காதல் வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 14, 2017

காதல் வெண்பாக்கள் 56


போகும் உயிரைப் பிடித்திழுக்கும் ! நெஞ்சமது 
வேகும் வரையில் விடாதிருக்கும்! - தேகத்தில் 
பாதியாய் நின்றே பயணிக்கும் காடுவரை !
ஆதலினால் காதல் சுகம்.

ஊரே வெறுத்தாலும் விட்டு விலகாது !
யாரெதிர் வந்தாலும் நின்றெதிர்க்கும் - தீராத 
போதைதான் ஆனாலும் புத்தி பிறழாது !
ஆதலினால் காதல் சுகம். 

சிவகுமாரன்

ஈற்றடி தந்த நண்பர் விஜூ அவர்களுக்கு நன்றி.

வியாழன், ஆகஸ்ட் 25, 2016

காதல் வெண்பாக்கள் 54

                     
     
                   

எனக்குள்ளே நீயும் இருப்பதினால், மோகம் 
தனக்குள்ளே  பேசித் தணியும் - உனக்குள்ளும் 
நானிருக்க என்றும் நலியாது நம்காதல் 
வானிருக்கும் காலம் வரை.


                     

வரைந்தேன் இதயத்தில், வண்ணமாய் நானே 
கரைந்தேன் அதனுள் கலந்து - திறந்தே 
அடிக்கடி பார்த்துநான் ஆறுதல் சொல்வேன் 
துடிக்கும் இதயத்தைத் தொட்டு 

சிவகுமாரன் 


ஞாயிறு, நவம்பர் 15, 2015

காதல் வெண்பாக்கள் 52



வெங்கனலில்  நானிங்கு வெந்தாலும் காப்பதற்கு
பொங்குதடி உன்காதல் பூமழையாய்-அங்கிருந்து
ஈதலினால் இன்னும் இருக்கின்றேன் சாகாமல்
ஆதலினால் காதல் சுகம்.

காட்டுக்குப் போனாலும்  காவலென ஓடிவரும்
கூட்டுக்கு மீண்டுமுனைக் கூட்டிவரும் - வாட்டுகிற
கூதலுக்குத் தீயாகும் கோடைக்கு நீராகும்
ஆதலினால் காதல் சுகம்.

சிவகுமாரன் 

(ஈற்றடி தந்த நண்பர் விஜூ அவர்களுக்கு  நன்றி.)



வெள்ளி, ஜூன் 12, 2015

காதல் வெண்பாக்கள் 50



நினைத்துக் கிடப்பதால் நீளும், விழிநீர்
நனைத்தத் தலையணையின் நாட்கள்-அனைத்தும்
அடங்கும் இரவில் அசையாமல் தூங்கி
முடங்கும் கடிகார முள்.



முள்ளாகக் குத்தும் முகம்தவிர்க்கும் உன்கோபம்!
உள்ளூரச் சிக்கி உணர்வழிக்கும் - சுள்ளென்று
சுட்டெரிக்கும் சொல்லும் சுகமாகும்! நீயென்னை
விட்டு விலகாமல் வீழ்த்து.



வீழ்ந்து  கிடக்காதே வேலிக்குள்! யாருக்கும்
தாழ்ந்து அடங்காமல் தாண்டிவா!-வாழ்ந்து
முடித்தோர்கள் நம்மை முடக்குவார்! காதல்
ஒடித்தால் உடையாதென்(று) ஓது.


சிவகுமாரன்


ஞாயிறு, டிசம்பர் 21, 2014

காதல் வெண்பாக்கள் 47


உன்பாதம் போகும் வழியெல்லாம் பின்தொடர்ந்து
என்பாடல் கேட்குமடி எந்நாளும் - வெண்பாவில்
பாடுகிறேன் உன்னழகை! பாடும் கவியினிலும்
தேடுகிறேன் உன்னைத் தினம்.

தினமுன்னைக் கண்டாலும் தீர்ந்திடாது உன்மேல்
மனங்கொண்ட காதல் மயக்கம் - சினங்கொண்டு
பார்த்தாலும் போதுமடி! பாலை நிலந்தன்னில்
நீர்த்துளிபோல் கொள்வேன் நினைத்து.

சிவகுமாரன் 

சனி, செப்டம்பர் 13, 2014

காதல் வெண்பாக்கள் 45


கவிதை 1

(படத்துக்குக் கவிதை)

பூத்துக் குலுங்குதையா

(வெண்பா அந்தாதி) 

எப்ப வருவீக ? ஏங்கித் தவிச்சிருக்கேன்.
வெப்பப் பெருமூச்சில் வெந்திருக்கேன் - அப்பப்பா
காத்தைப்போல் வந்தீக! கன்னி மனசெல்லாம்
பூத்துக் குலுங்குதையா பூ.

பூக்கூடை தூக்கி புறப்பட்டால், நான்கோர்த்த
பூகூட வாடிப் புலம்புதையா - பூகூட
சேர்ந்திருக்கும் நாராகச்  சேர்ந்து மணம்வீச
தேர்ந்தெடுத்து நாளொன்று சொல்.

சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய் மனம்திருடி!
எல்லாம் இருந்தெனக்கு ஏதுமில்லை - பொல்லாத
காதல் புகுந்து கரைக்குதையா தேகத்தை !
வாதைக்கு வைத்தியமாய் வா!

வாசற் படியெங்கும் வந்திருந்து நீபோன
வாசம் கலந்து வழியுதய்யா - வாசற்
படியாய்த் தவமிருந்து பார்த்திருக்கேன் உன்னை
விடியாப் பொழுதில் விழித்து.

விழித்தால் கனவு விலகுமென  எண்ணி
விழி-தாழ் திறக்கவில்லை வீணாய்! - விழித்து
உனைத்தேடி வாசலில் உட்கார்ந்தேன், ஆனால்
எனைத்தேடி யார்தருவார் இங்கு?

-சிவகுமாரன் 

கவிதை 2
(விருப்பக் கவிதை)

கேட்பாரில்லா  கீதாஞ்சலி 


சலனமற்று ஓடிக்கொண்டிருக்கிறது
நதி.
உருட்டிச் சிதைத்த
கூழாங்கற்களின்
குரலை அமுக்கி.                                        

விண்முட்ட பறக்கிறது.
வெண்ணிறக் கொடி .
குருதிச் சாந்தில்
குழைத்து எழுப்பிய
கம்பத்தின் உச்சியில்.                        

எடுத்து உரச எவருமின்றி
பெட்டிக்குள் கட்டுண்டு
அடுக்கடுக்காய் தீக்குச்சிகள்.
ஒரு
வனத்தையே எரிக்கும்
வன்மத்துடன்.                                        

கூட்டைச் சிதைத்து
விரட்டியடித்த பின்
வேகவேகமாய்
புனரமைப்பு வேலைகள்.
பறவைக்கூட்டில்
பாம்புகளைக்  குடியேற்ற.                  

கிளிகளும் குயில்களும்
கீதாஞ்சலி இசைக்கின்றன.
கேட்பாரற்றும்
கிளைகளற்றும்!                                      

ஒப்பாரிப் பாடலில்
ஒளிந்து கொண்டிருக்கிறது.
ஓர் அறைகூவல்.                                            
சிவகுமாரன் 

காதல் வெண்பாக்கள் 45

சனி, மே 24, 2014

காதல் வெண்பாக்கள் 40


பேர்த்தெடுத்துச் சென்றதடி உன்பிரிவு நெஞ்சத்தை 
வார்த்தை இழந்ததடி வாயிதழும் - பார்த்துப் 
பழுதாகிப் போனதடி பார்வை ! தினமும் 
அழுதநீர் ஆனதடி ஆறு.



ஆறாத் துயராய்  அகலா நெடுங்கனவாய்
மாறா வடுவாய் மனதுக்குள் - சூறா 
வளியாய்ப் புகுந்து வலுவாய்ப் புரட்டி 
வலியாய்  நிறைந்தாய் வதைத்து.
-சிவகுமாரன் 

சனி, ஜூன் 01, 2013

காதல் வெண்பாக்கள் 38




கனிக்குள்  நுழையும் கருவண்டாய், பச்சைப்
பனிப்புல் நுகரும் பகலாய் - இனிக்கும்
அதரம் சுவைத்தேன்! அடடடா ! வேண்டாம்
இதர சுவைகள் இனி .




இனிக்கும் அவளின் இதழ்சுவைத்த பின்னே
எனக்கென்ன வேண்டும் இனிமேல் - மணக்கும்
அறுசுவை இன்பங்கள் ஆகுமோ அந்த
இறுகிய முத்தத்திற்கு ஈடு?


சிவகுமாரன் 


ஞாயிறு, மார்ச் 31, 2013

காதல் வெண்பாக்கள் 36



எப்போது இளகும் இரும்பு இதயமடி?
அப்போது இருப்பேனோ ஆரறிவார் ? - இப்போதே 
வந்தென்னைப் பார்த்தால் வரலாறு மன்னிக்கும்.
முந்திக்கொள் காலனுக்கு முன்.

உனக்காக ஏங்கி உயிர்துடிக்கக் காத்து
கணக்கின்றி போனதடி காலம் - பிணக்காட்டில்
நொந்து விழுந்து நெருப்புக் கிரையாகி
வெந்து மடியும்முன் வா!

சிவகுமாரன் 


திங்கள், ஜூலை 23, 2012

காதல் வெண்பாக்கள் 34

     

     

          வலை 

தலைகால் புரியாமல் 
  தள்ளாடிக் காதல்
வலையில் விழுந்தேன் 
  வகையாய் - மலைமேல்
விளக்காய் இருந்தயென் 
  வாழ்க்கையில் ஏதும்
இலக்கின்றி போனதடி 
  இன்று.



         


                      நிலை 


இன்றைக்கோ நாளைக்கோ
   என்றைக்கு  தீருமடி
கொன்று புதைக்குமுன்
   கோபங்கள்? - நன்றாய்
வதைக்கின்றாய் என்னைநீ, 
  வாட்டும் பிரிவில்
பதைக்கின்ற என்னிலையைப் 
  பார்த்து.



வெள்ளி, மே 18, 2012

காதல் வெண்பாக்கள் 32



அபாயம்

என்னைக் குருடாக்கி ஈர்க்கும் இருவிழிகள்!
மின்னல் தெறித்தாற்போல் முத்துப்பல்!-கன்னத்தில்
தப்பிப் பிழைக்கத் தகையின்றிச் செய்தென்னைக்
குப்புறத் தள்ளும் குழி.








அபயம்

காற்றில் பறக்கும் கருங்கூந்தல்! செங்கரும்புச்
சாற்றாய் இனிக்கும் செவ்விதழ்"கள்" - மாற்றுக்
குறையாத பொன்மேனி கொண்டென்னைத் தாக்கி
சிறையிட்டாள் மெல்லச் சிரித்து.




-சிவகுமாரன்

திங்கள், ஏப்ரல் 09, 2012

காதல் வெண்பாக்கள் 30

    இரண்டிலொன்று


மொட்டமாடி மீது
முழித்துக் கிடக்கின்றேன்.
விட்டத்தை நோக்கி
வெறிக்கின்றேன் -கட்டழகில்
கட்டுண்டு நான்கிடந்து
காலம் கழிக்கின்றேன்
வெட்டொன்று துண்டிரண்டு
சொல்.


    இரண்டுமொன்று


ஏதேனும் ஒன்றெனக்கு
இப்போதே சொல்லிவிட்டால்
பாதையினை மாற்றி
பயணிப்பேன் - வேதனையில்
எத்தனைநாள் நானிருப்பேன்
இப்படியே ? பேசாமல்
செத்துத் தொலைக்கலாம்
சே.




( மற்ற காதல் வெண்பாக்களையும் காணஇங்கே சொடுக்கவும் )

புதன், மார்ச் 07, 2012

காதல் வெண்பாக்கள் 28




உன்னுள் மறைவாய்
   ஒளிந்திருப்ப தென்னடி?
என்னுள் இருப்பதும்
   என்னவோ ?- இன்னும்
ரகசியங்கள் தேடவைத்து
   லட்சியங்கள் எல்லாம்
தகர்த்தாய் .நியாயமா
     சொல்








சொல்லாமல் கொள்ளாமல்
   சொந்தமாக்கிக் கொண்டாயே
எல்லாம் தனதென்று
   என்னைநீ !- வில்லாய்
வளைக்க நினைக்கின்றாய் .
   வாழ்க்கை உனக்கு
விளையாட்டுப் பொம்மையா
   சொல். 











திங்கள், டிசம்பர் 19, 2011

காதல் வெண்பாக்கள் 26

 அடைமழைக் காலம்
  அடிக்கும் வெயிலாய்
கொடைக்கானல் காலைக்
  குளிராய் - மடைதிறந்த
வெள்ளத்தைக் கண்ட
  விளைநிலமாய் நீயென்னை 
தெள்ளத் திருடிய 
       தீ .




தீபுகுந்த முட்காடாய்                       
  தீய்ந்தெரியும் என்வாழ்வில்
நீபுகுந்தாய் வெள்ளமென
  நீர்சுமந்து ! - கோபுரத்தின்
உச்சியினில்   வீசும்
  ஒளியாய் நுழைந்திட்டாய்
குச்சுக் குடிலில்
   குனிந்து.


சிவகுமாரன் 

புதன், நவம்பர் 09, 2011

காதல் வெண்பாக்கள் 24

        விருந்து  

உந்தன் விழியிரண்டும்
  ஒர்கோடி பண்சொல்ல  
சிந்தும் கவிதை
  சிறப்பாகும் - எந்தன்
புலமைப் பெரும்பசிக்கு
  பேய்த்தீனி போடும்
நிலவுக்கு நீயே
    நிகர்.  

         


           மருந்து

உன்நினைவை நெஞ்சுக்குள்
  ஒட்டவைத்துக் கொண்டதனால்
என்நினைவு கூட
  எனக்கில்லை - என்னஇவன்
பைத்தியமா என்றுதான்
  பார்த்தவர்கள் கேட்டார்கள்
வைத்தியமாய் நீயிங்கே
               வா.


திங்கள், ஜூலை 18, 2011

காதல் வெண்பாக்கள் 22

          மாப்பு

பாதை தடுமாறும்   
  பார்வை வழிமாறும்
போதை தலைக்கேறும்,
   போடா,போ- காதல்
தொடங்கிற்றா ? போயிற்றா 
  தூக்கம் ? இனிமேல்
அடங்கப்பா நீயும் 
   அடங்கு .


           ஆப்பு

அம்மா உனக்கினி 
   அ​​​​​ந்நியம் ஆகிடுவாள்
சும்மா வரும்கோபம் 
   சுர்ரென்று - தம்மால்
முடிந்தவரை பொய்சொல்வாய், 
   மோகம் தொடங்கிற்றா
அடித்தாய் உனக்கேநீ 
   ஆப்பு.

வெள்ளி, ஜூன் 17, 2011

காதல் வெண்பாக்கள் 20


          கதி 

பேசிச் சிரித்து
   பெருங்காதல் தூண்டிலிட்டு
ஆசை மனதை
   அபகரித்தாய் - வீசிச்
சுழற்றும் விழியில்
   சுடர்காட்டி உள்ளம்
கழற்றினாய் நீயே
         கதி.






            விதி 
ஆவி துடிக்குதடி 
   ஆருயிரே நீயின்றி.
பாவி எனைக்கொஞ்சம் 
   பாரடி - தாவிக் 
குதித்துத் திரிந்தவனைக் 
   கூப்பிட்டுக் காதல் 
விதிக்குள் விழவைத்தாய் 
             நீ.         


சனி, மார்ச் 26, 2011

காதல் வெண்பாக்கள் 18

           செய்வினை 

உனக்கென்ன என்மேல்
   ஒருபார்வை வீசி 
எனக்கென்ன என்று 
   இருந்தாய்- கணக்கின்றி 
நான்தானே உன்நினைவில்   
   நாளைக் கழிக்கின்றேன் .
வீண்தானோ எந்தன் 
    விதி ?  
  

      
         பயனிலை

பார்வையில  ஒன்றுமில்லை 
   பாவிப் பயமக்கா 
ஆர்வமில்லை உன்மீது 
   ஆளைவிடு - தேர்வெழுதி 
பாஸாகப் பாரப்பா 
   வீணாய் அடிவாங்கி 
பீஸாகிப் போகாதே 
     போ .
   

ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

காதல் வெண்பாக்கள் 16

                         முத்திரை

              அங்கிருந்து நீயனுப்பும்
                    அஞ்சலுறைக் குள்தேடி
              எங்கேயும் இல்லையடி
                    இன்பங்கள் - இங்கெனக்கு
              முத்தங்கள் சேர்ந்துபோய்
                    மூச்சிரைப்பு வாங்குதடி
              இத்தோ  டிணைத்துள்ளேன்
                                  இச்



                     கடித்தம் 


           கிடைத்தது உங்கள்
               கிறங்கிய முத்தம்
           அடைத்துத் திணித்திருந்த
                அஞ்சல் - எடைக்கு 
           எடைதருவேன் முத்தங்கள்
                இங்குவந்தால்- கொஞ்சம்
           அடக்கி இருந்திடுங்கள்
                             அங்கு.


      

ஞாயிறு, டிசம்பர் 26, 2010

காதல் வெண்பாக்கள் 14


        மண்ணிலா ?

தரையில் இறங்கிவந்த
  தங்கநிலாக் கீற்றே
கரைகாணா இன்பக்
  கடலே - விரைந்தோடி
வாராயோ வான்மதியே
  வந்தென்றென்     வாழ்வோடு
சேராயோ என்னுயிரே
     சொல்.



                                        
     
        வெம்-மைவிழி 

பூதொட்டுப் போகும்
    பொதிகைபூந் தென்றலென 
நீதொட்டுப் போக 
    நினைத்திருந்தேன் - தீதொட்ட 
கைவிரலில் பட்டதொரு 
    காயமென உன்பார்வை 
மைவிழியே பட்டதுஎன் 
            மேல்.