திங்கள், அக்டோபர் 13, 2014

பிள்ளைக் குறள் 10


தீராத வேட்கைகொள் ! தேடல் நிறுத்தாதே!
ஊரே வியக்கும் உனை.

உனைவெல்ல  இங்கே ஒருவரும் இல்லை
நினைவில் இதனை நிறுத்து.

நிறுத்தாதே ஓட்டம்! நினைத்த இடத்தை
சிறுத்தைபோல் வேகமாய் சேர்.

சேர்ந்து படித்திடு! சின்னக் கருத்தையும்
கூர்ந்து கவனித்துக் கொள்.

கொள்ளாதே புத்தியில் குற்றம் குறைகளை!
தள்ளாதே நட்பைத் தவிர்த்து.

தவிர்ப்பாய் அரட்டை! தறுதலை நட்பு
கவிழ்க்கும்! விழிப்பாய் கணி!

கணிதம் அறிவியல் கற்றுத்தேர்! காசள்ளும்
புனித வழியாய்ப் புரிந்து.

புரிந்து படிப்பாய்! புரியாத ஒன்றை
தெரிந்தோர் தயவால் தெளி.

தெளிவாய் இருப்பாய்! திறனாய் உழைப்பாய்!
எளிதாய் அடைவாய் இலக்கு.

இலக்கைத் தொடும்வரை எள்ளி நகைப்பார்
கலங்காதே வீணரைக் கண்டு.                            10.

                                                                                      தொடரும்.....
-சிவகுமாரன்


அன்னையின் அரவணைப்பில் கைக்குள் வைத்து பொத்தி வளர்த்த பிள்ளை. சிறகு முளைக்கும் முன்னரே பிரிய வேண்டிய சூழ்நிலை.  விடுதியில் அவனும், வீட்டில் நாங்களுமாய் வேதனையான நேரம். புதிய சூழ்நிலை, புதிய இடம் , தன்னை விட அதி புத்திசாலியான  மாணவர்கள், தனிமை, பயம், தன்னால் முடியுமா என்னும் தயக்கம்..... இந்த இக்கட்டான நேரத்தில் என் மகனுக்காக  ஒவ்வொரு வாரமும் நான் எழுதி அனுப்பிய, இன்னும் எழுதிக் கொண்டே---யிருக்கிற  குறட்பாக்கள் இவை. குறள் இலக்கணத்தோடு அந்தாதி வடிவில் அமைந்தது இறைவனின் பேரருள்.  என்  மகனைப் போன்ற, இளமையில்  பெற்றோரைப் பிரிந்து, இலக்கை நோக்கி பயணிக்கும் எல்லா இலட்சிய மாணவர்களுக்கும் இந்த குறட்பாக்கள் சமர்ப்பணம்.


செவ்வாய், செப்டம்பர் 30, 2014

ஒரு தேவதையும் சில தெய்வங்களும்.




கொள்ளையர்களின் கூடாரங்கள் 
கோயிலாய் பரிமளிப்பதால்
குற்றவாளிகள் கும்பிடப்படும் 
காலமிது.

கர்ப்பக்கிரகம் கதவடைக்கப்பட்டதில்
பரிதவித்துப் போகிறார்கள்
பக்தர்கள்.
பாவம்....
பிரசாதம்  தின்றே 
பிழைப்பு நடத்தியவர்கள்.

உழைத்துப் பிழைக்க 
வழி தெரியாதவர்கள் 
வன்முறை  முகம்காட்டி
வழி மறிக்கிறார்கள்.
நீதி தேவதையை 
நிந்திக்கிறார்கள்.

ஆனாலும் 
நிந்தனைகளாலும் 
வந்தனைகளாலும் 
நிலை தடுமாறாமல்
நிமிர்ந்து நிற்கிறாள். 
அவள் 

அடுத்த வேட்டைக்கு 
ஆயத்தமாகிறாள்.
கண்ணில் கட்டிய 
கருந்துணியோடும்
கையில் ஏந்திய 
கொடுவாளோடும்.

பயந்துபோய் கிடக்கின்றன(ர்)
இன்னும் சில 
தினவெடுத்த தெய்வங்களும் 
தின்று கொழுத்த  பக்தர்களும்.
சிவகுமாரன் 


சனி, செப்டம்பர் 13, 2014

காதல் வெண்பாக்கள் 45


கவிதை 1

(படத்துக்குக் கவிதை)

பூத்துக் குலுங்குதையா

(வெண்பா அந்தாதி) 

எப்ப வருவீக ? ஏங்கித் தவிச்சிருக்கேன்.
வெப்பப் பெருமூச்சில் வெந்திருக்கேன் - அப்பப்பா
காத்தைப்போல் வந்தீக! கன்னி மனசெல்லாம்
பூத்துக் குலுங்குதையா பூ.

பூக்கூடை தூக்கி புறப்பட்டால், நான்கோர்த்த
பூகூட வாடிப் புலம்புதையா - பூகூட
சேர்ந்திருக்கும் நாராகச்  சேர்ந்து மணம்வீச
தேர்ந்தெடுத்து நாளொன்று சொல்.

சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய் மனம்திருடி!
எல்லாம் இருந்தெனக்கு ஏதுமில்லை - பொல்லாத
காதல் புகுந்து கரைக்குதையா தேகத்தை !
வாதைக்கு வைத்தியமாய் வா!

வாசற் படியெங்கும் வந்திருந்து நீபோன
வாசம் கலந்து வழியுதய்யா - வாசற்
படியாய்த் தவமிருந்து பார்த்திருக்கேன் உன்னை
விடியாப் பொழுதில் விழித்து.

விழித்தால் கனவு விலகுமென  எண்ணி
விழி-தாழ் திறக்கவில்லை வீணாய்! - விழித்து
உனைத்தேடி வாசலில் உட்கார்ந்தேன், ஆனால்
எனைத்தேடி யார்தருவார் இங்கு?

-சிவகுமாரன் 

கவிதை 2
(விருப்பக் கவிதை)

கேட்பாரில்லா  கீதாஞ்சலி 


சலனமற்று ஓடிக்கொண்டிருக்கிறது
நதி.
உருட்டிச் சிதைத்த
கூழாங்கற்களின்
குரலை அமுக்கி.                                        

விண்முட்ட பறக்கிறது.
வெண்ணிறக் கொடி .
குருதிச் சாந்தில்
குழைத்து எழுப்பிய
கம்பத்தின் உச்சியில்.                        

எடுத்து உரச எவருமின்றி
பெட்டிக்குள் கட்டுண்டு
அடுக்கடுக்காய் தீக்குச்சிகள்.
ஒரு
வனத்தையே எரிக்கும்
வன்மத்துடன்.                                        

கூட்டைச் சிதைத்து
விரட்டியடித்த பின்
வேகவேகமாய்
புனரமைப்பு வேலைகள்.
பறவைக்கூட்டில்
பாம்புகளைக்  குடியேற்ற.                  

கிளிகளும் குயில்களும்
கீதாஞ்சலி இசைக்கின்றன.
கேட்பாரற்றும்
கிளைகளற்றும்!                                      

ஒப்பாரிப் பாடலில்
ஒளிந்து கொண்டிருக்கிறது.
ஓர் அறைகூவல்.                                            
சிவகுமாரன் 

காதல் வெண்பாக்கள் 45

சனி, ஆகஸ்ட் 30, 2014

ஊடல்




சின்னக் கதிரொளி
  சன்னல்வழி வந்து
  கன்னத்தைத் தொட்டதடி.
வண்ணக் கனவுகள்
  மெல்லக் கலைந்தது
  உள்ளமும் சுட்டதடி.

நேற்றுக் கனவினில்
  நீயிருந்தாய் - அந்த
  நிம்மதி போனதடி.
வேற்று உலகினில்
  நாமிருந்தோம் - இன்று
  வேதனை மிஞ்சுதடி.

தூக்கக் கனவுக்குள்
  நீயிருந்து - எனைத்
  தொட்டுத் தழுவுகிறாய்
ஏக்கம் பெருகிட
  கண்விழித்தால் - எனை
  விட்டு நழுவுகிறாய்

பக்கத்தில் நீமட்டும்
  வந்துவிட்டால்- சோகம்
  பாதி குறையுமடி
துக்கத்தை உன்னிடம்
  சொல்லிவிட்டால் -அந்த
  மீதியும் போகுமடி.

கொஞ்சல் மொழிதனை
  கேட்டுவிட்டால் -ஒரு
  துன்பமும் இல்லையடி
நெஞ்சில் தலைவைத்து
  நீபடுத்தால்- மனம்
  நிம்மதி கொள்ளுமடி.

ஊடுதல் காமத்திற்(கு)
  இன்பமென்று- நான்
  உள்ளம் மகிழ்ந்தேனடி
கூடி முயங்கிடும்
  காமமில்லை - எனக்
  கூறிப் பறந்தாயடி.

