சனி, ஏப்ரல் 23, 2011

நீ வரும்வரை

எப்படி மனம் வந்தது 
உன் 
முதல் பிள்ளையைத் 
தவிக்கவிட்டு 
தலைப்பிரசவம் செல்ல ?


என்னிலிருந்து 
எல்லாவற்றையும் 
எடுத்துக் கொண்டு
ஏதோ கொஞ்சம்
மிச்சம் வைத்துவிட்டுப் போனாய் 
நீ வரும்வரை 
நிலைத்திருப்பதற்கு.

இப்போதுதான்
நடக்கக் கற்றுத்தந்தாய்
அதற்குள்
விரல்களை ஏன்
விடுவித்துக் கொண்டாய் ?


வாய்பிளந்து 
சோறூட்டச் சொன்னவனுக்கு
சமைக்கக் கற்றுத் தந்தாய்
கூலியாய்
பசியைப் பறித்துக் கொண்டு.


உனக்குத் தெரியுமா
இப்போதெல்லாம்-நம்
கொல்லைப்புறத்துச்
செடிகளுக்கு
குழம்பு ஊற்றித்தான்
வளர்க்கிறேன்.


இமைகளை எடுத்துக்கொண்டு
விழிகளை மட்டும்
விட்டுவிட்டுப் போனாய்
கூடவே
உறக்கத்தைய்ம் 
உடன் அழைத்துக் கொண்டு .


நினைத்த போது எழுந்து
அலுத்தபோது குளித்து
இரண்டுவேளை உண்டு
நான்கு வேளை தூங்கி
நன்றாக இருந்தாலும்
நரகமாய் இருக்கிறது
நீ இல்லாத பொழுதுகள்.


உன்
நினைவுச் சிலந்தியின்
எச்சில் வலைகளால்
பின்னப்பட்டிருக்கிறேன்
நீ
திரும்பி வருவதற்குள்
பாதியாய்
தின்னப்பட்டிருப்பேன்.

                        -சிவகுமாரன்
                         21.07.1998

32 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

கோடை விடுமுறையில்
அனைவரும் அனுபவிக்கப்போகும்
துயருக்கு அழகாகக் கட்டியம் கூறி இருக்கிறீர்கள்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

பொதுவாக எல்லோரும் அனுபவித்த, அனுபவித்துக்கொண்டிருக்கிற, அனுபவிக்கப்போகும் யதார்த்தமான மிகவும் அருமையான, அனுபவக் கவிதை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

எல் கே சொன்னது…

நாளையில் இருந்து என் நிலை இதுதான் தலைவரே

ஸ்ரீராம். சொன்னது…

உணர்வுக் கவிதை.

RVS சொன்னது…

தொண்ணுத்தெட்டுல நூறு மார்க் வாங்கிய கவிதை சிவா! பாதியை தின்னப்பட்டிருப்பேன் அப்படின்னு சொன்னீங்க பாருங்க.. அங்க இருக்கு பொறி! அற்புதம். ;-)))
என்ன எல்.கே... தங்கமணி ஊருக்கு போய்ட்டா... அப்படின்னு ஜனகராஜ் மாதிரி துள்ளிக்குதிக்க போறீங்களா!!!

சென்னை பித்தன் சொன்னது…

எல்லா ஆண்களுக்கும் ஏற்படும் உணர்வுகளை அருமையான கவிதையாக வ்டித்து விட்டீர்கள்!
RVS,பாவம் எல்கே!நாளை முதல் சுயம்பாகம் வேறோ என்னவோ!

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

95ல நான் பண்ணினதை 98ல் நீங்க பண்ணியிருக்கீங்க.

கவலைப்படாதீங்க சிவா.தலைச்சன் புள்ளையைக் கவனிக்க இன்னுமொரு புள்ளையுடன் வந்து கவனிப்பாங்கன்னு சொல்ல வந்தேன்.அப்பறம்தான் வருஷம் கண்ணுல பட்டது.

பகிரப்படாத உணவும் உறவும் மறுநாளைக்கு உதவாது சிவா.

