திங்கள், ஜனவரி 01, 2024

சபதம் எடுப்போமா

 ஆண்டு கழிந்தது ஆண்டு கழிந்தது

  அல்லல் போயிற்றா? - பல்
  ஆயிரம் ஆண்டுகள் நம்மைத் தொடர்ந்திடும்
  அவலம் போயிற்றா ?
மீண்டும் பிறந்திடும் ஆண்டினில் ஏதும்
  மேன்மை தெரிகிறதா ? - இல்லை
  மேய்கிற மாட்டை நக்கிடும் மாடாய்
  மேலும் தொடர்கிறதா?

நேற்றைப் போலே  இன்றும் இருந்தால்
  நாளைக்கென்ன பயன்? - அட
  நீயும் நானும் நீண்டு  வளர்ந்தோம்
  நிலத்திற் கென்ன பயன் ?
காற்றைப் போலே காலம் எல்லாம்
  வீசிட வேண்டாமா? - நம்
  காலம் முடிந்து போனதும் நம்மைப்
  பேசிட வேண்டாமா ?

நாற்றமெடுத்த சமுதாயத்தில்
  நமக்கு பங்கென்ன ? - அட
  நன்றாய் மூக்கைப் பொத்திக் கொண்டு
  நகர்வோம் வேறென்ன ?
மாற்றம் பிறக்க மகேசன் என்ன
  மண்ணில் பிறப்பானா ? - நம்
  மந்தையை  மேய்க்க மாயக் கண்ணன் 
  மறுபடி வருவானா ?

ஆண்டு பிறந்ததை கொண்டா டிடவோர்
  சபதம் எடுப்போமா ? - நமை
  ஆண்டு கொழுத்திடும் அரக்கரின் மேலொரு
  அம்பு தொடுப்போமா ?
கூண்டினில் ஏற்றி அவர்தம் முகத்திரை
  குத்திக்  கிழிப்போமா ? - நமை
   கொள்ளை அடிப்போர் கூடாரத்தை
   கூடி அழிப்போமா ?

ஓட்டுப் பொறுக்கிகள் காசுகள் தந்தால்
  உமிழ்ந்திட வேண்டாமா ? - அந்த
  ஊழல் பணத்தில் உனக்கும் பங்கா ?
  உதறிட வேண்டாமா ?
நாட்டுப் பற்றுள யாரும் லஞ்சம் 
  வாங்கிடத் துணிவாரா ? -இந்த
  நாட்டைப் பிடித்த நச்சாம் அதனை 
  நசுக்கிட வேண்டாமா ?



 கோடிக் கணக்கில் கொள்ளை  அடித்துக் 
  குவித்ததை   மீட்போமா  ?- அங்கே       
  குவிந்ததை  எல்லாம்   கொணர்ந்துநம் வறுமைக் 
  கோட்டை  அழிப்போமா  ?
கூடித் திருடும் கொள்ளையர் வீழ 
  குழிபறித் திடுவோமா - வெறுங் 
  கூச்சல் போட்டுப்  பலனிலை ; அதற்கோர் 
  கொள்கை வகுப்போமா ?

காசுக் காக நீதியை விற்கும்
  கயமை எதிர்ப்போமா ?-அவள் 
  கண்ணில் கட்டிய கறுப்புத் துணியை 
  கழற்றி  எறிவோமா ?
கோசம் வேண்டாம் கோர்ட்டுகள்  வேண்டாம் 
  குற்றம் தடுப்போமா  -அந்தக்
  கொள்ளையர் தம்மைக் கண்டால் கையில்  
   கோலை எடுப்போமா  ? 
       
கட்டும் வரிகள் போவது எங்கே
  கணக்குகள் அறிவோமா - பெரும்
   கார்ப்பரேட் டுகளின் கைக்கூ லிகளை
   களைந்து எறிவோமா ?
கொட்டும் மழையாய் குவிந்த வரியில்
  கொடுத்ததை கேட்போமா - புதுக்
  கொள்கைக் கூட்டணி கொண்டுநாம் வென்று 
  கோட்டையை மீட்போமா


மதத்தை வைத்து மனிதரைப் பிரிப்போர்
   முகத்திரை கிழிப்போமா- அந்த
மந்தையில் ஆடாய் மயங்கும் மனிதரின்
மடமை அழிப்போமா ?
விதைத்தது தானே முளைக்கும் - விசத்தை
வெட்டி எறிவோமா -  நம்
விழுதுகளேனும் சமூக நீதியில்
  வேர்விடச் செய்வோமா ?

அண்ணா பெரியார் கலைஞர் வழியில்
அரசியல் காண்போமா - இனி
ஆரிய சங்கிகள் அட்டூழியத்தை
அடியோ டறுப்போமா
மண்ணாள் வதுநம் மக்களின் முடிவெனும் 
   மகத்துவம் உணர்வோமா ? - இனி 
   மந்தை ஆடாய் வேண்டாம் , பாதையை 
   மாற்றத் துணிவோமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக