வியாழன், அக்டோபர் 24, 2013

வளி வலி




பலூனுக்குள் நுழையும் காற்றாய் 
தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.
பருக்கும் சுகத்தை நுகரவும் 
வெடிக்கும் தருணத்தை உணரவும் 
முடியாமல்.

உணர்ச்சியற்று 
ஊதும் உதடுகளுக்கும் 
கைகுலுக்க காத்திருக்கும் 
காற்று வெளிக்கும் 
தெரிவதேயில்லை 
நுரையீரல் காற்றின் 
நுண்ணிய வலிகள்

சிவகுமாரன் 

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

கத்தியின்றி இரத்தமின்றி??


கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.

இந்திய விடுதலைக்கு இளைஞர்கள் கூட்டமெல்லாம்
சிந்திய இரத்தத்தை அளக்கத் தான் இயன்றிடுமோ ?
பங்கு கேட்டு வந்த பரங்கியரின் எலும்பொடிக்க
எங்கு நோக்கினும் இளைஞர்களின் போராட்டம்
செங்குருதிச் சாற்றாலே விடுதலைக்கு நீரோட்டம்.

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.

ரத்தத்தை நீராக்கி பொன்னுடலை உரமாக்கி
எத்தனையோ உயிர்ப்பலிகள் எண்ணற்ற தியாகங்கள்.
நித்தம் ஒரு போராட்டம் வெள்ளையனுக் கெதிர் நடத்தி
புத்தம் புது மனைவிக்கும் புன்னகைக்கும் குழந்தைக்கும்
முத்தமிட நேரமின்றி முகம்பார்க்க வழியுமின்றி
சித்தமதை கல்லாக்கி சிறை சென்றோர் எத்தனைபேர்?

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.

பையிலே காசுமின்றி பகிர்ந்து கொள்ள யாருமின்றி 
தையலை தனிமையில் தவிக்கவிட்டு நாட்டிற்காக 
கையிலே கொடியைத் தாங்கி கண்ணிலே வீரம் தேக்கி 
சண்டைக்கு என்றே வந்த சண்டாளப்  படைகளிடம் 
மண்டையில் அடியை வாங்கி மண்ணிலே வீழ்ந்த போதும் 
என்னை நீ தீயிலிட்டு எரித்தாலும் என்திரு நாட்டு
அன்னையின் மணிக்கொடி தன்னை இழப்பேனோ என முழங்கி 
தன்னையே நாட்டிற் கீந்த குமரனின் இரத்தம் இன்னும் 
திருப்பூரின் சாயப் பட்டறையில் கலந்தோடி 
இருப்பதை நம்மில் எவரேனும் நினைத்தோமா ?

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.


எப்போதும் அஹிம்சையே எமக்குத் துணையென்ற
தப்பான பாதையில் தடம்மாறி நாம்நடந்தால்
ஒப்பாரிப்  பாடலுக்கே உரையெழுத வேண்டிவரும் .
துப்பாக்கிக் குண்டுகளால் துரோகிகளை சாய்த்து அந்த
வெப்பத்தால் என்தாயை குளிர்விப்பேன் என முழங்கி
மாதாவின் விலங்கொடித்து மண்ணை மீட்பதற்கு
நேதாஜி அமைத்திட்ட போர்ப்படைக் கீடேது?
வயல்காட்டில் ஏர் கலப்பை ஏந்தி நின்ற கைகளுக்கு
அயல்நாட்டில் அவனளித்த பயிற்சிக்கு இணையேது?

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.


தீயாக சுட்டெரித்த தினவெடுத்த வெள்ளையனை 
தீவிர வாதத்தால்தான் தீர்க்க வேண்டும் எனவெண்ணி 
வெறிநாய்க் குணம் கொண்ட ஆஷ் என்னும் வெள்ளையனை  
குறிபார்த்துக்  கொல்லுவதில்  தங்களுக்குள் போட்டியிட்டு 
நாட்டுக் குழைத்திட்ட நல்லோர் குழுவொன்று 
சீட்டுக் குலுக்கியொரு சிங்கத்தை தேர்ந்தெடுத்தது.
பிறந்த நாட்டிற்கு  பெரும்பணி செய்வதற்கு 
சிறந்த வாய்ப்பொன்று கிடைத்ததென அவன் மகிழ்ந்தான்.
நாட்டையே கலக்கிவந்த ஆஷ் என்னும் வெள்ளையனை 
தோட்டாவுக் கிரையாக்கி  தன்னையும் மாய்த்திட்ட 
வாஞ்சிநாதன் அன்றைக்கு வடித்த செங்குருதி 
காய்ஞ்சு தான்  போனதுவோ காற்றிலே மறைந்ததுவோ?

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.


வீர சுதந்திரம் வேண்டி நின்ற  வீரர்களை - நெஞ்சில்
ஈரமின்றி தாக்கிய வெறிகொண்ட வெள்ளையன் முன்
காரமில்லாத் தத்துவத்தால் கடுகளவும் பயனில்லை
சாரமில்லா போராட்டம் சத்தியாக் கிரகமெல்லாம்- உடலை
பாரமென எண்ணுகிற கிறுக்கர்களின் கொள்கையாகும்
தூரத்தே நில்லுங்கள் கோழைக் கூட்டமெல்லாம்.
சூரர்கள் கூட்டமிங்கே சூழட்டும் என முழங்கி
தாக்குதல், போராட்டம் , தோட்டாக்கள் என இறங்கி
தூக்குக்குப் பலியான பகத்சிங்கின் கழுத்தில்
விழுந்து இறுக்கிய  வெள்ளையனின் கயிற்றில் தான்
எழுந்து பறக்கிறது இந்தியக் கொடியின்று.

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.


பார் அதிரக் கவிதை கொண்டு பரங்கியரை எதிர்த்திட்டான் 
பாரதி எனும் புலவன் பாரதத்தின் தவப் புதல்வன் 
ஆயுதக்கணை  கொண்டு ஆர்ப்பரித்த வெள்ளையனை 
காகிதக் கணை தாங்கி கலக்கிட்ட வீரனவன்.
அழுத்தக் குணம் கொண்ட ஆங்கிலேயக் கூட்டத்தை 
எழுத்துக் குவியலினால் எதிர்த்திட்ட சூரனவன்.
மண்ணை அடகுவைத்து மனதில் கவலையின்றி 
கண்ணை மூடி  கனவில் மிதந்தவரை
விண்ணை முட்டுகிற வீரக் கவிதைகளால்  
எண்ணித் தெளியவைத்து எழுச்சி அடைய வைத்தான்.

 எத்தனை இளைஞர் கூட்டம் இன்னுயிர் நீத்தனர் 
அத்தனையும் சரித்திரம் அப்படியே மறைத்ததன்றோ ?

ஏந்திய கொள்கைக்காக இறந்திட்ட பேரை மறந்து 
காந்தியும் நேருவும் தான் கட்டினர் சுதந்திரம் என்றும் 
பாரத சுதந்திரம் எங்கள்  பாட்டனால் வந்ததென்றும் 
நாரத கூட்டமொன்று இன்று நாட்டிலே குதிக்கிறது. 

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமது  நடந்ததென
புத்தியில்லாத சிலர் புலம்பித் திரியலாம்.

                                                                   - சிவகுமாரன் 


(15.08.1988 அன்று என் 18 வயதில்  ஆலங்குடி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய சுதந்திர தின விழாவில்  - கவிஞர் சுந்தரபாரதி தலைமையில்.நான் ஏறிய முதல் கவியரங்க மேடையில் - வாசித்த கவிதையின் ஒரு பகுதி )

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

கடவுளே


கவிதை எழுத முயன்று
கண்ணீர் தான் வந்தது.
வற்றிய மார்பில்
வாய் வைத்த
குழந்தை போல்.


செவ்வாய், ஜூலை 02, 2013

தாகம்

மண்ணின் தாகம் வானம் கொட்டும்
  மழையில் தணிகிறது.
விண்ணின் தாகம் வீணாய்ப் போகும்
  கடலைக் குடிக்கிறது
.
அலைகளின் தாகம் கடலை விட்டு
  கரைக்கு அலைகிறது.
தலைவனின் தாகம் தொண்டன் சிந்தும்
  குருதியில் தணிகிறது.

ஏழையின் தாகம் எதிர்ப்பவன் முன்னே
  எங்கோ போகிறது
கோழையின் தாகம் நீரைக் கண்டும்
  குடிக்க மறுக்கிறது

நீரின் தாகம் பள்ளம் தன்னை
  நோக்கிப் பாய்கிறது.
வேரின் தாகம் வேண்டிய மட்டும்
  பூமியைப் பிளக்கிறது.

சிப்பியின் தாகம் சிறுதுளி வாங்கி
  முத்தாய் ஆகிறது.
சிற்பியின் தாகம் சிதைந்த கல்லை
  சிலையாய்ச் செய்கிறது.

நடிப்பவன் தாகம் கைகள் தட்டும்
  ஓசையில் தணிகிறது.
குடிப்பவன் தாகம் குடலைக் கருக்கி
  குழியில் சாய்க்கிறது.

கவிஞனின் தாகம் கற்பனை கொஞ்சும்
  கவிதையில் தணிகிறது.
புவியே ஒருநாள் தாகம் கொண்டால்
  பிரளயம் நடக்கிறது  .


                                                                 
-சிவகுமாரன் 
1986 கவிதை எழுதிப் பழகிய காலம் .

சனி, ஜூன் 01, 2013

காதல் வெண்பாக்கள் 38




கனிக்குள்  நுழையும் கருவண்டாய், பச்சைப்
பனிப்புல் நுகரும் பகலாய் - இனிக்கும்
அதரம் சுவைத்தேன்! அடடடா ! வேண்டாம்
இதர சுவைகள் இனி .




இனிக்கும் அவளின் இதழ்சுவைத்த பின்னே
எனக்கென்ன வேண்டும் இனிமேல் - மணக்கும்
அறுசுவை இன்பங்கள் ஆகுமோ அந்த
இறுகிய முத்தத்திற்கு ஈடு?


சிவகுமாரன் 


திங்கள், மே 13, 2013

காய்ச்சியெடுத்த கவி


கரடுமுரடான
கொடுஞ்சிறையில்
கட்டுண்டு கிடக்கிறது
கவனிப்பாரன்றி
கவிதை.

எப்போதாவது
தட்டுத் தடுமாறி
தலைகாட்ட நினைக்கையில்
இழுத்து நிறுத்தி விடுகிறது
இரும்புக்கரம் கொண்ட
இடைஞ்சல்கள்..

மீறிஎழும் போதெல்லாம்
சீறி விழுகிறது
பொங்கிய பாலில்
தெளித்த நீராய்
வாழ்க்கை.

ஆரவாரம்  இல்லாமல்
அடங்கிப் போனாலும்
காலம் கனியுமெனக்
காத்திருக்கிறது
சுண்டக் காய்ச்சியக்
கவிதையொன்று.


சிவகுமாரன் 

புதன், மே 01, 2013

வரட்டுமே வறட்டு"மே"



வியர்வைத் துளிகளால்
நிரம்பி வழிகிறது
கோப்பை.

தொழிற் சங்கங்களில்
தோண்டத்  தோண்ட
தங்கச் சுரங்கங்கள்.

சிவகாசி முழுக்க
சிவப்புப் புரட்சி தான்.
பட்டாசும்  இரத்தமுமாய்  .

அழகருக்குத் திறந்த
வைகைத் தண்ணீர்
வயிறு கழுவுமோ ?

விடுமுறை, ஒய்வு
பென்சன், பி.எஃப்
அம்மாவுக்குண்டா ?

மே  ஒண்ணு
ஏப்ரல் ஒண்ணு
எல்லாம் ஒண்ணு.

சிவகுமாரன் 


செவ்வாய், ஏப்ரல் 23, 2013

நிழல் உறவுகள்


இத்தனை நேரம் 
என்னைத் தொடர்ந்த
நிழல் 
இருட்டில் மட்டும் 
எங்கே போனது?

காலையில் குறுகி
மாலையில்  நீண்டு 
மாயாஜால 
வித்தைகள் காட்டி 
மண்ணில் புழுதியில் 
படுத்துப் புரண்டு 
காலுக்குக் கீழே 
கடனே என்று 
போகும் இடமெல்லாம் 
பின்னே  தொடர்ந்த
எந்தன் நிழல் 
எங்கே போனது?

இருட்டில் எங்கோ 
ஒளிந்து கொண்டு 
வெளிச்சத்தில்  நிழலின் 
வேலை  என்ன ?

பட்டப் பகலில் 
பயணத் துணை 
யார் கேட்டது?

இருட்டு வழியில் 
பயணம் போகையில் 
குருட்டு விழியே 
வழித்துணை ஆகையில் 
எங்கே போனது 
எந்தன் நிழல் ?


இத்தனை நேரம் 
என்னைத் தொடர்ந்த நிழல் 
இருட்டில் மட்டும் 
எங்கே போனது?

சிவகுமாரன் 
1988 கல்லூரிக் காலம் 

ஞாயிறு, மார்ச் 31, 2013

காதல் வெண்பாக்கள் 36



எப்போது இளகும் இரும்பு இதயமடி?
அப்போது இருப்பேனோ ஆரறிவார் ? - இப்போதே 
வந்தென்னைப் பார்த்தால் வரலாறு மன்னிக்கும்.
முந்திக்கொள் காலனுக்கு முன்.

உனக்காக ஏங்கி உயிர்துடிக்கக் காத்து
கணக்கின்றி போனதடி காலம் - பிணக்காட்டில்
நொந்து விழுந்து நெருப்புக் கிரையாகி
வெந்து மடியும்முன் வா!

சிவகுமாரன் 


வெள்ளி, மார்ச் 22, 2013

தேறாத் தேடல்


தூக்கத்தில் மட்டும் சுகங்கண்டு, நாட்களைப்
போக்கிக் கழித்து பொழுதெல்லாம் - ஏக்கத்தில்
வாடுதல் மட்டுமா வாழ்க்கை ? இனிவேண்டும்
தேடுதல் இல்லாத் தினம்.

தினமொரு போராட்டம், தேயும் இளமை
கனவினில் மட்டும் களிப்பு - மனதினில்
மாறா வடுக்கள் , மகேசா இனிநானும்
தேறாமல் போவேனோ தீர்ந்து?



-சிவகுமாரன் 
22.03.2013

திங்கள், மார்ச் 04, 2013

பாவிகளை மன்னிப்பாய்.



புலிக்குப் பிறந்தவனே, போர்க்களத்தில் சிறைபட்டு
எலிக்கு கருவாடாய் இட்டதைத் தின்றாயோ?

 இனங்காத்த தந்தை இல்லாது போனதனால்
பிணந்தின்னிப் பேய்தந்த பிஸ்கட்டை தின்றாயா?

வஞ்சக உலகில் வாழ வேண்டாமென
நெஞ்சிலே தோட்டாக்கள் நீ-வாங்கி னாயா?

நீயுறங்க தாலாட்டு நின்அன்னை இசைப்பதற்கு
பீரங்கி முழக்கங்கள் பின்னணியாய் கேட்டதடா

வீட்டோரம் வெடிகுண்டு வேலியெல்லாம் துப்பாக்கி
தோட்டாக்கள் எல்லாம்நீ தொட்டுவிளை  யாடியவை

ஒரு தோட்டா போதாதா உன்னைக் கொல்வதற்கு
மறுபடியும் சுடடா வென மார்பைக் காட்டினாயா ?