அற்புதம்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கொல்லைப்புறத்துச்
செடிகளுக்கு
குழம்பு ஊற்றித்தான்
வளர்க்கிறேன்.//
கவிதைக்குப் பாராட்டுக்கள்.

Unknown சொன்னது…

.....................
.....................
.....................
.....................

என் உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

என்னை 26- 01- 2006 க்கு கொண்டுசென்றுவிட்டது இந்த கவிதை.

Unknown சொன்னது…

நன்றாக இருந்தாலும்
நரகமாய் இருக்கிறது

Contradiction ????

G.M Balasubramaniam சொன்னது…

Anpin sivakumaara, NAAN 1965-L ANUPAVITHTHU EZUTHIYATHAI NEE 1998-L EZHUTHIYIRUKKIRAAI.(PAARKKA EN PATHIVU PIRIVIN VAATTAM")ANPIL KATTUPPATTAVARKAL PATUM THUYAR ELLORUKKUM PAOTHUVAANATHU THAANO.?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை. பொதுவாய் எல்லா ஆண்களும் அனுபவிக்கும் விஷயத்தினை அழகிய கவிதையாய்ச் சொல்லி இருக்கீங்க சிவகுமாரன்..
கார்த்திக், நாளையிலிருந்து நளபாகமா!! நடக்கட்டும்…

பத்மநாபன் சொன்னது…

முதல் பிள்ளையை விட்டு விட்டு தலைப் பிரசவம் ..... அன்பின் நெருக்கம் காட்டும் வரி.
வயிற்றில் சுமக்கும் பிள்ளை ஒருபுறம் நெஞ்சில் சுமக்கும் பிள்ளை ஒருபுறம் என அவர்கள் கடக்கும் காலம் முன்பு நம் வலி ஒன்றும் இல்லை

Muruganandan M.K. சொன்னது…

"..நான்கு வேளை தூங்கி
நன்றாக இருந்தாலும்
நரகமாய் இருக்கிறது
நீ இல்லாத பொழுதுகள்..."

பிரிவின் துயர் மனதைப் பிசைகிறது. என்றும் எனக்கு வேண்டாம் என்று வேண்டுகிறது.

thendralsaravanan சொன்னது…

சிவகுமாரனுக்கு கடவுள் பக்தியும் அதிகம் ;கட்டியவளின் மேலும் பக்தி அதிகம்.
வாழ்க வளமுடன்!

ஹேமா சொன்னது…

ம்ம்ம்...தனிமை கொடுமை !

meenakshi சொன்னது…

இப்படி ஒரு அன்பா! மலைப்பாக இருக்கிறது.

குறையொன்றுமில்லை. சொன்னது…

உங்க அன்பு பிரமிக்க வைக்கிரது. ம்ம்ம்
கொடுத்து வச்சவங.

Nagasubramanian சொன்னது…

கடைசி பத்தி மிகவும் அருமை

ம.தி.சுதா சொன்னது…

////இப்போதுதான்
நடக்கக் கற்றுத்தந்தாய்
அதற்குள்
விரல்களை ஏன்
விடுவித்துக் கொண்டாய் ?/////

சகோதரம் ஒரு துன்பம் இரு இன்பத்தை தரும் காத்திருங்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

நிரூபன் சொன்னது…

சகோ, கொஞ்சம் பிசி, இன்று இரவு வந்து கவிதையுடன் ஐக்கியமாகிறேன்.

மன்னிக்கவும் சகோ.

ரிஷபன் சொன்னது…

உன்
நினைவுச் சிலந்தியின்
எச்சில் வலைகளால்
பின்னப்பட்டிருக்கிறேன்
நீ
திரும்பி வருவதற்குள்
பாதியாய்
தின்னப்பட்டிருப்பேன்

வாவ்.. அழுத்தமாய் உணர்வுகள் பதிந்திருக்கின்றன.. மிக ரசித்த கவிதை

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

மனதுக்குள் சுமக்கும் அன்பினை... அதன் பிரிவு தரும் நிரந்தமற்ற இந்த பிரிவினை... மெல்லிய உணர்வினை... அழகாக வரியில் செதுக்கியுள்ளீர்கள் நண்பா... வாழ்த்துகள்....

