திங்கள், மே 13, 2013

காய்ச்சியெடுத்த கவி


கரடுமுரடான
கொடுஞ்சிறையில்
கட்டுண்டு கிடக்கிறது
கவனிப்பாரன்றி
கவிதை.

எப்போதாவது
தட்டுத் தடுமாறி
தலைகாட்ட நினைக்கையில்
இழுத்து நிறுத்தி விடுகிறது
இரும்புக்கரம் கொண்ட
இடைஞ்சல்கள்..

மீறிஎழும் போதெல்லாம்
சீறி விழுகிறது
பொங்கிய பாலில்
தெளித்த நீராய்
வாழ்க்கை.

ஆரவாரம்  இல்லாமல்
அடங்கிப் போனாலும்
காலம் கனியுமெனக்
காத்திருக்கிறது
சுண்டக் காய்ச்சியக்
கவிதையொன்று.


சிவகுமாரன் 

புதன், மே 01, 2013

வரட்டுமே வறட்டு"மே"



வியர்வைத் துளிகளால்
நிரம்பி வழிகிறது
கோப்பை.

தொழிற் சங்கங்களில்
தோண்டத்  தோண்ட
தங்கச் சுரங்கங்கள்.

சிவகாசி முழுக்க
சிவப்புப் புரட்சி தான்.
பட்டாசும்  இரத்தமுமாய்  .

அழகருக்குத் திறந்த
வைகைத் தண்ணீர்
வயிறு கழுவுமோ ?

விடுமுறை, ஒய்வு
பென்சன், பி.எஃப்
அம்மாவுக்குண்டா ?

மே  ஒண்ணு
ஏப்ரல் ஒண்ணு
எல்லாம் ஒண்ணு.

சிவகுமாரன்