சனி, மே 24, 2014

காதல் வெண்பாக்கள் 40


பேர்த்தெடுத்துச் சென்றதடி உன்பிரிவு நெஞ்சத்தை 
வார்த்தை இழந்ததடி வாயிதழும் - பார்த்துப் 
பழுதாகிப் போனதடி பார்வை ! தினமும் 
அழுதநீர் ஆனதடி ஆறு.



ஆறாத் துயராய்  அகலா நெடுங்கனவாய்
மாறா வடுவாய் மனதுக்குள் - சூறா 
வளியாய்ப் புகுந்து வலுவாய்ப் புரட்டி 
வலியாய்  நிறைந்தாய் வதைத்து.
-சிவகுமாரன் 

வியாழன், மே 01, 2014

விற்பனைக்கு


சாராயம் வித்தீங்க
சகிச்சுக்கிட்டோம்
இட்லி தோசை வித்தீங்க
ஏத்துக்கிட்டோம்
தண்ணியையும் வித்தீங்க
தாங்கிக்கிட்டோம்

இனிமே எதை விப்பீங்க?
காத்தை பிடிச்சு
காசாக்குங்க

பத்தலைனா
எங்களை வித்துருங்க
வாங்கிக்க இருக்காங்க
வசதியா சில பேரு
ஏலாம கெடக்குறோம்
எங்கள்ள பல பேரு.