நிரூபன் சொன்னது…

எப்படி மனம் வந்தது
உன்
முதல் பிள்ளையைத்
தவிக்கவிட்டு
தலைப்பிரசவம் செல்ல ?//

முதல் பிள்ளையை- இங்கே கணவனை முதல் பிள்ளையாக கவிஞர் விளிக்கிறாரா/
முதலாவதாக பிறந்த பிள்ளையை கவிஞர் விளிக்கிறாரா என்பது தொக்கி நிற்கும் வினாவாகிறது.

ஆரம்ப வரிகளே...பூடகமாய்.. உணர்வுகளை நிறைக்கிறது.

நிரூபன் சொன்னது…

என்னிலிருந்து
எல்லாவற்றையும்
எடுத்துக் கொண்டு
ஏதோ கொஞ்சம்
மிச்சம் வைத்துவிட்டுப் போனாய்
நீ வரும்வரை
நிலைத்திருப்பதற்கு.//

அவ்வளவு அன்பா, உயிரை மட்டும் எடுத்துக் கொண்டு, சுவாசத்தை மட்டும் மிச்சம் விட்டுச் சென்று விட்டா என்று எண்ணத் தோன்றுகிறது..
தவிப்பு, பிரிவுத் துயர், ஏக்கம் நிறைந்த மௌன மொழிகள் கவிதையின் வரிகளாக இங்கே.

நிரூபன் சொன்னது…

இப்போதுதான்
நடக்கக் கற்றுத்தந்தாய்
அதற்குள்
விரல்களை ஏன்
விடுவித்துக் கொண்டாய் ?//

இதனை உணர்வின் வரிகள் என்று விளிப்பதை விட, உண்மை அன்பின் சொற் பிரயோகங்கள் என்று கூறுவதே தகும்..
.....முடியல பாஸ்...
பல வருடங்களுக்கு முன்பு நீங்கள் எழுதியிருந்தாலும்,
என மனதில் மட்டும் இவ் வரிகள் அடிக்கடி வந்து போகின்றன.
பட்டென மனதில் பதிந்து விடுகிறது.

நிரூபன் சொன்னது…

உனக்குத் தெரியுமா
இப்போதெல்லாம்-நம்
கொல்லைப்புறத்துச்
செடிகளுக்கு
குழம்பு ஊற்றித்தான்
வளர்க்கிறேன்.//

வீட்டில் சமையல் நீங்கள் தான் என்பதையு,
இவ்வளவு அழகாக சொல்லுறீங்களே.
நிஜமாவே நம்புறோம் சகோ.

நிரூபன் சொன்னது…

கவிதையில் பிரிவுத் துயரம், ஏக்கம், தனிமையின் தவிப்பு, உண்மை அன்பின் உணர்வுகளின் நிஜமான வார்த்தைகள் வெளித் தெரிகின்றன.

நீ வரும் வரை; புதிய வரவொன்றோடு, தன் புன்னகையினையும் வரவேற்க காத்திருக்கும் ஜீவனின் பாடல்...

புன்னகை- இங்கே கவிஞரின் இல்லாளை நான் சுட்டுகிறேன்.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அற்புதமான பிரிவு கவிதை

இரவின் நீளம் விழிக்கையில் தெரியும்
உறவின் ஆழம் பிரிகையில் புரியும் !

சாய்ராம் கோபாலன் சொன்னது…

பக்கத்து வீட்டு பொம்பளையை பிரசவத்துக்கு அனுப்பிவிட்டு அப்படி என்ன புலம்பல் சிவா ?

சிவகுமாரன் சொன்னது…

அய்யய்யோ இதென்ன வம்பா போச்சு ?
-- இப்படி ஒரு நெனைப்பு எப்படி வந்துச்சு.? இது சத்தியமா என் தர்மபத்தினிக்கு எழுதினது.
அப்ப எங்க பக்கத்து வீட்டுல ஒரு தாத்தா பாட்டி தான் இருந்தாங்க சாய் .

SOS சொன்னது…

மிக அழகானதொரு உணர்வுக் கவிதை. மிக ரசித்தேன்...