ஓயாது  உன்பெயர்
  சொல்லிச் சொல்லி- என்
  நெஞ்சு  துடிக்குதடி. 
நீயதை ஏனடி
  நம்பவில்லை - மனம்
  வெந்து துடிக்குதடி,


                       -சிவகுமாரன்

சனி, மே 24, 2014

காதல் வெண்பாக்கள் 40


பேர்த்தெடுத்துச் சென்றதடி உன்பிரிவு நெஞ்சத்தை 
வார்த்தை இழந்ததடி வாயிதழும் - பார்த்துப் 
பழுதாகிப் போனதடி பார்வை ! தினமும் 
அழுதநீர் ஆனதடி ஆறு.



ஆறாத் துயராய்  அகலா நெடுங்கனவாய்
மாறா வடுவாய் மனதுக்குள் - சூறா 
வளியாய்ப் புகுந்து வலுவாய்ப் புரட்டி 
வலியாய்  நிறைந்தாய் வதைத்து.
-சிவகுமாரன் 

வியாழன், மே 01, 2014

விற்பனைக்கு


சாராயம் வித்தீங்க
சகிச்சுக்கிட்டோம்
இட்லி தோசை வித்தீங்க
ஏத்துக்கிட்டோம்
தண்ணியையும் வித்தீங்க
தாங்கிக்கிட்டோம்

இனிமே எதை விப்பீங்க?
காத்தை பிடிச்சு
காசாக்குங்க

பத்தலைனா
எங்களை வித்துருங்க
வாங்கிக்க இருக்காங்க
வசதியா சில பேரு
ஏலாம கெடக்குறோம்
எங்கள்ள பல பேரு.

புதன், ஏப்ரல் 09, 2014

ஓட்டுக் கேட்டு வாராங்களே














தேர்தல் நெருங்கிருச்சு
திருவிழா போல் ஆகிருச்சு
ஊர்முழுக்க போஸ்டர் ஒட்டி
விளம்பரங்க பெருகிருச்சு 
ஓட்டுக் கேட்டு வாராங்களே செல்லையா - அதில
ஒருத்தன் கூட உருப்படியா இல்லைய்யா.


வெள்ளை வேட்டி துண்டு போர்த்தி 
விதவிதமா மீசை வச்சு 
கள்ளப்பணம் கருப்புப்பணம்
கரன்சியாக மாத்திக்கிட்டு
கொள்ளைக்காரன் ஒட்டுக் கேட்டு வார்றாம்மா- அவன்
கொள்ளையில உனக்கும் பங்கு தார்றாம்மா.

முடிச்சவிக்கிப் பயல்களெல்லாம்
முகமூடி போட்டுக்கிட்டு
அடிச்ச கொள்ளை போதாதுன்னு
அரசியலில் புகுந்துகிட்டு
நடிக்கிறானே  நல்லவன்போல் செல்லையா   -அவனை
நம்பி மோசம் போகலாமோ சொல்லய்யா.

காடு கழனியெல்லாம்
காசாக்கி வித்துப்புட்டான்
ஆடு மேச்ச புறம்போக்கு
நெலத்த எல்லாம் அமுக்கிப்புட்டான் 
வீடு தேடி வாராண்டி செல்லம்மா - நீ
வெளக்கமாத்தை கையிலெடுத்து நில்லம்மா.

தோளில துண்டு போட்ட
தோழரெல்லாம் சீட்டுக்காக
காலில மானம்கெட்டு
கவுத்து விழுந்து கெடக்குறாக,
ஆளில்லாம போயிட்டோமே  கண்ணையா -இப்ப
அனாதையா ஆகிட்டோமே  என்னய்யா.

காடு வெளையவில்லை
கழனி நெறையவில்ல
ஆடுமாடு மேய்க்க கூட
ஆத்தாடிவழியுமில்லே
மாடுபோல ஒழைக்கிறோமே செல்லம்மா-நம்மை
மனுசனாக மதிக்க யாரும் இல்லம்மா.


வடிக்க அரிசி தந்தான் 
எரிக்க விறகு இல்ல
படிக்க கம்ப்யூட்டர் தந்தான்,
கனெக் ஷனுக்கு கரண்ட் இல்ல'
குடிசையில கொடுத்ததெல்லாம் சின்னய்யா - உன்னை 
குடிக்க வச்சே புடிங்கிட்டானே என்னய்யா. 

அஞ்சு வருஷம் நம்மை
அடிமையாக நடத்திப்புட்டு
கொஞ்சநஞ்சம் இருப்பதையும்
கொள்ளை அடிக்க திட்டம் போட்டு 
பஞ்சமா பாவி வாரான் செல்லம்மா - நீ
பாத்துக் கொஞ்சம் சூதனமா நில்லம்மா.

                                                                                                     -சிவகுமாரன்

பாடியிருப்பவர்கள் : பிரபு  & விக்கி 


சனி, மார்ச் 22, 2014

ஒப்பனை



ஒப்பனைகளில் 
ஒளிந்து கொண்டிருக்கிறது 
வயது.

