திங்கள், டிசம்பர் 19, 2011

காதல் வெண்பாக்கள் 26

 அடைமழைக் காலம்
  அடிக்கும் வெயிலாய்
கொடைக்கானல் காலைக்
  குளிராய் - மடைதிறந்த
வெள்ளத்தைக் கண்ட
  விளைநிலமாய் நீயென்னை 
தெள்ளத் திருடிய 
       தீ .




தீபுகுந்த முட்காடாய்                       
  தீய்ந்தெரியும் என்வாழ்வில்
நீபுகுந்தாய் வெள்ளமென
  நீர்சுமந்து ! - கோபுரத்தின்
உச்சியினில்   வீசும்
  ஒளியாய் நுழைந்திட்டாய்
குச்சுக் குடிலில்
   குனிந்து.


சிவகுமாரன் 

31 கருத்துகள்:

  1. அப்ப்பா....எவ்வளவு அழகா காதல் வெண்பாக்கள்....கலக்குங்க!

    பதிலளிநீக்கு
  2. இத‌மான‌ வ‌ரிக‌ள் சிவா! காத‌லைப் பாடினாலும் க‌ட‌வுளைப் பாடினாலும்...!

    பதிலளிநீக்கு
  3. தீயும் நீயே நீரும் நீயேவா? சரிதான். அந்தாதீ வேறேயா? கலக்கல்.

    பதிலளிநீக்கு
  4. வெண்பா இலக்கணத்துக்குக் கட்டுப்பட்டு கவிதை எழுத முயன்றால் சில நேரங்களில் சொல்ல வருவதும் கட்டுப்பட்டு போகிறது. உண்மை கூற வேண்டுமானால், இதைவிட நன்றாய் உங்களால் எழுதியிருக்க முடியும். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  5. இனிமை கூறும் பாக்கள் ..
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. ஜி.எம்.பி யுடன் நான் உடன்படுகிறேன் சிவா !---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  7. இதமான காதல் நல்லாயிருக்கு சிவகுமார் !

    பதிலளிநீக்கு
  8. நன்றி வெங்கட்
    நன்றி மதுமதி
    நன்றி தென்றல்
    நன்றி நிலாமகள்
    நன்றி அப்பாஜி
    நன்றி அரசன்.
    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  9. கருத்துக்கு நன்றி GMB & காஷ்யபன் சார்.
    என்ன பிழை என்று தெரியவில்லை.
    கவிதை எழுதிய காலத்தில் (1996) வெண்பா இப்படித்தான் இருந்தது,.

    அடைமழைக் காலம்
    அடிக்கும் வெயிலாய்
    கொடைக்கானல் காலைக்
    குளிராய் - மடைதிறந்த
    வெள்ளம் புகுந்த
    விளைநிலமாய் நீயெந்தன்
    உள்ளம் புகுந்த
    ஒளி.

    தற்போது இடுகையிடும் போது அடுத்த வெண்பாவுக்கு அந்தாதி மாதிரி இருக்கட்டுமே என்று ஈற்றடியை மாற்றினேன்.

    அப்போது இந்தக் கவிதை யாருக்குப் பிடிக்க வேண்டுமோ அவ(ர்க)ளுக்குப் பிடித்திருந்தது.
    போதாதா ?

    பதிலளிநீக்கு
  10. பெண்பாவை ரசித்த வெண்பாவை நானும் மிக ரசித்தேன். பாராட்டுகள் சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  11. பிழையென்று ஏதும் கூறவில்லை சிவ குமாரா.படித்ததும் சாதாரணமாக எழும் ஒரு நிறைவு கிடைக்காததாலும் உன் திறமை உணர்ந்தவன் என்பதாலும் இதை விட நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றியதை எழுதினேன். பார்த்தாயா... உன் மேல் அக்கறை உள்ள திரு காஷ்யபனும் என் கருத்துடன் உடன் பட்டிருக்கிறார். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. இலக்கணம் மாறாத இனிய வெண்பாக்கள் சிறப்பு வாசிக்க நேர்த்தியாக பாராட்டுகள் ...

    பதிலளிநீக்கு
  13. நன்றி சீனுவாசன், கீதா, ஸ்ரீராம் , மாலதி & GMB சார்.
    அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. நல்ல வரிகள் சகோதரா, ரசித்தேன் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  15. நன்றி கோவைக்கவி
    நன்றி தினேஷ்குமார்

    பதிலளிநீக்கு
  16. ஒளியாய் நுழைந்திட்டாய்
    குச்சுக் குடிலில்
    குனிந்து.
    அடடா.. தமிழ் தவழ்ந்து அழகாய் நுழைகிறது.

    பதிலளிநீக்கு
  17. வெண்பாவின் இலக்கணம் இப்படித்தான். அதற்குள சொற்களைப் போடும்போது வலிமை நீர்ப்பது இயல்பென்றாலும். இதுவே அருமையென்றுதான் சொல்வேன். ஏனென்றால் வெண்பா இலக்கணம் சரளமாக வந்துவிட்டநிலையில் இன்னும் ஏராளமான சொற்புழக்கம் வநதுவிட்டால் சிவகுமரன் இன்னும் அருமை சேர்ப்பீர்கள். முன்பே நாம் பேசியதுபோல வேறுவேறு துறை எடுத்துப் படித்தவர்கள்தான் தமிழைக் காப்பாற்றப்போகிறோம். என்னுடைய மனமார்ந்த நன்றிகள் சிவகுமரன். எழுதுங்கள். காதல் பொருண்மையை சற்று சமூகப் பொருண்மைக்கும் மாற்றுங்கள். பயனுறட்டும் சமுகம்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி ரிஷபன் சார் தங்கள் ரசனைக்கு.

    பதிலளிநீக்கு
  19. மிக்க நன்றி ஹரணி சார்.
    வெண்பா எழுதிப் பழக காதல் தான் சுலபமான பாடு பொருளாக இருந்தது. வேறொன்றுமில்லை.

    \\\காதல் பொருண்மையை சற்று சமூகப் பொருண்மைக்கும் மாற்றுங்கள். பயனுறட்டும் சமுகம்.///

    என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்?
    எனது "கனலாய்ப் பிறக்கட்டும், இந்தாய்யா தாலி, தேர்தல் வெண்பாக்கள் , மே வெண்பாக்கள் , நாட்குறிப்பு , தமிழ் இவையெல்லாம் சமூகம் சார்ந்த வெண்பாக்களே. எனது முட்கள் முளைத்ததடா , சிலம்பின் புலம்பல் இவையெல்லாம் தாங்கள் படிக்கவில்லையா ? என் படைப்புக்களில் சமூகம் சார்ந்தவையே அதிகம் என்பதை என் முழு வலைப்பதிவுகளையும் பார்த்தால் உணர்ந்து கொள்வீர்கள்.

    பதிலளிநீக்கு
  20. நான் தேடும்போது நீங்கள் காணவில்லை...

    நீங்கள் தேடும்போது நான் காணவில்லை....

    பொறுமையாக படித்து கருத்திடுவேன்பா...

    மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்பா...

    பதிலளிநீக்கு
  21. எல்லாமே அவள்தானா! :) இனிமையாக இருக்கிறது வெண்பா!

    உங்களுக்கு என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. தாங்கள் குறிப்பிட்டதையெல்லாம் படித்திருக்கிறேன். நான் எழுதவேயில்லை நீங்கள் என்ற பொருளில் குறிப்பிடவில்லை. பிறதுறையினர் வெண்பா கற்று தேர்ந்திருக்கும் நிலையில் முழுக்கமுழுக்க சமுகப் பயனுக்காகப் பயன்படுத்தலாம் என்பதுதான் அந்த பொருள். மாறி பொருள் தந்துவிட்ட என் சொற்களுக்காக வருத்தம்.

    பதிலளிநீக்கு
  23. வந்து விட்டீர்களா மஞ்சு?நீங்கள் தட்டிக் கொடுப்பதற்காகத் தான் காத்திருக்கிறது கவிதைக் குதிரை. இனி நாலு கால் பாய்ச்சலில் பாயும்

    பதிலளிநீக்கு
  24. நன்றி ஹரணி சார்.
    நான் தான் தவறாக புரிந்து கொண்டேன் போலிருக்கிறது. தாங்கள் தான் மன்னிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  25. கவிதை அருமை! தீ அணைக்க ஒருவர் இருக்க நம்முள் கலங்கிய சிலர் இனி கலங்காதிருக்க!

    பதிலளிநீக்கு