காவடிச்சிந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவடிச்சிந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 16, 2020

காட்டுக்குள்ளே

            
                (காவடிச் சிந்து)

ஓங்கி உயர்ந்து நிற்கும் காடு- அதன்
  உள்ளே சிறியதொரு   வீடு - நீர்
தேங்கிடும் குளத்தருகே
  துள்ளித்துள்ளி மானினங்கள்
  ஓடும்-விளை-யாடும்.

அன்னை நிலத்தின் வளைக் கரங்கள்-போல
  அங்கே வளர்ந்திருக்கும் மரங்கள் -அதன்
சின்ன இலை நடுவே
  சிந்தும் பனித்துளிகள்
  இறங்கும்-வந்து-உறங்கும்.

காய்ந்த இலை மேலிருந்து உதிரும்-சிறு
  காற்றடித்தால் பூமரங்கள் அதிரும்-நீர்
பாய்ந்துவரும் ஒடையினில்
  பால்நிலவும் சூரியனின்
  கதிரும்-பட்டுச்- சிதறும்.

கொட்டும் மழை போன்றதொரு ஊற்றும்-உடல்
  தொட்டுச் செல்லும் தென்பொதிகைக் காற்றும்-தேன்
சொட்டும்பல கீதங்களை
  சொல்லுமொரு பூங்குயிலின்
  பாட்டும்- சுவை- கூட்டும்.

நாட்டுக்குள்ளே பேய்கள் பல கோடி- அவை
  நம்மைத் துரத்தும் முன்னே ஓடி -அந்தக்
காட்டுக்குள்ளே வீடுகட்டி
  காலம் கழித்து வந்தால்
  தொல்லை-ஏதும்-இல்லை.

                                                               -சிவகுமாரன்.




இது ஒரு மீள் மீள்பதிவு. இந்தக் கவிதை 1986 ஆம் ஆண்டு பதினோராம் வகுப்பு படிக்கும் போது எழுதி என் தமிழ் அய்யா திரு.மாரிமுத்து அவர்களால் பாராட்டப் பெற்றது.
34 வருடங்களுக்கு பிறகு ஒரு வகையில் இந்தக் கவிதைக் கனவு பலித்துக் கொண்டிருக்கிறது. ஆம் ஆப்பிரிக்காவின் காட்டுக்குள் கட்டப்பட்டுள்ள வீட்டில் குடி இருக்கிறேன்.:) )  

வெள்ளி, பிப்ரவரி 11, 2011

என்று மலரும் ?







                  
          
    
             (காவடிச்சிந்து)

ஊரைச் சுரண்டித் தின்னும் கூட்டம் - உடல்
  உழைப்பினில் கொள்வதென்று நாட்டம் ? - பணத்
தேரில் பவனிவந்து
  தின்று கொழுப்பவரின்
  ஆட்டம் - என்று - ஓட்டம் ?

சேற்றினிலே கால்கள் வைத்து நடப்பார் - அவர்
  தின்ன உணவுமின்றி கிடப்பார் - பிறர் 
சோற்றைத் திருடித் தின்று
   தொப்பை வளர்ப்பவர்கள் 
    நடிப்பார் - தின்று - வெடிப்பார்

பொத்தல் குடிசைக்குள்ளே வாழும் - ஏழைப்
  பிள்ளை குடிக்க இல்லை கூழும்- அவர்
நித்தம் வறுமையினில் 
   நீந்தும் நிலைமைஎன்று 
   வீழும் - இன்பம் - சூழும் ?

.பத்துமாடிக் கட்டிடத்தில் சிலரும் - வீதிப் 
 பாலம் அதனடியில் பலரும் - இன்னும் 
எத்தனை நாள் வாழ்ந்திருப்பார்  
  இங்குஒரு மாற்றமென்று
  மலரும் - சுகம் - வளரும் ? 
                                      
                                            -சிவகுமாரன்


இந்தக் கவிதையை அய்யா சூரி (சுப்பு ரத்தினம் ) அவர்கள் இனிமையாக பாடி என் கவிதைக்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தைக்  கொடுத்திருக்கிறார்.
நீங்களும் கேட்டு மகிழுங்கள்.