ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

எங்கள் ஆடுகளத்தில் உங்கள் கோழிகள்.



கட்டை விரலை அல்ல.
ஏகலைவனையே
காவு கேட்கிறீர்கள்
துரோகித் துரோணர்களே.
உங்கள்
குருச் சேத்திரத்தில்  
நீண்டு கொண்டே 
போகின்றன
நீட்டு கொலைகள்.

முட்டையிடும் போட்டியில்
உங்கள் கோழிகளோடு
எங்கள் சேவல்களை
கலந்து கொள்ளச்
சொல்கிறீர்கள்.

ஓரிரண்டு முட்டைகளை
இட்டும் தொலைக்கின்றன
எங்கள் சேவல்கள்.

இடத் தெரியா இயலாமையில்
தங்களையே
அறுத்துக் கொள்கின்றன
அப்பாவிச் சேவல்கள்.

ஆடுகளம்
எங்களுடையது.
அடை காக்க
வராதீர்கள்
பெட்டைக் கோழிகளே.
                                             -சிவகுமாரன்.