புதன், நவம்பர் 19, 2014

பிள்ளைக் குறள் 40



உழைத்துப் படிப்பாய்! உறுதியாய் தெய்வம்
அழைத்துக் கொடுக்கும் அருள்.

அருளென்று நம்பு! அகந்தை அகற்று!
பொருளைக் குவிக்கின்ற போது.

போதிய மட்டும் பொருள்தேடு! நிம்மதி
ஊதியத்தில் இல்லை உணர்.

உணர்ச்சிப் பெருக்கின் உறுதிகள் யாவும்
கணக்குத் தவறிடும்  காண்.

காண்பவை யாவும் கடவுளின் கைவண்ணம்.
வீண்பெருமை வேண்டாம் விடு.

விடுதலை என்பது வெற்றிக்குப் பின்தான்!
சுடும்வரை தாங்கிடு சூடு!

சூடான சொல்லும் சுயநல புத்தியும்
கேடாய் முடியுமாம் கேள்.

கேள்விகள் வெற்றிக் கதவின் திறவுகோல்!
கேள்விமேல் கேள்வியாய்க் கேள்.

கேளாதே வீணரின் கேலிகள் யாவையும்.
ஆளாகிக் காட்டு(ம்) அவர்க்கு.

அவப்பெயர் பெற்றால் அழித்தல் கடினம்.
தவம்போல் தவறைத் தவிர்.                                     40.
தொடரும்....

சிவகுமாரன் 

34 கருத்துகள்:


  1. வணக்கம்!

    பத்துக் குறள்களைப் பாலா் படித்துணா்ந்தால்
    முத்துப்போல் மின்னும் முகம்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா
      பத்து இல்லை அய்யா. இது வரை 60 எழுதியிருக்கிறேன். குறைந்ததது 100 எழுத ஆசை

      நீக்கு
  2. அருமையான அறிவுரைகள்
    சிறுவர்க்கு உகந்தது . ஏன் பெரியவர்களுக்குமே வாழ்த்துக்கள்......!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    சிந்தனைக்கு விருந்தாக அமைந்த கருத்துக்கள் பகிர்வுக்கு நன்றி
    என்பக்கம் சிறுகதையாகவாருங்கள். அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை):
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. பெற்றெடுத்த பிள்ளையோடு இக்குறளை தப்பாது
    பெற்றோரும் கற்றல் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொன்றும் பிரமாதம்...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. தமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1

    நன்றி...

    பதிலளிநீக்கு
  7. பிள்ளைக்குறள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும்தான். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. விடுதலை என்பது வெற்றிக்குப் பின்தான்!

    முத்தான பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
  9. அன்பின் சிவகுமாரா அருமையான அந்தாதி இலக்கொலிகள்
    கேள்விகள் வெற்றிக் கதவின் திறவுகோல்!
    கேள்விமேல் கேள்வியாய்க் கேள்.--- கேள்வி கேட்டுப் புரிந்து கொள்ளும் மனநிலையில் நாம் வளர்க்கப்படவில்லையே..!. நாம் பலரும் சிந்தனை இல்லாத அடிமைகள் என்றே எனக்குத் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் சந்ததியாவது கேட்டுத் தெளியட்டும் அய்யா.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே!

    அத்தனையும் அரிய சொத்துக்கள்!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்து எனக்குப் பெருமை சகோதரி நன்றி

      நீக்கு
  11. அந்தாதிக் சொற்கொண்டே அத்தனையும் கற்கண்டே
    தந்தீரே வாழ்க குறள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துக் குறளும் இனிக்கிறது அய்யா . நன்றி அய்யா

      நீக்கு
  12. அனைத்துக் குறளும் அருமை அண்ணா.
    ஆனால் கடைசி குறளின் ஈற்றடி கொஞ்சம் விளங்கவில்லை.
    தவம் போல் தவறைத் தவிர்.....

    தவம் செய்வது தவறு.... என்பதாய் பொருள் புரிந்து கொண்டேன்.
    நான் புரிந்து கொண்டது தவறா.... வேறு பொருள் உள்ளதா?
    ஓ.... அமைதியாய் தவறைத் தவிர் என்று பொருளா....?

