சனி, ஜனவரி 22, 2011

கண்ணுக்குள் முள்




நானிங்கே படும்பாடு
  உனக்குத் தெரிகிறதா ?
ஊனின்றி உறக்கமின்றி
  உருகுவது புரிகிறதா ?

நாளைக்கே வருவதாக
  நாலைந்து முறையென்னை
சோலைக்குள் முத்தமிட்டு
   சொல்லிவிட்டு  சென்றவனே

நானிங்கே படும்பாடு
  உனக்குத் தெரிகிறதா ?

நீதொட்ட இடமெல்லாம்
  நெருப்பாய்க் கொதிக்கிறது.
தீபட்ட புண்ணைப்போல்
   தேகமெலாம் எரிகிறது.

உன்வரவை தினந்தோறும்
  எதிர்பார்த்துக் காத்திருந்து
என்னுடைய விழியிரண்டும்
   இருட்டாகிப் போனதையா .

ஊர்வாயில் நம்பேச்சு
   உதைபட்டுத்  தவிக்கிறது
பேர்சொல்லி பின்னாடி
   பேசிச் சிரிக்கிறது.

தங்கச்சி ஒருத்தி
  தறுதலையா சுத்தினான்னு
எங்கக்கா கல்யாணம்
  என்னாலே நின்னுடுச்சு

நடுத்தெருவில் கால்வச்சு
  நான்நடந்து போகையிலே
குடும்பத்து மானமெல்லாம்
   கொடிகட்டிப் பறக்குதையா .

உன்னினைவை அடியோடு
   உதறிவிட நினைச்சாலும்
கண்ணுக்குள் முள்விழுந்த
    கதையாக இருக்குதையா

கைவச்சு முள் எடுக்கும்
  கலைஎனக்குத் தெரியவில்லை
தைச்ச வலி தாங்குகிற
   சக்தியும் எனக்கில்லை

தூசிவந்து விழுந்திருந்தா
   துடச்சிவிட்டுப்  போயிருப்பேன்
ஊசிபோல முள்விழுந்து
   உறுத்துதையா என்கண்ணை. .

உனக்கென்ன ஆண்பிள்ளை
   ஊர்கவலை உனக்கில்லை
எனக்குத்தான் அவமானம்
   ஏமாற்றம் எல்லாமே.

உன்னழகில் உன்பேச்சில்
  உள்ளத்தை பறிகொடுத்து
இன்னொருத்தி பணக்காரி
   எப்படியோ கிடைச்சிருப்பா

கூழுக்கே தினந்தோறும்
  சதிராட்டம் போடுகிற
ஏழைக்குக் காதலிக்க
  இல்லை உரிமையின்னு

அன்னைக்கே எங்கம்மா
  அடிச்சு சொன்னதெல்லாம்
இன்னைக்குத் தானய்யா
    எனக்குப் புரிகிறது.

தூக்க மாத்திரையோ
   தூக்கு மாட்டிக்கிட்டோ
போக்கிக்கலாம் என்னுயிரை
   போனதெல்லாம் வந்திடுமா ?

ஒத்தப்  பனைமரமா
    உலக்கைக்கு நெல்லுமியா
செத்த பொணம்போல
   சீரழிஞ்சு நிக்கிறே(ன்)யா

உயிருந்தன் நிழல்தேடி
   ஊரெல்லாம் சுத்துதையா
உடல்மட்டும்   இங்கிருந்து
  உருகித் தொலைக்குதையா 

  



52 கருத்துகள்:

  1. ஒவ்வொரு வரியிலும் உருக்கம் அந்த படத்தில் வரும் பனித்துளியான கண்ணிர்துளி...

    உயிர் ஊர் சுத்த ...உடல் உருகும் வரி வாரை வாரையான கண்ணீர் காதல் உருக்கம்...

    கவிஞன் தான் முழூமனிதன் என்பதை உங்கள் கவிதை மீண்டும் நிரூபிக்கிறது...

    பதிலளிநீக்கு
  2. ஏக்கம்,வலி,சோகம்,இயலாமை எல்லாம் கலந்த கவிதை.

    இப்படி ஒரு கவி எழுத தூண்டியது எது?

    பதிலளிநீக்கு
  3. "உயிருந்தன் நிழல்தேடி ஊரெல்லாம் சுத்துதையா"

    இன்னமும் நிழல் தேடுவ்துதான் பிரச்சனை. எப்போது நிஜம் தேடப் போகிறாள்?

    பதிலளிநீக்கு
  4. தங்கச்சி ஒருத்தி
    தறுதலையா சுத்தினான்னு
    எங்கக்கா கல்யாணம்
    என்னாலே நின்னுடுச்சு


    .....கவிதை முழுவதும், ஒரு மனதின் போராட்டமும் வலியும் வேதனையும் இயலாமையும் நன்கு படம் பிடித்து காட்டி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  5. பிரமாதம்.இயல்பான வார்த்தைகள்
    ரசித்துப் படிக்க ஏதுவான நடை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அருமை.

    //"தூக்க மாத்திரையோ
    தூக்கு மாட்டிக்கிட்டோ
    போக்கிக்கலாம் என்னுயிரை
    போனதெல்லாம் வந்திடுமா"//

    //"உயிருந்தன் நிழல்தேடி
    ஊரெல்லாம் சுத்துதையா
    உடல்மட்டும் இங்கிருந்து
    உருகித் தொலைக்குதையா"//

    இயல்பாய், அழகாய், எளிமையாய், சுவையாய்...

    பதிலளிநீக்கு
  7. சோகத்தின் முடிவா, திகிலின் தொடக்கமா?

    பதிலளிநீக்கு
  8. இதயத்தின் வலிசொல்லும் வரிகள் அருமை...

    பதிலளிநீக்கு
  9. //உயிருந்தன் நிழல்தேடி
    ஊரெல்லாம் சுத்துதையா
    உடல்மட்டும் இங்கிருந்து
    உருகித் தொலைக்குதையா //

    அருமை! அருமை!

    ஒரு ஏமாந்த பெண்ணின் வேதனை அப்பட்டமாகத் தெரிகிறது ஒவ்வொரு வரியிலும்..

    பதிலளிநீக்கு
  10. //தங்கச்சி ஒருத்தி
    தறுதலையா சுத்தினான்னு
    எங்கக்கா கல்யாணம்
    என்னாலே நின்னுடுச்சு//

    எளிமையான, அருமையான கவிதை!

    பதிலளிநீக்கு
  11. படமும், கவிதையும் வேதனையை கிளப்புகிறது.
    மேலும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. How can one write so naturally unless one has experienced these feelings.Good kavithai is always expected from you. another feather in your cap.

    பதிலளிநீக்கு
  13. கவிதை படித்து முடித்தவுடன் அப்படியே அந்தப் பெண்ணின் வலி புரிகிறது! நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி சிவகுமார்!

    பதிலளிநீக்கு
  14. கண்ணுக்குள் முள்தான் கவிதை. மொழிவழக்கும் அதன் வலியும் அதற்குள் பண்பாடும் கோர்த்த உணர்வு !

    பதிலளிநீக்கு
  15. காதலியின் ஏக்கம் ,விட்டுபிரிவானோ என்ற தாக்கம்,சந்தேகம்,என்று சகல உணர்ச்சிகளையும் கொட்டினார்போல் அழுத்தமான வரிகள்

    பதிலளிநீக்கு
  16. பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

    பதிலளிநீக்கு
  17. அருமை..அருமை...ஒவ்வெரு வரியிலும் சோகமும்..இயலாமையும் தெரிச்சு விழுகுது...

    பதிலளிநீக்கு
  18. இயல்பான எழுத்து நடை ஈசியா மனதிற்குள் நுழையும் உணர்ச்சிகள் அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. சிவகுமாரன்...தமிழக கடல் எல்லையில் மீனவர்கள் பரிதாபமாகத் தாக்கப்படுகிறார்களே,,,அதைப் பற்றி ஒரு கவிதை எழுதுங்களேன்..இந்த காதல் கவிதைகளைப் படித்துப் படித்து சலித்து விட்டது..

    பதிலளிநீக்கு
  20. காதலனைக் காணாத பெண்ணின் இயலாமையை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உங்கள் கவிதையின் இழையோடும் கோவம் இதில் இல்லையே. இளமுருகன் சொன்னது போல் நிழலைத் தேடாமல் நிஜத்தை உணர்ந்து பெண்களைச் சினம் கொள்ளச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லாஜனவரி 24, 2011 2:00 PM

    சமுத்ரா சொன்னது போல மீனவர்களை பற்றி எழ்துங்கேளேன் .

    பதிலளிநீக்கு
  22. ரொம்ப அருமையாகவும் இயல்பாகவும் கவிதை அமைஞ்சிருக்கு. ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணின் மனக்குமுறல் மிகத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  23. எல்லாவகைக் கவிதைகளும் எழுதும் தன்களுக்கு என் அன்பான வழ்த்து முத்தங்கள்!!

    பதிலளிநீக்கு
  24. படங்களும், கவிதைகளும் அருமையிலும் அருமை!!

    என்றும் நட்புடன்..
    வைகறை
    வாருங்கள்: www.nathikkarail.blogspot.com

    பதிலளிநீக்கு
  25. அற்புதமான வலி சிவா.வலியில் அற்புதம் உண்டா?அது உங்க கவிதை.

    நமக்குள் என்ன பொருத்தம் பாருங்களேன் இந்தச் சுட்டியை.போன ஏப்ரலில் யாரின் கண்ணிலும் படாத இந்தக் கவிதை.
    http://sundargprakash.blogspot.com/2010/04/blog-post.html

    பதிலுக்குக் காத்திருப்பேன் சிவா.

    பதிலளிநீக்கு
  26. \\ஒத்தப் பனைமரமா
    உலக்கைக்கு நெல்லுமியா///

    உவமை நல்லாத்தான் இருக்கு. உமியாய் இல்லாமல் உலக்கையாய் மாறுவது எப்போது ?

    பதிலளிநீக்கு
  27. @ "உழவன்"

    "உழவன்" கூறியது...
    ".......ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணின் மனக்குமுறல் மிகத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது"

    நான் உங்கள் கருத்திலிருந்து வேறுபடுகிறேன். இந்த கவிதையை எப்படி ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணின் மனக்குமுறலோடு ஒப்பிடுகிறீர்கள்? என்ன தொடர்பு? எந்த கோணத்தில் அப்படி பார்க்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  28. நான் ஏழைக் குடும்பத்துப் பெண் என்று தான் சொல்லி இருக்கிறேன்

    \\கூழுக்கே தினந்தோறும்
    சதிராட்டம் போடுகிற
    ஏழைக்குக் காதலிக்க
    இல்லை உரிமையின்னு//

    உழவன் சொன்னதிலும் தவறில்லை.. நடுத்தரக் குடும்பத்திற்குத் தான் இந்த வலியும் வேதனையும் அதிகம். கேலிப் பேச்சுக்களாலும் கிண்டல்களாலும் பாதிக்கப்படுவதும் அவர்கள் தான். பணம் இவற்றை மூடி மறைத்து விடும். ஏழ்மை இவற்றைத் தாண்டிச் சென்று விடும்.அதற்கு கவலைப்பட நிறைய விசயங்கள் இருக்கின்றன காதலை காட்டிலும்.

    பதிலளிநீக்கு
  29. தமிழின் சுவையும் கவிதையும் வலிமையையும் உங்களின் கவிதைகளில் காணக்கிடக்கிறது சிவகுமாரன்.
    மிக அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  30. உருக்கமான கவிதை...

    ஒவ்வொரு வரியும் வலியைச் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  31. காரிருளிலே மறைஞ்ச காதலை நொந்து
    கண்ணீரிலே நனைஞ்ச கவிதையிது.

    கருகிப்போன பூ இதையே
    சொருகிக்கொள்ள யார் வருவார் ?
    மருகி நிற்கும் மனசு இது...
    மாலையிட யார் வருவார் ?

    சுப்பு ரத்தினம்.
    பின் குறிப்பு: அழகான கவிதை. இதை ஒரே மூச்சில் ஆனந்த பைரவி ராகத்தில்
    மெட்டிட்டேன். நன்றாக அமைகிறது.
    யூ ட்யூபில் போடவா ? உங்கள் அனுமதி உண்டா

    பதிலளிநீக்கு
  32. நன்றி நன்றி நன்றி நண்பரே. மெட்டிட்டு எனக்கும் அனுப்புங்களேன் ப்ளீஸ்

    பதிலளிநீக்கு
  33. Pakka...

    Superb..

    Nalla irukku.

    sokkat sei...

    all has the same meaning..good poet.

    பதிலளிநீக்கு
  34. பத்மநாபன் சொன்னது.
    \\கவிஞன் தான் முழூமனிதன் என்பதை உங்கள் கவிதை மீண்டும் நிரூபிக்கிறது...//

    நன்றி ரசிகமணி.
    முதலில் மனிதனாய் இருக்க முயல்வோம். அரைமனிதன் முழுமனிதன் எல்லாம் அப்புறம்

    பதிலளிநீக்கு
  35. இளமுருகன் சொன்னது.

    \\இப்படி ஒரு கவி எழுத தூண்டியது எது?///


    இது ஒரு பெண்ணின் பாத்திரமல்ல. பாதிக்கப்பட்ட பல பெண்களின் கண்ணீர். உசிரோ உசிரு- வில் எல்லாக் கொடுமைகளும் ஒரே தாய்க்கு நடப்பது போல் எழுதி இருப்பேன். அப்படிதான் இதுவும். இந்த கவிதை எழுதி ஏறக்குறைய 15 வருடங்கள் ஆகி விட்டது. இந்தக் கவிதையை படித்த என் ரசிகை ஒருவர் சில வரிகள் தன்னை வைத்து எழுதியது போல் இருப்பதாய் சொன்னார். யாரென்று நான் சொல்லப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
  36. என்ன இராமேஸ்வரம் போயாச்சா ?

    பதிலளிநீக்கு
  37. அப்பாத்துரை.சொன்னது
    \\சோகத்தின் முடிவா, திகிலின் தொடக்கமா?//

    சோகத்தின் முடிவாகவும் திகிலின் தொடக்கமாகவும் இல்லாமல் , விடியட்டுமே பொழுது அவளுக்கு.

    பதிலளிநீக்கு
  38. GMB சொன்னது.
    \\How can one write so naturally unless one has experienced these feelings.//
    ஒரு பாத்திரம் பற்றி எழுதும் அந்த தருணங்களில் அதுவாகவே மாறி விடுவது என் இயல்பு.
    நன்றி GMB

    பதிலளிநீக்கு
  39. சமுத்ரா சொன்னது.
    \\\தமிழக கடல் எல்லையில் மீனவர்கள் பரிதாபமாகத் தாக்கப்படுகிறார்களே,,,அதைப் பற்றி ஒரு கவிதை எழுதுங்களேன்..இந்த காதல் கவிதைகளைப் படித்துப் படித்து சலித்து விட்டது..///


    இது காதல் கவிதை அல்ல நண்பரே. காதலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர்க் கவிதை.
    அடுத்த கவிதைக்கான கரு தந்ததற்கு நன்றி. வெகு நாட்களாய் என் மனதை வலிக்கச் செய்து , நான் எழுத நினைத்தது தான்.

    TO
    பெயரில்லா & ராதேஷ்

    படகில் ஏறி இருக்கிறேன். அனுபவித்துப் பார்த்துவிட்டு அழைத்து வருகிறேன் அந்த மீனவனை.

    பதிலளிநீக்கு
  40. உழவன் சொன்னது.
    \\ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணின் மனக்குமுறல் மிகத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது///.

    நன்றி நண்பரே.
    உங்களைப் பார்த்து இளமுருகன் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லி இருக்கிறேன்.
    உங்கள் பதில் என்ன.

    பதிலளிநீக்கு
  41. சுந்தர்ஜி.சொன்னது
    \\\ அற்புதமான வலி சிவா.வலியில் அற்புதம் உண்டா?அது உங்க கவிதை.
    நமக்குள் என்ன பொருத்தம் பாருங்களேன் இந்தச் சுட்டியை.போன ஏப்ரலில் யாரின் கண்ணிலும் படாத இந்தக் கவிதை.
    http://sundargprakash.blogspot.com/2010/04/blog-post.html

    பதிலுக்குக் காத்திருப்பேன் சிவா.//

    நன்றி சுந்தர்ஜி.
    தங்களின் கவரி படித்தேன்.அருமை. நான் அங்கு சொன்னது போல் உங்களைப் போல் நானும் எழுதி இருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை.

    பதிலளிநீக்கு
  42. வேல்கண்ணன் சொன்னது.
    \\\தமிழின் சுவையும் கவிதையும் வலிமையையும் உங்களின் கவிதைகளில் காணக்கிடக்கிறது சிவகுமாரன்.
    மிக அருமை நண்பரே//

    உங்கள் கவிதைக்கு முன்னால் என் கவிதை வெறும் வார்த்தை ஜாலங்கள் தான் வேல்கண்ணன்.
    உங்களின் வாழ்த்தை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  43. நன்றி
    சித்ரா, ரமணி, ஸ்ரீராம், கலாநேசன், ஸ்ரீ அகிலா, ஜீ, தென்றல் சரவணன், கனாக்காதலன், வெங்கட் நாகராஜ், கோபி, ஆயிஷா, ஹேமா, கோமா, பிரபா ஒயின்ஸ் ஓனர் ( நான் குடிக்கிறதில்லைங்க )ஆனந்தி, லக்ஸ்மி, பிரபு, கீதா சந்தானம் மேடம், பெயரில்லா, வைகறை, திருநா, ராதேஷ், சுந்தரா, சூரி, தங்க்லீஷ் பையன், & கோநா
    நன்றி நன்றி நன்றி
    அனைவருக்கும்

    பதிலளிநீக்கு
  44. நேரமின்மையால் தாமதமாக இப்போது தான் படிக்க நேர்ந்தது.

    கவிதை மிகவும் அருமையாக உள்ளது.

    பாவம் ... இந்தப் பெண்களுக்குத் தான் எவ்வளவு சோதனைகள்!

    நல்ல நல்ல வரிகளை அழகாக ஒருங்கிணைத்து, எளிமையாகப் புரியும்படி எழுதும் தனித் திறமை தங்களுக்கு உள்ளது. என் மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  45. அருமை நல்ல வரிகளை கொண்டு கவிதை தொடுத்த விதம் அருமை ..

    பதிலளிநீக்கு
  46. காதலின் ஏக்கத்தை நயம்படச் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு