செவ்வாய், ஏப்ரல் 23, 2013

நிழல் உறவுகள்


இத்தனை நேரம் 
என்னைத் தொடர்ந்த
நிழல் 
இருட்டில் மட்டும் 
எங்கே போனது?

காலையில் குறுகி
மாலையில்  நீண்டு 
மாயாஜால 
வித்தைகள் காட்டி 
மண்ணில் புழுதியில் 
படுத்துப் புரண்டு 
காலுக்குக் கீழே 
கடனே என்று 
போகும் இடமெல்லாம் 
பின்னே  தொடர்ந்த
எந்தன் நிழல் 
எங்கே போனது?

இருட்டில் எங்கோ 
ஒளிந்து கொண்டு 
வெளிச்சத்தில்  நிழலின் 
வேலை  என்ன ?

பட்டப் பகலில் 
பயணத் துணை 
யார் கேட்டது?

இருட்டு வழியில் 
பயணம் போகையில் 
குருட்டு விழியே 
வழித்துணை ஆகையில் 
எங்கே போனது 
எந்தன் நிழல் ?


இத்தனை நேரம் 
என்னைத் தொடர்ந்த நிழல் 
இருட்டில் மட்டும் 
எங்கே போனது?

சிவகுமாரன் 
1988 கல்லூரிக் காலம்