுக்கு போட்டி?- நாம் 
  மேதினியில் வாழ்ந்திருப்போம் வெற்றிக் கொடி  நாட்டி.

தாளம்:
நாதம் தாளம் இணைந்தது தான் இசையின் ஆதிமூலம்.
  நாட்டில் இன்று ஒலிப்ப தெல்லாம் இசையின் மரண ஓலம் 
வேதம் போன்ற எம் இசையை வணங்கும் வருங்காலம்- அன்று 
   வேறு இடம் தேடிக்கொண்டு ஓடும் அலங்கோலம். 


-சிவகுமாரன் 
ஏப்ரல் 1993 
வாசுகி இதழ் போட்டிக்காக எழுதியது.

இதே போட்டிக்காக எனது சித்தப்பா சுந்தர பாரதி எழுதிப் பரிசு  பெற்ற கவிதை.
சிந்தையை  மயக்குதடி 
அவள்:

சித்திரைத் திருவிழாவாம் தென்மதுரைக் கோயிலிலே  
   சேர்ந்து நம்ம கச்சேரிக்கு மச்சானே - நானும் 
மொத்தமாக ரேட்டு பேசி முழுத் தொகையும் வாங்கிப்புட்டேன்
   முன்னதாகப் போயிடனும் மச்சானே 
அவன்:

கரும்பு தின்னக் கூலி கேட்டு  கச்சிபேசித் திரிவதுண்டோ 
   கண்டிப்பாக வந்திடுவேன் கண்ணம்மா - நீ
தருமிசைக்கு உளமயங்கித் தாளத்தோடு நானியங்கித் 
   தவிலெடுத்து  முழக்கிடுவேன்  கண்ணம்மா.

அவள்:

நாதசுரக் கானத்திலே நானிசைக்கும் கீதத்திலே 
   நயமளிக்கும் லயத்துடனே மச்சானே - உன் 
நூதனத் திறமைமிக்க மேள இசை  கேட்டு" நந்தி"
   நூறுதரம் தலையசைப்பார் மச்சானே.

அவன்:

 நாதசுரத் துளைவழியே நங்கையுந்தன் மென்விரல்கள் 
    நர்த்தனங்கள் ஆடுமடி  கண்ணம்மா - அதில் 
சீதளம் நிறைந்த இசை "தோடி" முதல் "பைரவி"கள்      
    சிந்தையை மயக்குதடி கண்ணம்மா 

அவள்:

எத்தனை மிகப்பெரிய வித்துவான்க ளானபோதும் 
   இடையினிலே துண்டெடுத்து மச்சானே - கட்டி 
அத்தனை சபை நடுவே ஆலாபனை  செய்து நின்ற 
    அடிமை ஒழிந்ததின்று மச்சானே 

அவன்:

உண்மையாய்க் கலைவளர்க்கும் நம்மவரைப் போன்றவர்க்கு 
   உயர்வைக் கொடுத்த தெய்வம் கண்ணம்மா -பல 
நன்மைகள் அளித்த மேதை "இராஜரெத்தினம் பிள்ளை"யை 
   நன்றியுடன் கும்பிடணும்  கண்ணம்மா 

                                                                                                                          -சுந்தரபாரதி