சனி, மார்ச் 26, 2011

காதல் வெண்பாக்கள் 18

           செய்வினை 

உனக்கென்ன என்மேல்
   ஒருபார்வை வீசி 
எனக்கென்ன என்று 
   இருந்தாய்- கணக்கின்றி 
நான்தானே உன்நினைவில்   
   நாளைக் கழிக்கின்றேன் .
வீண்தானோ எந்தன் 
    விதி ?  
  

      
         பயனிலை

பார்வையில  ஒன்றுமில்லை 
   பாவிப் பயமக்கா 
ஆர்வமில்லை உன்மீது 
   ஆளைவிடு - தேர்வெழுதி 
பாஸாகப் பாரப்பா 
   வீணாய் அடிவாங்கி 
பீஸாகிப் போகாதே 
     போ .
   

செவ்வாய், மார்ச் 22, 2011

வரம் வேண்டும்


ஆசைகள் இன்பங்கள் ஆணவம் யாவும்
   அறுத்தே வாழும் வரம் வேண்டும்
காசும் பணமும் பொன்னும் பொருளும் 
   கண்டதும் வெறுக்கும் மனம் வேண்டும்

பெண்ணின் ஆசையும் புகழின் ஆசையும் 
   பொடிப் பொடியாகும் நிலை வேண்டும்
மண்ணின் ஆசையும் மக்கள் ஆசையும் 
   மறந்தே போகும் மனம் வேண்டும் 

வாலிப முறுக்கும் வயதுக் கிறுக்கும் 
   வாடிப் போகும் உடல் வேண்டும் 
போலிச் சுகங்கள் தேடும் உள்ளம்
   பொசுங்கிப் போகும் நிலை வேண்டும் 

உண்ணும் ஆசையும் உடுத்தும் ஆசையும் 
   உதறித் தள்ளும் உரம் வேண்டும்
இன்னும் இன்னும் என்னும் ஆசை
   இல்லா தொழியும் வரம் வேண்டும் 

பாழும் உலகின் பாவம் யாவும் 
   பார்த்ததும் ஒதுங்கும் மனம் வேண்டும் 
வாழும் போதே மரணம் வந்தால் 
   வா-வென்றழைக்கும் மனம் வேண்டும் 

வேண்டிய தென்னும் பொருட்கள் யாவும் 
   வேண்டா தாகும் நிலை வேண்டும்
ஆண்டவன் எந்தன் அருகே வந்தால் 
   அலட்சியம் செய்யும் மனம் வேண்டும். 

                                                   -சிவகுமாரன்
                                                     01-01-1993     
   

வியாழன், மார்ச் 17, 2011

முழக்கங்கள்




படைமுழக்கம் 


நாடுகாக்க போர்முனையில் போய் நொறுக்குவோம்.
ஊடுருவும் பேர்வழிகள் வால்   நறுக்குவோம்.
பதுங்கு குழி குண்டுமழை பழகிக் கொள்ளுவோம்
எதிரிகளை கடமைக்காக நின்று கொல்லுவோம் .
பனிஇரவில் மலைமுகட்டில் படை நடத்துவோம்
இனியஇல்லம் தனைமறந்து நொடி கடத்துவோம்.
பேறுகால மனைவி எண்ணம் ஓரம் கட்டுவோம்
நூறு கோடி மக்கள் வாழ வீரம் காட்டுவோம். 
ஆன்றவிந்த வீரர்களின் ஆசி வாங்குவோம்
மூன்றுவண்ணக் கொடியசைவில் மூச்சு வாங்குவோம்.


கொள்கை முழக்கம் 


வேட்டி சட்டை வெள்ளை கட்டி கூட்டம் போடுவோம்
பேட்டி  என்றால் பொய்யவிழ்த்து வேடம் போடுவோம்
கேடியாக வாழ்ந்த கதை கிழித்துப் போடுவோம்
கோடியாக சேர்த்துவைத்து ஒளித்துப் போடுவோம்
கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் வாழ்த்திப் பாடுவோம்
சீட்டு இல்லை என்று சொன்னால் நாறப் போடுவோம்
ஓட்டுவாங்க ஆளுக்கொரு நோட்டு நீட்டுவோம்
போட்டதெல்லாம் லஞ்சம் வாங்கி ஈடு கட்டுவோம்
ஒளிச்சு வச்ச சொத்துக்களை சுவிஸ்சில் போடுவோம்
இளிச்சவாயி மக்களுக்கு நாமம்  போடுவோம்.





கவிமுழக்கம் 


செவியினிக்க செவியினிக்க கவி முழக்குவோம
 புவியிலெங்கும் தமிழ்பரப்பி தலை நிமிர்த்துவோம்
மதமொழித்து மனந்திருத்தி மனிதம் போற்றுவோம்
நிதமுழைக்கும் எளியர்வாழ விதி இயற்றுவோம்
இருள்விலக்கி ஒளிபரப்பி இடர்கள் தாண்டுவோம்
பொருள்விளைக்கும் புதுமையெல்லாம் தமிழ் புகுத்துவோம்
இறைபாடி எழில்பாடி இருத்தல் போதுமா -தனிமைச்
சிறைக்குள்ளே செந்தமிழை நிறுத்தல் ஆகுமா ?
சேர்த்து வைத்த கோபமள்ளி தீ வளர்ப்போமா ?
வார்த்தைகளால் யுகப்புரட்சி வரவழைப்போமா ?
எளிமை நமது ஆயுதமாய் இருந்தது போதும்  - நம்
வலிமை தன்னை வரலாறு உணர்ந்திடச் செய்வோம். 


ஜனமுழக்கம் 















அரிசி பருப்பு எண்ணெய் வாங்க வெயிலில் காய்கிறோம்
வரிசையினில் நின்று நின்று வாழ்ந்து சாகிறோம்.
இலவசத்தில் அடிமையாகி சுயம் இழக்கிறோம் .
கலைஞர் டிவி ஆட்டம் பார்த்து கனவு காண்கிறோம்

எத்தனைநாள் இப்படியே வாழ்ந்திருப்பது ?-ஒரு 
தப்படியும் ஏறாமல் தாழ்ந்திருப்பது ?
ஆட்சிமாற்றம் ஒன்றுமட்டும் விடிவு ஆகுமா ?
காட்சிமாற்றம் நாடகத்தின் முடிவு ஆகுமா ?
கட்டுண்டு பொறுத்திருந்தால் காலம் மாறுமா ?- இல்லை 
நட்டாற்றில் நம்மை விட்டு காலை  வாருமா  ?
இருட்டை எரிக்க  எரிதழலை ஏந்துவது யார்?
திருட்டு பூனை கழுத்தில் மணி கட்டுவது யார் ?
எகிப்து லிபியா நாட்டில் மக்கள் விழிக்க வில்லையா ?
தகிக்கும் புரட்சி எரிமலையாய் வெடிக்கவில்லையா?  
தக்கதொரு தருணம பார்த்து காத்திருக்கிறோம் 
மக்கள் சக்தி என்னவென்று காட்டப் போகிறோம்  


                                                                    - சிவகுமாரன்  


நன்றி
இந்தக் கவிதையை என்னை எழுதத் தூண்டிய திரு G .M.பாலசுப்ரமணியம் அய்யா அவர்களுக்கு . 

ஞாயிறு, மார்ச் 13, 2011

வேண்டாம் தாயே


இயற்கைத் தாயே இயற்கைத் தாயே 
பயத்துடன் உன்னை பணிந்தோம் தாயே
இனிதாய் இதமாய் சுமந்த நீயே 
மனிதரைத் தின்ன மனந்  துணிந்தாயே  
குச்சுக் குடிசையில் குடியிருந் தோரை
மச்சு வீட்டில் மகிழ்ந்திருந் தோரை
வேறு பாடின்றி வெறிகொண் டெழும்பி 
கூறு போட்டரிந்து கொலைவெறி யோடு 
கொஞ்சம் கூட மனமில் லாமல் 
நெஞ்சைப் பிளந்து நீ தின்றாயே !
வறுமைப் பேய்கள் வாட்டும் நோய்கள் 
குறுகிய மனங்கள் குதர்க்க மதங்கள்
அரசியல் அரக்கன் அணு உலை மிரட்டல்
குரல்வளை நெரிக்கும் ஓசோன் ஓட்டை 
எடுத்தது போக எஞ்சிய இரத்தம்
நீகுடித்  தாயே நியாயம் தானா?
பாவம் செய்யும்  மனிதரைக் கண்டு
கோவம் கொண்டு நீ கொஞ்சம் திமிறி
விரலசைத் தாலே வீணாய்ப் போவோம்
குரலெழுப் பாமல் கொன்று போட்டாயே
உன்னிலே பிறந்து உன்னால் வளர்ந்து
உனக்குள்ளே தான் உறங்கிப் போவோம்.
உண்மை தானவை மறுத்தோம் இல்லை.
ஆனால் தாயே அதற்குள் எம்மை 
அடியோ டழிக்கும் அவசரம் ஏனோ ?
தாயே தனது தாகம் தீர்க்க 
சேயின் இரத்தம் கேட்டாள் அதனால்
மாண்டார் என்ற மாபழி உனக்கு 
வேண்டாம் தாயே வேண்டாம் இனிமேல் . 



-சிவகுமாரன்

புதன், மார்ச் 09, 2011

சின்னஞ்சிறு நெருப்பு

















வாசலிலே ரோஜாச்செடி
   வைத்து நிதம் நீர் தெளிக்க
   வாசமலர் நித்தமொன்று  மலரும்- உடன்
ஊசிமுனை முள்ளுமொன்று வளரும்.

நட்டநடு ராத்திரியை
   பட்டப்பக லாக்கிவிட
   நாள்முழுதும் மின்விளக்கு எரியும். - அதைத்
தொட்டு விட்டால் பின்விளைவு புரியும்.

ஒற்றைத்திரி நெய்விளக்கில்
   ஊற்றிவைத்த எண்ணெயொடு  
   ஒளிருது சின்னஞ்சிறு நெருப்பு - கூறை
பற்றிக் கொண்டால் யாரதற்கு பொறுப்பு.?

செல்லும் வழி கல்லு முள்ளு
   செய்வதெல்லாம் தில்லுமுல்லு 
   சேரச் சொல்லிக் கூப்பிடுதோர் கூட்டம் - அதைத்         
தள்ளிவிட்டு நில்லாமல் என் ஓட்டம் .

என்னுடைய கன்னித் தமிழ்
   ஈசன்தந்த சங்கத் தமிழ்
   ஈசனுக்கும் ஏழைக்குமென் பாட்டு - வேறு
என்ன சொல்ல , இதுதானென் ரூட்டு
.  

                                            


                                              

                                          
                                                                   -சிவகுமாரன் 

                                                    

      

வியாழன், மார்ச் 03, 2011

அருட்கவி



இறையைத் தேடும் என்பய ணத்தில்
நிறையும் குறையும் நிரம்பி வழிய 
கவிதை பலவும் கணக்கின் றெழுதிக் 
குவித்தேன் தொழுதேன் குமபிட் டழுதேன்.
இரங்கா மனதுள் இறங்கின கவிகள்.
வரங்களைக் கேட்டேன் திறந்தன செவிகள்.
புவனம் காப்போன் பெயரைச் சொல்லி 
அவனரு ளாலே அவன்தாள் வணங்கி 
அருட்கவி என்னும் பெயரில் அதனை
தருகிறேன் உமக்கு தனியே வலையில்.
அன்பர் அனைவரும் ஆதர வளித்து
இன்பத் தமிழின் இனிமை சுவைக்க 
இருகரம் கூப்பி இதயம் கனிந்து 
வருக வருகென வரவேற் றழைத்தேன்

.

 
   சிவகுமாரன் 
 www.arutkavi.blogspot.com 

வெள்ளி, பிப்ரவரி 25, 2011

படிச்சுக் கிழிக்க வேண்டாம்



( +2 வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விரும்பிய மகனிடம் ஓர் ஏழைத்  தந்தையின் புலம்பல் ) 

ஏன்டாப்பா எம்மவனே 
   இப்படி நீ செஞ்சுப்புட்ட 
வேண்டாத வேலையெல்லாம் 
   வெட்டியாக பண்ணிப்புட்ட 

படிக்க வேணாமின்னு 
   படிச்சு படிச்சு சொன்னேனே 
அடிச்சு சொன்னேன்- நீ
   அப்படியும் கேக்கலியே

பெயிலாகித் தொலைச்சிருந்தா 
   பேசாமா இருந்திருப்பேன்.
பாஸாகித்  தொலச்சிட்டீயே  
   பாவி இப்ப என்ன செய்வேன் ?

கூழுக்கே வழியில்லை
   கும்பி இங்கே காயுதடா 
காலேஜில் சேத்துவிட
   காசுக்கு எங்க போவேன் ?

மூத்தவ வயசு இப்ப 
   முப்பத்தொண்ணு  ஆகுதடா 
அடுத்தவ ஆளாகி 
   அஞ்சு வருஷம் ஆச்சுதடா 

மாப்பிள்ளை வாங்கத்தான் 
   மாடாய் ஒழைக்கிறேண்டா 
நல்லவரன் தேடித்தேடி 
   நாயா அலையிறேண்டா 

ஒங்க ஆத்தா ஒடம்புக்கு 
   ஒருநூறு கோளாறு
ஒருவாயி மருந்துக்கே 
   நாளெல்லாம் தகராறு

எப்படி நான் சமாளிப்பேன்
   எதைச் சொல்லி நானழுவேன் ?
இப்ப உன்னை படிக்கவைக்க 
   எங்க போயி முட்டிக்குவேன் ?

வடிக்க அரிசியில்லை 
   வாயிக்குத் தண்ணியில்லை
படிக்க வைக்க எனக்கு 
   வழியேதும் தெரியவில்லை 

படிச்சுக் கிழிச்சு நீ 
   பாழாப் போக வேணாம்
வடிச்ச காஞ்சி தூக்கி 
   வாடா நீ வயலுக்கு. 
****************************************

                                                                   
                                              

(இந்தக் கவிதை 1991 ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய பொன்விழா ஆண்டு கவிதைப் போட்டியில் மரபுக் கவிதைப் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றது )

                                     -சிவகுமாரன் 
                         

சனி, பிப்ரவரி 19, 2011

மண் சுமந்தவா


நமசிவாய ஓம் - சுவாமி
  நமசிவாய ஓம்
நமசிவாய ஓம் - சுவாமி
  நமசிவாய ஓம் 

மண் சுமந்தவா - பாதி 
   மதி சுமந்தவா 
பெண் சுமந்தவா - பொங்கும் 
   புனல் சுமந்தவா 
கண்  சிவந்தவா - நெற்றிக் 
   கனல் சுமந்தவா
என் சுமைகளைக்- கொஞ்சம் 
   இறக்கி வைக்க வா .                               (நமசிவாய ஓம் )

ஆலம் உண்டவா - நல்ல 
   அரவம் பூண்டவா 
சூலம் கொண்டவா - நெற்றிச் 
   சுடரைக் காட்டவா 
கோலம் காட்டவா - என்னில் 
   குடி புகுந்தவா 
நீல கண்டனே - நெஞ்சில் 
   நேசம் கொண்டு வா .                               (நமசிவாய ஓம் )


பித்தன் ஆனவா - சக்திப் 
   பிரியன் ஆனவா 
அத்தன் ஆனவா - என்னை 
   அடிமையாக்க வா 
சத்தம் ஆனவா - அதன்
   சரணம் ஆனவா 
நித்தம் பாடினேன் - கேட்டு 
     நீயும் ஓடி வா .                                        (நமசிவாய ஓம் )
 . 
தோடணிந்தவா - புலித் 
   தோலணிந்தவா
ஆடல் காட்ட வா - உன் 
   அழகைக் காட்ட வா 
பாடல் கேட்டு வா - எந்தன்
   பக்திபார்த்து வா 
கூடல் ஆண்டவா - எந்தன் 
    குரலைக் கேட்டுவா .                                (நமசிவாய ஓம் )


இடப வாகனா - தமிழ்
   இசையின் மோகனா 
நடன  ஈஸ்வரா - ப்ரணவ
   நாத சங்கரா 
சுடலைக் காத்தவா - உயிர்
  சுருதி  சேர்த்தவா 
கடவூர் ஆண்டவா - என் 
   கவலை போக்க வா .                                   (நமசிவாய ஓம் )


அம்மை ஆனவா - எங்கள்
   அப்பன் ஆனவா
இம்மை சிறக்க வா - அதில்
   இன்பம் சேர்க்க வா
நம்ப வைத்தவா - உன்னை
   நாட வைத்தவா
ஜம்புகேஸ்வரா - இந்த
   ஜன்மம் காக்க  வா .                                     (நமசிவாய ஓம் )


