ஞாயிறு, ஜூன் 28, 2015

ஆலங்குடியிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு.


திரைகடல் ஓடியும் திரவியம் தேடென்றார்
நரைதோன்றிய  பின்னேதான் நமக்கு உறைக்கிறது

வெளிநாட்டு மோகமில்லை விமானத்தில் ஆர்வமில்லை
களிப்போடு ஊர் சுற்றும் காலம் இனியில்லை.

பணக்காரப் பெருமைக்கும் பகட்டான வாழ்வுக்கும்
மனக்கோட்டை  கட்டும் மனிதன்  நானில்லை

வாங்கிய கடனடைக்க வழியின்றி போய்விடுமோ
தூங்குகையில் உயிர்ப்பறவை சொல்லாமல் பறந்திடுமோ

சொத்துக்கள் சேர்க்காமல் சுமைவைத்துச் சென்றதாய்
பெத்தமகன் என்பெருமை  பேசும்படி ஆவேனோ

ஏதேதோ எண்ணங்கள் இதயத்தைச்  செல்லரிக்க
வேதனையில் வெளிநாடு விண்ணேறிச் செல்கின்றேன்

பாரங்கள் இறக்கிவைக்கப்  பயணம் தொடங்குகிறேன்
தூரம் நெடுந்துரம் துயர்தாங்கிப் போகின்றேன்.

அன்பு மனைவியை அறிவான பிள்ளையை
வன்மமாய்ப் பிரிகின்றேன் வதைத்துத்தான் பிரிகின்றேன்

மெலிதான இதயத்தில் முள்ளிறக்கிப் போகின்றேன்
வலிதாங்கச் சொல்கின்றேன் வழியின்றிச் செல்கின்றேன்.

 அருள்தேடி அலையும் ஆவல் அடக்கிவைத்து
பொருள்தேடிப் பறக்கின்றேன்  பூவுலகில் வாழ்வதற்கு.

இல்லாமை ஒழிய இல்லார்க்கு உதவ
பொல்லாத பொருள்தேடி போகின்றேன் வெகுதூரம்.

ஒன்றை இழந்தால்தான்  இன்னொன்று கிடைத்திடுமாம்
ஒன்றைப் பெறுவதற்காய் எத்தனையோ  இழக்கின்றேன்

இருண்ட கண்டமென்பார் எனக்கங்கே தெரிகிறது
உருண்டோடும் நாட்கள் எனும் ஒரேயொரு ஒளிக்கீற்று.

சிவகுமாரன் 
22.06.2015


  

வெள்ளி, ஜூன் 12, 2015

காதல் வெண்பாக்கள் 50



நினைத்துக் கிடப்பதால் நீளும், விழிநீர்
நனைத்தத் தலையணையின் நாட்கள்-அனைத்தும்
அடங்கும் இரவில் அசையாமல் தூங்கி
முடங்கும் கடிகார முள்.



முள்ளாகக் குத்தும் முகம்தவிர்க்கும் உன்கோபம்!
உள்ளூரச் சிக்கி உணர்வழிக்கும் - சுள்ளென்று
சுட்டெரிக்கும் சொல்லும் சுகமாகும்! நீயென்னை
விட்டு விலகாமல் வீழ்த்து.



வீழ்ந்து  கிடக்காதே வேலிக்குள்! யாருக்கும்
தாழ்ந்து அடங்காமல் தாண்டிவா!-வாழ்ந்து
முடித்தோர்கள் நம்மை முடக்குவார்! காதல்
ஒடித்தால் உடையாதென்(று) ஓது.


சிவகுமாரன்