திங்கள், ஏப்ரல் 13, 2015

பிள்ளைக்குறள் 60


துரத்திவரும் வெற்றி, தொலைந்திடும் தோல்வி!
சிரத்தையாய் உன்பணியைச் செய்.

செய்யத் துணிந்தால் சிகரம் தொலைவில்லை
தொய்வின்றி ஏறித் தொடு
.
தொடுவானை நீண்டுபோய்த் தொட்டுத் திரும்பும்.
கடும்முயற்சிக் கொள்வாரின் கை.

கைகூடும் நிச்சயம் காணும் கனவெல்லாம்்
கைவிடாமல் நீமுயலுங் கால்.

கால்போன போக்கில் கடக்காமல் வாழ்க்கையை
நூல்பிடித்தாற் போன்றே நடத்து.

நடத்தையும் செய்கையும் நன்றெனில் உந்தன்
இடத்தைப் பறிப்பவர் யார்?

யாருக்கும் சார்பின்றி யாரோடும் ஒத்துவாழ்
நீருக்கு உண்டோ நிறம்?

நிறம்மாறும் பச்சோந்தி போன்றொரு வாழ்க்கை
அறவழி அல்ல அறி.

அறியாமை, சோம்பல், அலட்சியம் மூன்றும்
குறிக்கோளை.வீழ்த்தும் குழி.

குழிகளும் மேடுகளும் கொண்டதே வாழ்க்கை.
வழிதனை நீயே வகு.          60.

8 கருத்துகள்:

  1. தங்களை வலையில் சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டது நண்பரே
    தொடர்ந்து வாருங்கள்
    தம 1

    பதிலளிநீக்கு
  2. நிறம், குழி உட்பட அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
  3. குறளும் அறிவுரையும் மிக மிக அருமை ! ஆழ்ந்து ரசித்தேன். பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. / யாருக்கும் சார்பின்றி யாரோடும் ஒத்துவாழ்
    நீருக்கு உண்டோ நிறம்?

    நிறம்மாறும் பச்சோந்தி போன்றொரு வாழ்க்கை
    அறவழி அல்ல அறி./
    முன் சொன்னதைக் கடைப்பிடிக்கும் போது ஒருவேளை இரண்டாவது போல் ஆக வாய்ப்பு இருக்கிறதா சிவகுமாரா.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் நன்றி.
    GMP அய்யாவிடம் மாட்டிக் கொண்டேனா? :)
    இரண்டும் வெவ்வேறானவை அய்யா. சார்பின்றி ஒத்து வாழ்தலும், பச்சோந்தியாய் மாறிக் கொண்டிருப்பதும் வேறு வேறான இயல்புகள். நன்றி

    பதிலளிநீக்கு