ஞாயிறு, நவம்பர் 15, 2015

காதல் வெண்பாக்கள் 52



வெங்கனலில்  நானிங்கு வெந்தாலும் காப்பதற்கு
பொங்குதடி உன்காதல் பூமழையாய்-அங்கிருந்து
ஈதலினால் இன்னும் இருக்கின்றேன் சாகாமல்
ஆதலினால் காதல் சுகம்.

காட்டுக்குப் போனாலும்  காவலென ஓடிவரும்
கூட்டுக்கு மீண்டுமுனைக் கூட்டிவரும் - வாட்டுகிற
கூதலுக்குத் தீயாகும் கோடைக்கு நீராகும்
ஆதலினால் காதல் சுகம்.

சிவகுமாரன் 

(ஈற்றடி தந்த நண்பர் விஜூ அவர்களுக்கு  நன்றி.)



திங்கள், நவம்பர் 02, 2015

பிள்ளைக்குறள் 70



வகுப்பறை என்பது வையத்தை வெல்ல
தகுதியாய் ஆக்கும் தளம்.

தளத்தைக் கவனமாய்த் தேர்ந்திட்ட பின்னர்
களத்தில் திறமையைக் காட்டு.

காட்டுவாய் யாரென்று கானக் குயிற்குஞ்சு
ஓட்டை உடைப்பதை ஒத்து
.
ஒத்தக் கருத்துடன் ஒவ்வாத ஒன்றையும்
எத்தன்மை என்றுபார் ஆய்ந்து.

ஆய்ந்து தெளிந்தே அறுதியிடு! இல்லையேல்
பாய்ந்து  வரும்பார் பழி.

பழிக்குப் பயங்கொள்! பழம்பட்ட நோய்போல்
அழித்தே  ஒழிக்கும் அது.

அது-இது என்றெல்லாம் ஐயங்கள் இன்றி
எதிலும் துணிவாய் இறங்கு

இறக்கத்தில் கைதூக்கி ஏற்றியோர் தம்மை
மறக்காமல் என்றும் மதி

மதிப்பில்லை என்றால் மகேசன் எனினும்
விதிப்பயன் என்று வில(க்)கு.

விலக நினைக்காமல் வெல்லும் வெறிகொள்.
இலகுவாய் வெற்றிகள் ஏது?                                           ...70
                                                                                                                                                                                                                தொடரும் 


சிவகுமாரன்