வெள்ளி, மே 11, 2012

அகம்-புறம் விளம்பரம்

காந்திஜி நேருஜி
நேதாஜி ராஜாஜி
படிச்சாச்சு மறந்தாச்சு
வந்தாச்சு வந்தாச்சு
2G 3G.

காமாராஜர் ஈ.வெ.ரா,
கக்கன் ஜீவா
எல்லோரும் சும்மா
நேர்மைன்னா " ஹமாம்"

கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே
ஆசை அறுமின்
எழுமின் விழிமின்
அன்பே சிவம்
அச்சம் தவிர்
கேட்டது போதும்
கெட்டது போதும்
கேளுங்க கேளுங்க
கேட்டுக்கிட்டே இருங்க
சூரியன் FM 93.5

பஸ் கட்டணம் உயர்வு
பால்விலை ஏற்றம்
கல்விக் குளறுபடி
கரண்டுக்கு அடிதடி
எல்லாம் "கூல்"
ரேடியோ மிர்ச்சி
செம "ஹாட்" மச்சி.


தன்னம்பிக்கை உழைப்பு
நேர்மை திறமை
எல்லாம் தூக்கி
குப்பையில போடு
ஃபேர் & லவ்லி அள்ளிப் பூசு.
ஆறே வாரத்தில்
சிவப்பாகிக் காட்டு
அத்தனை பேரையும்
ஜெயித்துக் காட்டு.


குடல் கருகுது
குண்டி காயுது
உழைக்கும் தோழர்களே
ஒன்று கூடுங்கள்.
உரிமைப் போராட்டம்
உரக்க அழைக்குது
கல்யாண் ஜூவல்லர்ஸ்.


சத்யம் சிவம் சுந்தரம்.
சர்வம் -மீடியா -விளம்பரம்.

-சிவகுமாரன்

சனி, மே 05, 2012

ஹைக்கூ முத்தங்கள் 55



சில்லென்று வீசும்
சிறுமழைத் தூறல்
இயற்கையின் முத்தம்.









காதுகளை வருடும்
காற்றின் இதழ்கள்
இசையின் முத்தம்.












தெளிவின் கதவை
திறக்கும் சாவி
அறிவின் முத்தம்.










இருட்டு மாட்டை
விரட்டும் சாட்டை
ஒளியின் முத்தம்.









இருப்பின் கதவை
இறுக்கும் பூட்டு.
சாவின் முத்தம்.






-சிவகுமாரன்

நன்றி:
ஈற்றடி கொடுத்து எழுதத் தூண்டிய அப்பாத்துரைக்கு

இன்னும் முத்தங்கள் பெற இங்கே செல்லவும்.

செவ்வாய், மே 01, 2012

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 6

              வாமனர்கள்
                வாமனர்கள்
             வாமனர்கள்
       வாமனர்கள்
 வாமனர்கள்






வீரியம் மிக்கதோர் வீரக் கவிதையால்
காரிருளை நாமே களைந்தெறிவோம் - சூரியனை
எட்டிப் பிடிப்போம்! எமக்கந்த வானகமே
தொட்டுவிடும் தூரத்தில் தான்.






நந்தமிழ் தன்னை நசுக்கும் கயவரை
நிந்தனை செய்வோம் நெருப்பாகி - செந்தமிழை
விற்போரின் கூட்டம் வெருண்டோடும் எங்களது
முற்போக்குக் கொள்கையின் முன்.

வானுலகத் தேவனுக்கு வாழ்த்துப்பா பாடாமல்
மானுடத்தைப் பாடவந்த மாகவிகள் - சாணுடம்பு
வாமனர்கள் நாங்கள் வளரத் தொடங்கினால்
மாமலையும் எம்முன் மடு.

                                -சிவகுமாரன்



( 01.05.1998 புதுகை த,மு.எ.ச மாவட்ட மாநாட்டில் பாடப்பெற்ற கவிதை.)

