திங்கள், டிசம்பர் 08, 2014

பிள்ளைக் குறள் 50




தவிர்ப்போரை நீயும் தவிர்த்திடு! பின்னால்
தவிப்பார் அவர்கள் தனித்து.

தனித்த திறம்தான் தலைமை வகிக்கும்.
தனித்தே நிமிர்வாய் தலை.

தலைவணங்கு! ஆனால் தலைகுனிவால் வாழ்வில்
நிலைகுலைந்து போகாமல் நில்

நில்லாதே எங்கும்! நிறுத்தாதே ஓட்டத்தை!
வெல்லாமல் ஓய்வெனில் வீண்.

வீணாக்கும் நேரத்தில் வெற்றிச் சுவடுகள்
காணாமல் போகும் கரைந்து.

கரைதொட்ட பின்னே களைப்பாறு! உண்டோ
இரைதேடிச்  சோர்ந்த எறும்பு? 

எறும்பாய் உழைப்பாய்! இரும்பாய் இருப்பாய்!
அறும்,பார்!  தடைகள் அகன்று.

அகன்றுசெல் தீயவர்  அண்டுமிடம் விட்டு!
நகர்ந்துகொள் தேவையில்லை நட்பு.

நட்பெனக்  கொள்ளுமுன் நன்மையும் தீமையும்
நுட்பமாய் ஆராய்ந்து நோக்கு.

நோக்கம் நிறைவேறும் நாள்வரை சோம்பலும்
தூக்கமும் தூரத் துரத்து.                                                                        50
 தொடரும் ....

சிவகுமாரன் 


24 கருத்துகள்:

  1. அருமையான குறள்கள்.
    படித்துப் பரவசம் ஆனேன்.
    த.ம.1

    பதிலளிநீக்கு
  2. எவ்விடத்தில் வளையவேண்டும் எப்போது ஓய்வெடுக்க வேண்டும் என குறுகத்தரித்து கூரியிருகிரீர்கள்!! அருமை அண்ணா!

    பதிலளிநீக்கு
  3. ///நோக்கம் நிறைவேறும் நாள்வரை சோம்பலும்
    தூக்கமும் தூரத் துரத்து. ///
    அருமை நண்பரே
    இக்குறள்களை அறிந்தால்
    வாழ்வில் தோல்வி ஏது

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அருமை... ரசித்தேன்...

    ஒய்வெனில் - ஓய்வெனில்...?

    பதிலளிநீக்கு
  5. தேவையான கருத்துகள் அருமை..வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள கருத்துக்கள். நட்பு தொடர்பான வரிகளை அதிகம் ரசித்தேன். ஏனென்றால் நட்பால் நான் பல பாடங்களைக் கற்றுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா.
      நல்ல பாடம் எனில் நாங்களும் அறியத் தரலாமே

      நீக்கு
  7. “இரைதேடிச் சோர்ந்த எறும்பில்லை இல்லை
    வரைமுட்டிச் சாய்கின்ற வான்“

    பிள்ளைக் குறள்கள் அனைத்தும் அருமை அண்ணா!
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரைமுட்டிச் சாய்கின்ற வான்.

      -ஆகா அருமையான சொற்பிரயோகம்.

      நீக்கு
  8. அத்தனையும் முத்துக்கள். அவசியமான கருத்துகள்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே!

    பெரும்பா நிகராய்ப் பெருநெறி சொல்லும்
    கரும்பாம் குறட்பா கனிந்து!

    மிகவும் அருமை! சிறப்பான கருத்துக்கள்!
    வாழ்த்துக்கள் சகோதரரே!

    த ம.4

    பதிலளிநீக்கு
  10. எல்லாக் குறள்களும் அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. வாழும் வகையைக் கற்றுத் தரும் குறள்கள்.

    பதிலளிநீக்கு
  12. வீணாக்கும்... மிகவும் ரசித்த குறள்.

    பதிலளிநீக்கு
  13. அனைத்தும் அமுத மொழிகள் ! ஆஹா அருமை அருமை ...!

    பதிலளிநீக்கு