திங்கள், அக்டோபர் 13, 2014

பிள்ளைக் குறள் 10


தீராத வேட்கைகொள் ! தேடல் நிறுத்தாதே!
ஊரே வியக்கும் உனை.

உனைவெல்ல  இங்கே ஒருவரும் இல்லை
நினைவில் இதனை நிறுத்து.

நிறுத்தாதே ஓட்டம்! நினைத்த இடத்தை
சிறுத்தைபோல் வேகமாய் சேர்.

சேர்ந்து படித்திடு! சின்னக் கருத்தையும்
கூர்ந்து கவனித்துக் கொள்.

கொள்ளாதே புத்தியில் குற்றம் குறைகளை!
தள்ளாதே நட்பைத் தவிர்த்து.

தவிர்ப்பாய் அரட்டை! தறுதலை நட்பு
கவிழ்க்கும்! விழிப்பாய் கணி!

கணிதம் அறிவியல் கற்றுத்தேர்! காசள்ளும்
புனித வழியாய்ப் புரிந்து.

புரிந்து படிப்பாய்! புரியாத ஒன்றை
தெரிந்தோர் தயவால் தெளி.

தெளிவாய் இருப்பாய்! திறனாய் உழைப்பாய்!
எளிதாய் அடைவாய் இலக்கு.

இலக்கைத் தொடும்வரை எள்ளி நகைப்பார்
கலங்காதே வீணரைக் கண்டு.                            10.

                                                                                      தொடரும்.....
-சிவகுமாரன்


அன்னையின் அரவணைப்பில் கைக்குள் வைத்து பொத்தி வளர்த்த பிள்ளை. சிறகு முளைக்கும் முன்னரே பிரிய வேண்டிய சூழ்நிலை.  விடுதியில் அவனும், வீட்டில் நாங்களுமாய் வேதனையான நேரம். புதிய சூழ்நிலை, புதிய இடம் , தன்னை விட அதி புத்திசாலியான  மாணவர்கள், தனிமை, பயம், தன்னால் முடியுமா என்னும் தயக்கம்..... இந்த இக்கட்டான நேரத்தில் என் மகனுக்காக  ஒவ்வொரு வாரமும் நான் எழுதி அனுப்பிய, இன்னும் எழுதிக் கொண்டே---யிருக்கிற  குறட்பாக்கள் இவை. குறள் இலக்கணத்தோடு அந்தாதி வடிவில் அமைந்தது இறைவனின் பேரருள்.  என்  மகனைப் போன்ற, இளமையில்  பெற்றோரைப் பிரிந்து, இலக்கை நோக்கி பயணிக்கும் எல்லா இலட்சிய மாணவர்களுக்கும் இந்த குறட்பாக்கள் சமர்ப்பணம்.


14 கருத்துகள்:

  1. அன்பு சிவா! நலம்தானே ? மணியான குறள் ஒவ்வொன்றும் . இவற்றை அருகிலுள்ள பள்ளிகளில் மாணவர் பார்வைக்கு வர ஏற்பாடு செய்யலாமே.. இன்னமும் பல சிவாக்கள் உருவாக உதவுமே!

    பதிலளிநீக்கு
  2. மனதிற்கு உற்சாகம் அளித்து , நிறைவளிக்கும் குறட்பாக்கள் அருமை..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே!

    பிள்ளைக்குத் தந்தகுறள்! பேசும் வகைமறந்தேன்!
    வெல்லம் நிறைந்த விருந்து!

    அத்தனையும் அரிய முத்துக்கள்!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. அன்பு மோகன்ஜி அண்ணா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்களின் வருகை பெருமகிழ்ச்சியை தருகிறது. இதுவரை 50 குரல் அந்தாதி எழுதியுள்ளேன் 100 எழுதிய பின்னர் தாங்கள் சொனபடி செய்யலாம் என்றிருக்கிறேன் . நன்றி .

    பதிலளிநீக்கு
  5. நன்றி இளமதி. பெருமை கொள்ளச் செய்கிறது தங்களின் குறள் வாழ்த்து.

    பதிலளிநீக்கு
  6. நெகிழப் படித்த விவரங்கள் நெஞ்சம்
    மகிழப் படித்தக் குறள்.

    பதிலளிநீக்கு
  7. துரை சார்! ஆஹா....

    நானும் கவிதைன்னு வானவில்லில் போட.டிருக்கேன் பாருங்க.. வெட்கமாக இருக்கு!

    பதிலளிநீக்கு
  8. அப்பா துரையின் அழகிய பின்னூட்டம்
    எப்போதும் போல இனிது.

    பதிலளிநீக்கு
  9. தங்கள் கவிதைகள் வேறு ரகம் மோகன் அண்ணா . ஜனரஞ்சக கவிதைகள் அவை.

    பதிலளிநீக்கு
  10. கண்டு தெளிதந்தை காண உரைசெய்தார்
    கொண்டுளம் வைத்துத் தெளி!
    அருமை அண்ணா!

    பதிலளிநீக்கு
  11. நன்றி விஜு.

    தங்கள் குறட்பாவில் மனம் நெகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  12. நலம் தானே சிவா...
    உங்களின் இப்பதிவை உரிமையுடன் என் முகநூல் பக்கத்தில் எடுத்தாண்டிருக்கிறேன். நன்றி!

    தங்கள் பிள்ளைக் குரல்களை எம் வழித் தோன்றல்களுக்கு காட்டுவிக்கும் படி, படி எடுத்தும் வைத்திருக்கிறேன். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  13. நலமே சகோதரி நிலா.
    தங்கள் முகநூல் முகவரி தாருங்கள்.

    பதிலளிநீக்கு