வெள்ளி, அக்டோபர் 07, 2022

கனவுக்கடத்தல்.



முத்தை விழுங்கத்தான்
வாய்பிளந்து கிடக்கின்றன
எல்லாச் சிப்பிகளும்.

சிறகு விரிக்கவே
இடப்படுகின்றன
முட்டைகள்..
பொரித்துத் தின்ன அல்ல

விட்டுவந்த கன்றுகளில்
முளைத்து வருகிறது
வெட்டப்பட்ட
தோரண வாழையின்
ஏக்கங்கள்.

வேர்களின் தாகத்திற்கு
தண்ணீர் குடிக்கின்றன
விழுதுகள்.

தலைமுறைகள் தாண்டி
கடத்தப்படுகின்றன
கனவுகள்.

                                               சிவகுமாரன்.
                                                07/10/2022.

புதன், செப்டம்பர் 21, 2022

கடவுளைக் காட்டியவன்




உன்னால் தான்

நான்

சாமி கும்பிட்டேன்.

இடுப்பில் துண்டு கட்டி

கோயிலுக்கு வெளியே 

நின்றவர்களை

ஆலயம் நுழைய வைத்தவன் நீ.

நீ கடவுளே இல்லை என்றாய்.

உன்னால் தான்

கடவுளே எங்களை கண்டுகொண்டார். 


இது பெரியார் பூமியா

ஆன்மீக பூமியா எனும் 

கேள்வி எனக்கு இல்லை.

இது

பெரியார் உருவாக்கிய

ஆன்மீக பூமி. 


நீ

கடவுளை மறக்கச் சொன்னாய்.

மனிதனை நினைக்கச் சொன்னாய்.

நாங்கள்

யாரையும் மறக்கவில்லை.


என் பார்வையில்

இராமானுஜர்

வள்ளலார்

அடிகளார்...

இந்த வரிசையில்

ஆன்மீகப் புரட்சி செய்த

பெரியார் நீ 


எங்கள் கடவுள்கள்

இருக்கும் வரை

நீயும் இருப்பாய்.

வாழ்க நின் புகழ்.

                                              சிவகுமாரன்

                                                17/09/2022



ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2022

தாய்க்கிழவி

 


களவாணிப் பயலுகளோடு
கூட்டு சேர்ந்துகிட்டு
பூர்வீகச் சொத்தையெல்லாம்
வித்து திங்குது
ஊதாரிப் புள்ளை.

எழுபத்தஞ்சு வயசாச்சு
என்ன செய்வா பாவம்
தாய்க்கிழவி...

                                               சிவகுமாரன்.

புதன், மார்ச் 16, 2022

கேட்பாரில்லா கீதாஞ்சலி












சலனமற்று 
ஓடிக்கொண்டிருக்கிறது நதி. 
உருட்டிச் சிதைத்த 
கூழாங்கற்களின் 
குரலை அமுக்கி. 

விண்முட்ட பறக்கிறது 
வெண்ணிறக் கொடி . 
குருதிச் சாந்தில்
குழைத்து எழுப்பிய
கம்பத்தின் உச்சியில். 

எடுத்து உரச எவருமின்றி
பெட்டிக்குள் கட்டுண்டு 
அடுக்கடுக்காய் தீக்குச்சிகள்.
 ஒரு வனத்தையே எரிக்கும் 
வன்மத்துடன். 

கூட்டைச் சிதைத்து
விரட்டியடித்த பின் 
வேகவேகமாய் 
புனரமைப்பு வேலைகள். 
பறவைக்கூட்டில்
பாம்புகளைக் குடியேற்ற.

கிளிகளும் குயில்களும் 
கீதாஞ்சலி இசைக்கின்றன. 
கேட்பாரற்றும் 
கிளைகளற்றும்! 

ஒப்பாரிப் பாடலில் 
ஒளிந்து கொண்டிருக்கிறது. 
ஓர் அறைகூவல். 
                                                      -சிவகுமாரன்