கோட்கள் ஆள்பவா - அவை
   கூடி சூழ்பவா
நாட்கள் திறப்பவா - அதை
   நகரச் செய்பவா
மீட்க ஓடிவா - வாழ்வை
   மேன்மையாக்க வா
ஆட்கொண்டேஸ்வரா - என்னை
   ஆண்டு கொள்ளவா .                                     (நமசிவாய ஓம் )


காற்றைப் படைத்தவா - மூலக்
   கனலை உடைத்தவா
நீற்றைத் தந்தவா - இந்த
   நிலத்தில் வந்தவா
ஏற்றுக் கொள்ளவா - என்னை
   இழுத்துச் செல்லவா
கூற்றை உதைத்தவா - என்னைக்
   கூட்டிக் கொள்ளவா .                                     (நமசிவாய ஓம் )


ஆதியானவா - வாழ்வின்
   அந்தம் ஆனவா
ஜோதி ஆனவா - உயிரின்
   சுடரும் ஆனவா
நாதம் ஆனவா - அதில்
   நடனம் செய்பவா
வேதம் ஆனவா - எந்தன்
    விதியை மாற்ற வா                                      (நமசிவாய ஓம் )


அகில மானவா - அணுவின்
   அணுவு மானவா
முகிலு மானவா - முகிலின்
   மழையு மானவா
பகலும் ஆனவா - வரும்
   இரவும் ஆனவா
சகலம் ஆனவா - உனது
   சக்தியோடு வா                                              (நமசிவாய ஓம் )


வாய்மை யானவா - அதன்
   வலிமை யானவா 
தூய்மை யானவா - உன்னைத்
   தொடரச் செய்தவா 
நேய மானவா - எந்தன் 
   நெஞ்சில் நின்றவா 
தாயு மானவா - என்னைத்
   தாங்கிக்  கொள்ள வா                                    (நமசிவாய ஓம் )


தாளம் ஆனவா - இசைத் 
   தமிழும் ஆனவா 
நாளம் நிறைந்தவா - எந்தன்
   நரம்பில் உறைந்தவா 
ஓலம் கேட்டு வா- எந்தன் 
   உளறல் கேட்க வா 
காளத்தி நாதா - எந்தன்
   கானம்  கேட்க வா                                           (நமசிவாய ஓம் )


விறகு விற்றவா - கை 
   வளையல் விற்றவா 
மறைகள் கற்றவா - மன்
   மதனைச் செற்றவா 
கறைகள் அற்றவா - ஒரு
   களங்கம் அற்றவா 
பிறவி அற்றவா - என்னைப் 
    பிடித்துப் பற்ற வா                                           (நமசிவாய ஓம் )


முக்கண் பெற்றவா - வேல்
   முருகைப் பெற்றவா 
தக்கன் மருமகா - அவன் 
   தலையைக் கொய்தவா 
சிக்கல் தீர்க்க வா - எந்தன்
   சிரமம் போக்க வா
சொக்க நாதனே - என்னைச் 
   சொந்த மாக்க வா                                            (நமசிவாய ஓம் )


பரியை அழைத்தவா - பாண்டி
   படையில் நுழைத்தவா 
நரியை அடைத்தவா - வைகை 
   நதியை உடைத்தவா 
புரிய வைத்தவா - உன்னைப்
    புகழ வைத்தவா 
அரியின் மைத்துனா - என்னை
   அருகில் சேர்க்கவா                                         (நமசிவாய ஓம் )


உமையின் காதலா - அகில 
   உலக நாயகா 
சுமைகள் நீக்க வா - எந்தன் 
   சுயத்தைக்  காக்க வா 
சமயம் காத்தவா - தமிழ்ச்
   சங்கம் வளர்த்தவா 
இமயம் உறைபவா - எந்தன்
   இதயம் நிறைய வா                                         (நமசிவாய ஓம் )


தில்லை ஆண்டவா - பெருந்
   துறையூர் ஆண்டவா 
நெல்லை ஆண்டவா - வெண்ணெய்
   நல்லூர் ஆண்டவா 
தொல்லை  நீக்கவா - வாட்டும் 
   துன்பம் போக்க வா
அல்லல் போக்க வா - என்னை 
   அணைத்துக்  கொள்ள வா                             (நமசிவாய ஓம் )

அருணை ஆண்டவா - திரு
   ஆரூர் ஆண்டவா 
கருணை காட்ட வா - மனக்
   கலக்கம் ஓட்ட வா 
இருளைப் போக்க வா - வாழ்வில் 
   இனிமை சேர்க்க வா 
அருளைக் கூட்ட வா - தேவ 
   அமுதம் ஊட்ட வா                                           (நமசிவாய ஓம் )


கயிலை ஆண்டவா - புனிதக் 
   காசி ஆண்டவா 
மயிலை ஆண்டவா - பாண்டி 
   மதுரை ஆண்டவா 
உயிலை எழுதவா - அதில்
   உயிரை எழுதவா 
துயில் எழுந்துவா - எந்தன் 
   துயரம் தீர்க்க வா                                               (நமசிவாய ஓம் )

கண்ணைத் தோண்டவா- பிள்ளைக்
   கறி சமைக்க வா  
மண்ணைத் தோண்டவா - தோண்டிப்
   பாதம் தீண்டவா 
விண்ணைத் தாண்ட வா - எல்லாம்
   வீண் தானல்லவா 
என்னைத் தோண்டினேன் - வருக 
    ருத்ர தாண்டவா                                              (நமசிவாய ஓம் )

                                           

பாடலை என் தம்பி பிரபாகரனின் குரலில் கேட்டு மகிழுங்கள். 





சமர்ப்பணம்
16-02-2011 முதல் இராமேஸ்வரத்திலிருந்து காசி வரை பாத யாத்திரை மேற்கொண்டுவரும் என் சித்தப்பா, என் ஆன்மீக குரு திரு.அரசு அவர்களுக்கு. 


வெள்ளி, பிப்ரவரி 11, 2011

என்று மலரும் ?







                  
          
    
             (காவடிச்சிந்து)

ஊரைச் சுரண்டித் தின்னும் கூட்டம் - உடல்
  உழைப்பினில் கொள்வதென்று நாட்டம் ? - பணத்
தேரில் பவனிவந்து
  தின்று கொழுப்பவரின்
  ஆட்டம் - என்று - ஓட்டம் ?

சேற்றினிலே கால்கள் வைத்து நடப்பார் - அவர்
  தின்ன உணவுமின்றி கிடப்பார் - பிறர் 
சோற்றைத் திருடித் தின்று
   தொப்பை வளர்ப்பவர்கள் 
    நடிப்பார் - தின்று - வெடிப்பார்

பொத்தல் குடிசைக்குள்ளே வாழும் - ஏழைப்
  பிள்ளை குடிக்க இல்லை கூழும்- அவர்
நித்தம் வறுமையினில் 
   நீந்தும் நிலைமைஎன்று 
   வீழும் - இன்பம் - சூழும் ?

.பத்துமாடிக் கட்டிடத்தில் சிலரும் - வீதிப் 
 பாலம் அதனடியில் பலரும் - இன்னும் 
எத்தனை நாள் வாழ்ந்திருப்பார்  
  இங்குஒரு மாற்றமென்று
  மலரும் - சுகம் - வளரும் ? 
                                      
                                            -சிவகுமாரன்


இந்தக் கவிதையை அய்யா சூரி (சுப்பு ரத்தினம் ) அவர்கள் இனிமையாக பாடி என் கவிதைக்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தைக்  கொடுத்திருக்கிறார்.
நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

காதல் வெண்பாக்கள் 16

                         முத்திரை

              அங்கிருந்து நீயனுப்பும்
                    அஞ்சலுறைக் குள்தேடி
              எங்கேயும் இல்லையடி
                    இன்பங்கள் - இங்கெனக்கு
              முத்தங்கள் சேர்ந்துபோய்
                    மூச்சிரைப்பு வாங்குதடி
              இத்தோ  டிணைத்துள்ளேன்
                                  இச்



                     கடித்தம் 


           கிடைத்தது உங்கள்
               கிறங்கிய முத்தம்
           அடைத்துத் திணித்திருந்த
                அஞ்சல் - எடைக்கு 
           எடைதருவேன் முத்தங்கள்
                இங்குவந்தால்- கொஞ்சம்
           அடக்கி இருந்திடுங்கள்
                             அங்கு.