வெள்ளி, ஏப்ரல் 20, 2012

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே

தலைவன் என்றதும்
துரோகமும் செல்வமும்
தொண்டன் என்றதும்
தியாகமும் ஏழ்மையும்

உணர்வு என்றதும்
மரத்தலும் மறத்தலும்
உரிமை என்றதும்
மறுத்தலும் மீறலும்

தோழி என்றதும்
துரத்தலும் சேர்தலும்
தோழர் என்றதும்
சேர்தலும் துரத்தலும்

ஈழம் என்றதும்
இனமும் பிணமும்
ஈரம் என்றதும்
மனமும் பணமும்

குழப்பம் என்றதும்
போயஸ்கார்டனும்
குடும்பம் என்றதும்
கோபாலபுரமும்.

தேர்தல் என்றதும்
வாக்கும் நாக்கும்
ஆட்சி என்றதும்
கொள்கையும், கொள்-கையும்.

அரசியல் என்றதும்
தஞ்சமும் லஞ்சமும்
அனுபவம் என்றதும்
ஆடலும் அடங்கலும்.

ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே

திங்கள், ஏப்ரல் 09, 2012

காதல் வெண்பாக்கள் 30

    இரண்டிலொன்று


மொட்டமாடி மீது
முழித்துக் கிடக்கின்றேன்.
விட்டத்தை நோக்கி
வெறிக்கின்றேன் -கட்டழகில்
கட்டுண்டு நான்கிடந்து
காலம் கழிக்கின்றேன்
வெட்டொன்று துண்டிரண்டு
சொல்.


    இரண்டுமொன்று


ஏதேனும் ஒன்றெனக்கு
இப்போதே சொல்லிவிட்டால்
பாதையினை மாற்றி
பயணிப்பேன் - வேதனையில்
எத்தனைநாள் நானிருப்பேன்
இப்படியே ? பேசாமல்
செத்துத் தொலைக்கலாம்
சே.




( மற்ற காதல் வெண்பாக்களையும் காணஇங்கே சொடுக்கவும் )

ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

மறதி நல்லது .





முல்லைப் பெரியாற்றில்
மூழ்கிப் போயின
பாவப்பட்ட பயணிகளை
பாதி வழியில் இறக்கிய
கட்டணம் உயர்ந்த
பேருந்துகள்


கூடங்குளத்தில்
வெடித்துச் சிதறின
இரு வேளை தேநீரை
ஒருவேளை ஆக்கிய
பால் பாக்கெட்டுகள்.


தானே புயலில் தரை மட்டமாகின
கோடிகளை விழுங்கிய
தலைமைச் செயலகமும்.
கோர்ட்டுக்குப் போன
நூலகமும்.


முப்பதாண்டு கால
தோழியின் பிரிவில்
மறந்தே போயின
அடித்த கொள்ளையும்
அனுபவித்த சிறையும்.


ஏற்றிய விலையையும்
இம்சை அரசையும்
இடைத் தேர்தல் தீர்ப்பளித்து
ஏற்றுக் கொண்டார்கள்
இனிய தமிழ் மக்கள்.


அசைக்க முடியாதினி
அம்மாவை யாரும்.


இன்னும் கூட
ஏற்றலாம் விலையை
கல்லா கட்டலாம்
கஜானா(!?) நிரப்பலாம்


மக்கள் கிளர்ந்தால்
மறக்கடிக்க
மவிவாய் கிடைக்குது
மருந்துகள் ஆயிரம்.


மாதமிருமுறை
மந்திரிசபை மாற்றலாம்.
தீய சக்தியைத்
திட்டித் தீர்க்கலாம்.
துரத்தியடித்த
தோழியோடு கூடலாம்.
இலங்கை நெருப்பில்
எண்ணெய் ஊற்றலாம்
இன்னும் கொஞ்சம்
இலவசம் தரலாம்.
குடிசையில் கொடுத்து
குடிக்கவைத்து பிடுங்கலாம்.


கொள்கைகள், கூட்டணிகள்
அமைச்சர்கள், அடிமைகள்
தொண்டர்கள் , தோழர்கள்,
அறிக்கைகள், பேச்சுகள்,
பூஜைகள், பரிகாரங்கள்,
கோடிகள் மோடிகள்,
கணிப்புகள் ,பணிக்கர்கள்,
"சோ"க்கள் , ஜோக்கர்கள்

ஆயிரம் இருந்தாலும்
அடுத்த தேர்தலுக்கு
அம்மா நம்புவது
"அம்னீசியா"வைத் தான்.


                                                  -சிவகுமாரன் 

சனி, மார்ச் 31, 2012

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 5

நாவினில் நீயே தந்த நற்றமிழ் கவிதை உண்டு.
  நடக்கின்ற பாதை தோறும் ஞானவேல் ஒளியும் உண்டு.
ஆவியில் கலந்த அப்பன் அஞ்செழுத்து மந்திரம் உண்டு 
   அஞ்சாதே என்று சொல்லும் அன்னையின் சக்தி உண்டு.
கோவிந்த மாமன் பாதம் கூவி நான்  தொழுவதுண்டு 
   கோவில்கள் பலவும் சென்று கும்பிட்டு அழுவதுண்டு  
பூவினில் உறைவாள் அருள்தான் போதாத குறையும் உண்டு.
   பொன்மகள் மாமியிடம் நீ போய்ச் சொன்னால் புண்ணியம் உண்டு.

திரைகடல் மணலைப் போலே தீராத செல்வம் வேண்டும்.
  தேடிப்போய் தர்மம் செய்து, தீவினை போக்க வேண்டும். 
கரைதேடிக் களைத்துப் போகா, கடல்அலை போல நானும்  
 காலங்கள் தோறும் உந்தன் கருணையைப் பாட வேண்டும் .
இரைதேடி தேடித் தேடி எஞ்சியது ஒன்றும் இல்லை .
   எத்தனை காலம் இன்னும் ஏங்கிட வைப்பாய் அய்யா ?
நரைகூடிக் கிழடாய் ஆகி நரம்பெலாம் தளரும் முன்னே,
   நான்கொண்ட கடமை தீர்க்க நல்லருள் செய்வாய் அய்யா.
   
இரும்பென தேகம் வேண்டும் இளகிடும் இதயம் வேண்டும்
   இருக்கின்ற காலம் வரையில் இடரிலா வாழ்க்கை வேண்டும்
அரும்பிடும் மலரின் இதழாய் அணைக்கின்ற சுற்றம் வேண்டும்.
   அகிலமே எதிர்க்கும் போதும் அகலாத நட்பு வேண்டும் .
கரும்பென இனிக்கும் தமிழின் கற்கண்டு சொற்கள் வேண்டும்
  கந்தாஉனைப் பாடும் பாடல் காலத்தை வெல்ல வேண்டும்
வரும்போது மரணம் தன்னை வரவேற்கும் உள்ளம் வேண்டும்
   வையத்தில் மற்றோர் பிறவி வாராத வரமும் வேண்டும். 

-சிவகுமாரன் 


( 06 .02 .2012 பழனி பாதயாத்திரையின் போது எழுதியது.)
  

திங்கள், மார்ச் 19, 2012

உன்னை எப்படி மன்னிப்போம் ?






அய்யா அரசியல் வாதிகளே -எமை
   ஆளும் காங்கிரஸ் கபோதிகளே
பொய்யாய் இராஜப் பிச்சையன்
  போடும் வேடம் பார்த்தீரா ?
அய்யோ ! எங்கள் இனந்தன்னை
   அழிக்கும் காணொளி பார்த்தீரா ?
மெய்யாய் உமக்கு கண்ணிலையா?-உன்
   மேனியில் சிறிதும் கொதிப்பிலையா ?


போய்ப் பார்த்தாயா இலங்கைக்கு -நடந்த
  போர் பார்த்தாயா இனவெறிக்கு ?
நாய்போல் தமிழர் சுடப்பட்டு
  நாறிக் கிடந்ததை அறியாயோ ?
வாய்பே சாமல் துயர்கண்டும்
   வாளா திருக்க நீயென்ன
தாய்ப்பால் குடித்து வளர்ந்தாயா - இல்லை
   தப்பிப் பிறந்த தெருநாயா ?


திட்டம் போட்டு நம்மினத்தை
   தீர்த்துக் கட்டிய தறியீரோ ?
கட்டிப் போட்டு சுடுகின்ற
  காட்சிகள் கண்டும் பதறீரோ ?
சட்டம் உங்கள் கையிருக்க
  சதியில் உமக்கும் பங்கிருக்க
வெட்டித் தனமாய் யாமிங்கே
   வெம்பிப் புலம்பி என் செய்ய ?

இனத்தை அழித்த இலங்கைக்கு
  எதிராய் சாட்சிகள் பலவிருக்க
பிணங்கள் தின்னும் "பக்க்ஷே"க்கு
  பேரா தரவு நீ தருகின்றாய் .
கனவிலும் நுழைந்து கருவறுத்த
  "கை"களில் இரத்தக் கறையோடு
மனதினில் எந்தத் துணிவோடு
  மறுபடி வாக்குக் கேட்பாய் நீ ?

நாட்டைப் பிடித்த சனியன் நீ -உனை
  நம்பிக் கேட்டது போதுமினி
ஓட்டுக் கேட்டு மறந்தும் நீ
  ஊருக்குள்ளே நுழையாதே
போட்டு மிதிப்போம் தறிகெட்டு -உனை
  புரட்டி எடுப்போம் வெறிகொண்டு
ஆட்டிக் கொண்டினி வாராதே - நாவை
   அறுத்து எறிவோம் மறவாதே .


ஓட்டுப் பொறுக்கி நீயென்பேன்- எங்கள்
  உதிரம் குடிக்கும் பேயென்பேன்
காட்டிக்  கொடுத்த குலமென்பேன்- நீ
   காட்டு நரியின் இனமென்பேன் .
ஊட்டி வளர்த்த தாய்தன்னை -எட்டி 
   உதைக்கும்  உதவாக் கரையென்பேன்  
கூட்டிக் கொடுத்த பிறப்பென்பேன்- அந்தக்
   குணமே உந்தன் சிறப்பென்பேன்.

கொள்ளை அடித்தாய் பொறுத்திருந்தோம் -எங்கோ
   கொண்டு குவித்தாய் பார்த்திருந்தோம்
வெள்ளம் வறட்சி நிதியெல்லாம்
   உருட்டித் தின்றாய் சகித்திருந்தோம்
பிள்ளைக் குட்டியின் உயிர்குடித்த
   பேயுடன் கைகள் குலுக்குகிறாய்.
உள்ளம் நெருப்பாய் கொதிக்கிறதே -இனி
   உன்னை எப்படி மன்னிப்போம் ?



-சிவகுமாரன் 

புதன், மார்ச் 07, 2012

காதல் வெண்பாக்கள் 28




உன்னுள் மறைவாய்
   ஒளிந்திருப்ப தென்னடி?
என்னுள் இருப்பதும்
   என்னவோ ?- இன்னும்
ரகசியங்கள் தேடவைத்து
   லட்சியங்கள் எல்லாம்
தகர்த்தாய் .நியாயமா
     சொல்








சொல்லாமல் கொள்ளாமல்
   சொந்தமாக்கிக் கொண்டாயே
எல்லாம் தனதென்று
   என்னைநீ !- வில்லாய்
வளைக்க நினைக்கின்றாய் .
   வாழ்க்கை உனக்கு
விளையாட்டுப் பொம்மையா
   சொல். 











சனி, பிப்ரவரி 25, 2012

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு 4


எழுதிக் குவித்துநான்
  என்னபயன் கண்டேன்?
தொழுதுன்னைக் கேட்கிறேன்
  தோழா - அழுதழுது
பாடையில்   போகையில்
  பாழுங் கவிதைகளை
கூடவே போட்டுக்
  கொளுத்து.


கொளுத்தியது போக
   குறையேதும் உண்டேல்
களைத்து விடாதே
   கலங்கி - முளைக்கும்
விதையாகும் முன்னரே
   வெட்டிக் குழிக்குள் 
புதைத்துவிட்டு நிம்மதியாய்ப்
    போ.

(புதுச்சேரி -1994  ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் - என் கவிதைகளை கேலி பேசிய நண்பனிடம் மனம் வெறுத்துப் போய் சொன்னது. )