கவிதைக்கு அழகு 
கற்பனை எனில் 
உடலுக்கு அழகு 
ஒப்பனை.

வழித்து எறிந்து 
ஒழித்து விட நினைத்தாலும் 
கடமை முடியும் முன் 
கணக்கை முடிக்க வரும்  
காலனின் வருகையை 
கண் மறைப்பதில் 
வெற்றி கண்டு விடுகிறது.
ஒவ்வொரு முறையும் 
ஒப்பனை.

உண்மையை மறைப்பதால் 
தலை குனிந்தாலும் 
தன்னம்பிக்கை தருவதால் 
தலை நிமிர்ந்து விடுகிறது 

ஒப்பனை 
அதற்கு 
ஒப்பிலை.

சிவகுமாரன் 

சனி, பிப்ரவரி 22, 2014

ஒருத்தனையுங் காணலியே!



                                                         கவிஞர்.சுந்தரபாரதி 

காரு போட்டு  ஓடிவந்து கையெடுத்து சலாம் போட்டு 
அக்கான்னு தங்கச்சின்னு அவசரமா ஒறவு சொல்லி  
ஓட்டு கேக்க வந்தாங்களே சின்னாத்தா - இப்போ 
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?

சாதி நம்ம சாதியின்னா தாயே சரணமின்னா 
ஒங்க வீட்டுப்  புள்ளையின்னா ஓட்டுப்போட வேணுமின்னா 
ஓட்டுப்போட்ட கையோட சின்னாத்தா -இப்போ
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?

வீதியெல்லாம் தோரணங்க வெதவெதமா கொடியைக்கட்டி 
சாலையெல்லாம் தூள்பறக்க சரஞ்சரமா "பிளேசர்" விட்டு
ஓட்டு கேக்க வந்தாங்களே சின்னாத்தா-இப்போ
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?

மல்லுவட்டுத் துண்டு போட்டு மைக்குவச்சு விளம்பரங்க
வாழ்வு  மலருமின்னா வறுமை தொலையுமின்னா
போடுங்கம்மா ஓட்டுயின்னா பொடலங்காயைப் பாத்துயின்னா
ஓட்டுக் கேக்க வந்தாங்களே சின்னாத்தா-இப்போ
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?

ஏழை எளியதுக எல்லார்க்கும் நன்மையின்னா
வேலை கெடைக்குமின்னா வெலைவாசி குறையுமின்னா
சாலை தெருவிளக்கு சர்க்காரு வசதியின்னா
போட்ட வெளக்கு  கூட சின்னாத்தா -இப்போ
பொசுக்குன்னு நின்னுபோச்சே என்னாத்தா? 

தாலிக்குத் தங்கந்தாரேன், தாளிக்க  வெங்காயந் தாரேன்
கூலிக்கு வேலை தாரேன் கூப்பிட்டாக்க ஓடிவாரேன்
ஆட்சிக்கே வந்துட்டாக்க அத்தனையும் செஞ்சு தாரேன்
ஓட்டுபோட வேணுமின்னா சின்னாத்தா -இப்போ
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?

வானம்  மழை பெய்யவில்லை வயக்காடும் வெளயவில்லை
கையிலே காசுமில்லை கடங்கொடுக்க யாருமில்லை
குண்டி கழுவக் கூட சின்னாத்தா -இப்போ
குளத்திலயும் தண்ணியில்லே என்னாத்தா?

குடிக்க இப்போக் கூழுமில்லே குடிசையில வெளக்குமில்லே
கோதுமைக்கும் மண்ணெண்ணைக்கும் கூட்டம் குறையவில்லை
அங்காடிக் கார்டுக்கு அரிசி கெடைக்கவில்லை
எறகு மொளச்ச விலை இன்னும் இறங்கவில்லை
ஓட்டுக்  கேக்க வந்தாங்களே சின்னாத்தா -இப்போ
ஒருத்தனையுங்  காணலியே என்னாத்தா?
   

வியாழன், அக்டோபர் 24, 2013

வளி வலி




பலூனுக்குள் நுழையும் காற்றாய் 
தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.
பருக்கும் சுகத்தை நுகரவும் 
வெடிக்கும் தருணத்தை உணரவும் 
முடியாமல்.

உணர்ச்சியற்று 
ஊதும் உதடுகளுக்கும் 
கைகுலுக்க காத்திருக்கும் 
காற்று வெளிக்கும் 
தெரிவதேயில்லை 
நுரையீரல் காற்றின் 
நுண்ணிய வலிகள்

சிவகுமாரன்