" அப்பா" வென  அலறியதால்  அச்சமுற்று சிங்களவன்
அப்பாவி உன்னை ஐந்துமுறை சுட்டானோ ?

வளர்ந்தால் தந்தைபோல் வரலாறு படைப்பாயென
மலர்ந்ததும் கொன்றாரோ மாபாவிக் கோழையர்கள்

தின்னக் கொடுத்து தீர்த்துக் கட்டியவன்
என்ன பிறப்போ இழிகுலத்து நாய்ப்பிறப்போ ?

சிறுபிள்ளை உனைக்கொன்ற சிங்களவன் நிச்சயமாய்
ஒருதந்தை விந்தணுவில் உதித்திருக்க வாய்ப்பில்லை
                                            ********
இறக்கும் தருவாயில் என்ன நினைத்தாய் ?
பிறப்பேன் மறுபடி பிரபாகரனாய்  என்றா ?

கட்டிச் சுடுகின்ற கருங்காலி நாய்களே
கட்டவிழ்த்து கொடுங்கடா கைத்துப்பாக்கி என்றா?

வங்கக் கடலோரம் வாழும் உறவுகள்
எங்கே போயின இந்நேரம் என்றா ?

புத்தமதப் பேய்களுடன் போர்க்காமம் கொண்டிருந்த
ரத்த உறவுகளின் ரகசியம் அறிந்தாயோ ?

கொலைக்களத்தில் உறவெல்லாம் குற்றுயிராய்க் கிடக்கையிலே
தலைக்கு முக்காடிட்ட தலைவர்களை நினைத்தாயோ?

உடன்பிறப்பே என்று உருகித் தவித்தவர்கள்
கடன்பிறப்பு  என்று கைவிட்டது அறிந்தாயோ?

எப்போதும் நம்பாதே எங்கள்  தமிழினத்தை
ஒப்பாரியைக் கூட ஓசையின்றிப் பாடுவோம்யாம்

கொன்று குவித்தவனை குலவே ரறுத்தவனை
ஒன்றுமே செய்யாமல் ஊமையாய் நிற்கின்றோம்.

கொலைகாரப்  பாவிக்கு கூட்டிக் கொடுத்தவரை
தலையாட்டிப் பொம்மைகளை தலைவரென துதிக்கின்றோம்

கூலிக்கு மாரடிக்கும் கூட்டங்கள் வடிக்கின்ற
நீலிக் கண்ணீரை நிஜமென்று நம்புகிறோம்.

இரக்கமின்றி உனைக்கொன்ற ஈழத்துப்  பேய்க்கெதிராய்
உரக்கப்  பேசுவோரில் உத்தமர்கள் யாருமில்லை.

உன்படத்தைப் போட்டு ஓட்டு வாங்க எண்ணுகிற
சின்னபுத்திக் கூட்டம் தான் சிலிர்க்கிறது வேடமிட்டு.

அமெரிக்கத் தீர்மானம் ஆர்ப்பாட்டம் கண்டனங்கள்
திமிர்கொண்ட பக்ஷேயை தீண்டாது அணுவேனும் .

ஆயுதம் விற்பதற்கும் அடக்கி ஆள்வதற்கும்
பாய்கிறது கண்டனங்கள் பச்சைத் தே....த்தனங்கள்.

உன்னினத்தில் ஓர் தலைவன் உதிக்கின்ற நாள்வரையில்
என்னதான் கதறினாலும் எதுவும் நடக்காது.
                                   **********
நிலைகுலைந்து நிற்கின்றோம் நீகிடக்கும் நிலைகண்டு
தலைகுனிந்து நிற்கின்றோம் தமிழராய்ப் பிறந்ததற்கு.

காலம் கடந்து கண்ணீர் வடிக்கின்றோம்
பாலச் சந்திரா பாவிகளை மன்னிப்பாய்.

-சிவகுமாரன் .

(சென்ற வருடம் குமுறியது உன்னை எப்படி மன்னிப்போம் )