    எழுதியவர் நீங்கள். நீங்களே விளக்கிவிடுங்கள் கவிஞர்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அருணா. முதலில் என் கண்ணைத் திறந்ததற்கு. தெளிவாய்த் தான் எழுதிக் கொண்டிருப்பதாக இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். . என் கவிதைகளுக்கு கோனார் தமிழ் உரை தேவையாய் இருக்கக் கூடாது என்பதை ஒரு கொள்கையாய் வைத்திருக்கிறேன். புரிதல் ஆளுக்கு ஆள் வேறுபடும் என்பதை இப்போது உணர்கிறேன்.
      "தவம் போல் தவறைத் தவிர் " - இந்த அடியில் தவறு செய்யாமல் வாழ்வது ஒரு தவம் போன்றது என்ற பொருளில் எழுதி இருக்கிறேன். "தவம் போன்ற தவறு" அல்ல. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் கெட்டுப் போவதற்கு வாய்ப்புகளும் சூழ்நிலையும் ஏராளம். தேர்வில் வெற்றி பெற்றதற்கே மது விருந்து அளிக்கும் பள்ளி மாணவர்கள் இன்று ஊருக்கு ஊர் காணக் கிடைக்கிறார்கள். தீய நண்பர்கள், இணையம், அலைபேசி வழிவரும் ஆபாசங்கள், மிகச் சுலபமாய் கிடைக்கும் போதைப் பொருட்கள், திரைப்படங்கள், ஊடகங்கள் இவையெல்லாம் மாணவர்களை திசை திருப்பக் கூடிய காரணிகள். இவற்றிலிருந்து ஒரு மாணவன் விலகிச் சென்று வாழவோ, வளரவோ முடியாது, இந்தச் சூழலில் தான் அவன் வளர வேண்டியிருக்கிறது. இவை எல்லாவற்றையும் கண்டுணர்ந்து ஆனால் இவை எதற்கும் ஆட்படாமல், வளர்வது என்பதே ஒரு தவம் போலத் தான். காட்டில் சென்று கண்மூடித் தியானிப்பது மட்டுமே தவம் அல்ல. தீயவற்றிலிருந்து விலகி ஒழுக்கமாய் வாழ்வதே ஒரு தவம் தான். இதைத் தான் " தவம் போல் தவறைத் தவிர்" என்று எழுதியிருக்கிறேன்.
      நன்றி சகோதரி

      நீக்கு
  13. வாழ்த்துகள்..மிக அருமை.

    பதிலளிநீக்கு
  14. விடுதலை என்பது வெற்றிக்குப் பின்தான்!
    சுடும்வரை தாங்கிடு சூடு!//

    குறளின் குரல் கணீரென! வருந்துகின்றேன் தம்பி வரா நாட்களுக்கு.

    பதிலளிநீக்கு
  15. அண்ணா,
    வணக்கம்
    நேரமிருக்கும் போது வாருங்கள் அண்ணா,
    http://manamkondapuram.blogspot.in/2014/11/blog-post.html#more
    நன்றி

    பதிலளிநீக்கு
  16. அண்ணா,
    மன்னிக்கவும்,
    தங்களின் புதிய பதிவு இது என்பதை அறியவில்லை.
    அதுவும் பிள்ளைக் குறள்.!
    உங்களின் பின்னூட்டத்திலிருந்து வந்து இங்கொரு பதிவை இட்டுப் போனேன்.
    பிறகுதான் அய்யத்தோடு வந்து பார்த்தால் புதிய பதிவு!
    நான் தான் தாமதமாய் வந்திருக்கிறேன்.

    தந்தை மகற்காற்று நன்றி யெனஅவையில்
    முந்தி இருக்கக் குறள்தந்தீர்! - சிந்தித்து
    மகனாற்று வானிந்த மைந்து பெறத்தந்தை
    யென்நோற்றான் கொல்லெனுஞ் சொல்“

    குறளின் குரலுக்கு என்றும் வலிமை உண்டண்ணா!
    த ம 4

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் கவிஞரே !

    பிள்ளைக் குறள்காட்டும் பேரறிவு எல்லாமே
    அள்ளக் குறையா அமுது !

    இன்றுதான் ஊமைக்கனவுகள் வலையூடாக தங்கள் வலைகண்டேன் ஆனந்தம் கொண்டேன் அருமையான படைப்புக்கள்
    இனி தொடர்வேன் என்றும் !

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு