ஞாயிறு, ஜனவரி 01, 2012

உறுதி எடுப்போமா ?



ஆண்டு கழிந்தது ஆண்டு கழிந்தது
  அல்லல் போயிற்றா? - பல்
  ஆயிரம் ஆண்டுகள் நம்மைத் தொடர்ந்திடும்
  அவலம் போயிற்றா ?
மீண்டும் பிறந்திடும் ஆண்டினில் ஏதும்
  மேன்மை தெரிகிறதா ? - இல்லை
  மேய்கிற மாட்டை நக்கிடும் மாடாய்
  மேலும் தொடர்கிறதா?


நேற்றைப் போலே  இன்றும் இருந்தால்
  நாளைக்கென்ன பயன்? - அட
  நீயும் நானும் நீண்டு  வளர்ந்தோம்
  நிலத்திற் கென்ன பயன் ?
காற்றைப் போலே காலம் எல்லாம்
  வீசிட வேண்டாமா? - நம்
  காலம் முடிந்து போனதும் நம்மைப்
  பேசிட வேண்டாமா ?


நாற்றமெடுத்த சமுதாயத்தில்
  நமக்கு பங்கென்ன ? - அட
  நன்றாய் மூக்கைப் பொத்திக் கொண்டு
  நகர்வோம் வேறென்ன ?
மாற்றம் பிறக்க மகேசன் என்ன
  மண்ணில் பிறப்பானா ? - நம்
  மந்தையை  மேய்க்க மாயக் கண்ணன் 
  மறுபடி வருவானா ?


ஆண்டு பிறந்ததை கொண்டா டிடவோர்
  சபதம் எடுப்போமா ? - நமை
  ஆண்டு கொழுத்திடும் அரக்கரின் மேலொரு
  அம்பு தொடுப்போமா ?
கூண்டினில் ஏற்றி அவர்தம் முகத்திரை
  குத்திக்  கிழிப்போமா ? - நமை
   கொள்ளை அடிப்போர் கூடாரத்தை
   கூடி அழிப்போமா ?


ஓட்டுப் பொறுக்கிகள் காசுகள் தந்தால்
  உமிழ்ந்திட வேண்டாமா ? - அந்த
  ஊழல் பணத்தில் உனக்கும் பங்கா ?
  உதறிட வேண்டாமா ?
நாட்டுப் பற்றுள யாரும் லஞ்சம் 
  வாங்கிடத் துணிவாரா ? -இந்த
  நாட்டைப் பிடித்த நச்சாம் அதனை 
  நசுக்கிட வேண்டாமா ?

 கோடிக் கணக்கில் கொள்ளை  அடித்து
  குவித்ததை   மீட்போமா  ?- அங்கே       
  குவிந்ததை  எல்லாம்   கொணர்ந்துநம் வறுமைக் 
  கோட்டை  அழிப்போமா  ?
கூடித் திருடும் கொள்ளையர் வீழ 
  குழிபறித் திடுவோமா - வெறுங் 
  கூச்சல் போட்டு பலனிலை ; அதற்கோர் 
  கொள்கை வகுப்போமா ?

உண்ணா விரதம் ஊர்வலம் தாண்டி ஓர் 
  உறுதி எடுப்போமா ? இனி 
  ஊழல் லஞ்சப் பேய்களை எல்லாம் 
  உலுக்கி எடுப்போமா?
அண்ணா காட்டிய வழியில் வந்தோர் 
  ஆட்டம் தடுப்போமா  ? - இனி
  அன்னா காட்டிய வழியில் ஒன்றாய் 
  அணிவகுத் திடுவோமா ? 
          


 புத்தாண்டு வாழ்த்துக்கள் 
                                                                                                                            -சிவகுமாரன் 

  

41 கருத்துகள்:

  1. நம் விதி நம் கையில் என எண்ணித் துணிய இன்னொரு வாய்ப்பு - அதை எடுத்துச் சொன்ன விதம் அருமை.

    உமது எண்ணங்கள் ஈடேறும் பாதையில் இன்னொரு படியாகட்டும் புத்தாண்டு.

    எழுச்சியூட்டும் வரிகள். (அன்னாவை நம்பமுடியவில்லை - நீங்க சொன்னா சரி).

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அண்ணா,
    மலர்ச்சி வேண்டிய, புதிய எழுச்சி வேண்டி உறுதி எடுக்கும் நோக்கில் எம் கண் முன்னே நிகழும் துயரங்களை, அரசியல்வாதிகளின் ஏமாற்று வித்தைகளை சந்தம் கலந்து சொல்லி நிற்கிறது இக் கவிதை.

    என்றோ ஓர் நாள் மாற்றம் வரும் என்று சொல்லியே ஏமாந்து விட்டோம்!

    இப்போதும் நம்பிக்கையோடிருப்போம்.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு பத்தியும் படிக்கப் படிக்க மன எழுச்சி
    உணர்வுமலையில் ஒவ்வொரு படியாய் ஏறுவதை உணர முடிந்தது
    மீண்டும் மீண்டும் சப்தம் போட்டுப் படிக்கத் தூண்டும் அருமையானசந்த மெட்டு
    அதனுடன் கைகோர்த்து பெருமைகொள்ளும் வார்த்தைகள்
    அடி நாதமாய் எம்மை கொள்ளை கொண்டு போகும் கவிதைக் கரு
    ஆண்டின் துவக்கத்தை இத்தனை அருமையான பாடலைப் படித்துத் தொடர்வது
    பெருமிதம் அளிப்பதாக உள்ளது
    தொடர வாழ்த்துக்கள்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அற்புதம் சிவகுமரன்

    மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்..

    பதிலளிநீக்கு
  5. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. அன்பு சிவகுமாரா, அவலங்களை சுட்டிக்காட்டும் கவிதை வரிகள் அருமை. அதற்குத் தீர்வு அவனவனிடம் என்று உண்ர்தலே முதல் படி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லாஜனவரி 01, 2012 11:19 AM

    ''...மாற்றம் பிறக்க மகேசன் என்ன
    மண்ணில் பிறப்பானா ? - நம்
    மந்தையை மேய்க்க மாயக் கண்ணன்
    மறுபடி வருவானா...''
    அத்தனை வரிகளும் மிக அருமையாக உள்ளது. வாழ்த்துகள். இனிய புத்தாண்டு இணையட்டும் தங்களுடன் .
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  8. எல்லா வரிகளும் உணர்ச்சி மயமானது . ஆனால் கடைசி வரி ? என்னை பொறுத்தவரை எல்லா அண்ணாவும் ஒன்று தான் . மக்கள் மனதில் உறுதி வேண்டும்

    பதிலளிநீக்கு
  9. விடியல் வரும் என்று காத்திராமல்
    விடியலை படைப்போம்..
    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள சிவகுமரன் அவர்களே! அற்புதமான வரிகள். அன்னாதான் ஓய்ந்து விட்டாரே! பவம்! அவரை விட்டுவிடுங்கள்.---காஸ்யபன்,

    பதிலளிநீக்கு
  11. அற்புதம்....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. வாசிக்கையிலேயே நெஞ்சம் நிமிர்த்தி நரம்புகளை முறுக்கேற்றும் வைர வரிகள். புத்தாண்டில் புதிதாய்ப் பிறப்போம். மந்தைகளாய் வாழாது சிந்தித்து செயல்படுவோம். பாராட்டுகள் சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லாஜனவரி 01, 2012 5:57 PM

    உங்களுடன் சேர்ந்து நானும் புத்தாண்டு சபதம் ஒன்றேனும்
    உங்கள் கவிதையில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.
    அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. சிவகுமரன் அண்ணா,

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ஒவ்வொரு வரியும் ‘அக்கினி குஞ்சாய்’ இருக்கிறது.இதை நாம் ஓவ்வொருவரும் ’மன பொந்திடை’ வைத்தால், நிச்சயம் வெந்து தணியும் நாடு!

    பதிலளிநீக்கு
  16. உரத்துச் சொல்லிப் பார்த்தேன் உத்வேகம் உந்தித் தள்ளுகிறது உடைத்தெறிகிறது என் உட்பயத்தை !

    பதிலளிநீக்கு
  17. நன்று
    நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  18. புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. "நேற்றைப் போலே இன்றும் இருந்தால்
    நாளைக்கென்ன பயன்? - அட
    நீயும் நானும் நீண்டு வளர்ந்தோம்
    நிலத்திற் கென்ன பயன் ?"


    ஏதோ ஒரு சடங்காய் புத்தாண்டினை வாழ்த்திடாது சங்கதியோடு மக்களுக்கு சந்தத்துடன், அதனை சப்தத்துடன் உரக்கச் சொல்லியிருக்கின்றீர்கள்! ஒவ்வொரு வரியும் மனதினில் கிளர்ச்சியூட்டுகின்றது. நியாயமான கேள்விகளை நமக்கு நாமே கேட்க ஆரம்பித்து விட்டாலே பாதி தெளிவு பிறக்கும்.

    ”மாற்றம் பிறக்க மகேசன் என்ன
    மண்ணில் பிறப்பானா ? - நம்
    மந்தையை மேய்க்க மாயக் கண்ணன்
    மறுபடி வருவானா ?”

    திரு. சூர்ய ஜீவா கூறுவது போல 'விடியலுக்காக காத்திராமல் நாம் விடியலை படைக்க முற்படுவோம்' என்பதையே ஒவ்வொரு வரியும் உணர்த்துகின்றது. புரிதலுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  20. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள், சிவகுமாரன்!

    பதிலளிநீக்கு
  21. அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. புரட்சிக் கவிதை.புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. நம்
    காலம் முடிந்து போனதும் நம்மைப்
    பேசிட வேண்டாமா ?

    நல்ல நல்ல வரிகளில் அழகான கருத்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. இன்னும் ஒரு பாரதியை காண முடிகிறது!அழகான கேள்விக் கணைகள்;எழுச்சி பெறத் தூண்டும் வார்த்தைகள்.
    உங்கள் வழியில் உறுதியெடுக்கிறேன்... நன்றி!

    பதிலளிநீக்கு
  25. நல்லா இருக்கு பாராட்டுகள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லாஜனவரி 05, 2012 5:38 PM

    மிக அருமை தோழரே !
    பாராட்ட வார்த்தைகள் இல்லை என்னிடத்தில்..

    பதிலளிநீக்கு
  27. புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  28. உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
    புத்தாண்டு கவிதையில் புதிய எழுச்சி
    ஒவ்வொரு வரியிலும் புத்துணர்ச்சி.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  29. உறுதி மொழிகளில் உண்மை காட்டமாக எதிரொலிக்கிறது சிவா... இதில் ஒன்றிரண்டை செயல் படுத்த ஆரம்பித்தாலே நம் நாடு முன்னேற்ற பாதையில் முன்னேறும் ..
    அண்ணா ... அன்னா... நச்

    பதிலளிநீக்கு
  30. மயான வைராக்கியம் , பிரசவ வைராக்கியம் போல் இல்லாமல் தொடர்ந்து இலட்சியம் நிறைவேறும் வரை போராட அனைவரும் உறுதி பூண வேண்டும் . இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . வாசு

    பதிலளிநீக்கு
  31. அருமையான படைப்பு
    தாங்கள் இன்று சென்னைப் பித்தன் அவர்களால்
    வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள்ளதற்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    தங்கள் கவிப்பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  32. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  33. வெறுங்
    கூச்சல் போட்டு பலனிலை ; அதற்கோர்
    கொள்கை வகுப்போமா ?

    எழுச்சி தரும் பகிர்வு..

    பதிலளிநீக்கு
  34. ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு வந்துக்கொண்டே இருக்கிறது....

    புத்தாண்டு பிறக்க பிறக்க உறுதிமொழிகளும் எடுத்துக்கொண்டே தான் இருக்கிறோம்...

    நல்லவைகளை கண்டு நல்லவைகளை செய்து நல்லவைகளையே பேசி நல்லவை செய்து மனம் மகிழ்வோம்...

    தீமையை எதிர்த்து, முடியாது போனால் நம் வரை தீமைகள் செய்யாது தீமைகளை தடுத்து முடியாது போனால் தீமைக்கு துணைபோகாது....

    அருமையான எழுச்சி தரும் வரிகளால் புத்தாண்டில் உறுதி எடுக்கவைத்த அற்புதமான கவிதை பகிர்வுக்கு என் அன்பு நன்றிகள் சிவகுமாரன்....

    அன்பு பொங்கல் நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்...

    பதிலளிநீக்கு
  35. எழுச்சி மிகு வரிகள், அருமை!!

    பதிலளிநீக்கு
  36. உண்மைங்க திரு.சிவகுமாரன் நெற்றிக்கண்ணை திறந்து காட்டி இருக்கீங்க.ஊழல் களைந்து நம் நாடு உய்தல் வேண்டும். ல்லோரும் சிந்திக்க முற்பட்டால் நிச்சயம் நடக்கும் காலம் கடந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.என்றும் அன்புடன்

    பதிலளிநீக்கு
  37. முதலில், வலைக்கு ஒழுங்காக வரவேண்டும் மற்ற நண்பர்களின் வலைப்பக்கம் சென்று படித்து பின்னூட்டம் இடவேண்டும் - என்றதொரு உறுதி எடுக்க வேண்டும் நான். பிறகல்லவா பிறரை உறுதி எடுக்க சொல்லும் தகுதி கிடைக்கும்.?
    அனைவரும் மன்னிக்க வேண்டும். வேலைப்பளு, இணையக் குறைபாடு இவற்றால் இடுகை இடவும், வலைப்பக்கம் வரவும் இயலவில்லை. இன்னும் இடைவெளி அதிகமாகும் போலிருக்கிறது.

    வாழ்த்துரைத்த அனைவருக்கும் நன்றி.
    மீண்டும் முழுமையாய் வர முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  38. தங்கள் கவிதைகள் எங்களுக்கு
    ஒரு கலங்கரை விளக்கம்போல
    வெகு நாட்கள் பதிவைக் காணாமல் தவிக்கிறோம்
    ஒளிகாட்ட அன்புடன் வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  39. அவசரம் எதுவும் இல்லை.. மெள்ள வாங்க.

    பதிலளிநீக்கு
  40. ஓட்டுப் பொறுக்கிகள் காசுகள் தந்தால்
    உமிழ்ந்திட வேண்டாமா ? - அந்த
    ஊழல் பணத்தில் உனக்கும் பங்கா ?
    உதறிட வேண்டாமா ?//அருமை!!

    பதிலளிநீக்கு
  41. எத்தனை ஆண்டுகள் மாறினாலும் உங்கள் கவிதையின் கருத்துப் பொருந்துகிறது அண்ணா!
    காலம் வென்ற கவிதை!
    நன்றி

    பதிலளிநீக்கு