திங்கள், நவம்பர் 02, 2015

பிள்ளைக்குறள் 70



வகுப்பறை என்பது வையத்தை வெல்ல
தகுதியாய் ஆக்கும் தளம்.

தளத்தைக் கவனமாய்த் தேர்ந்திட்ட பின்னர்
களத்தில் திறமையைக் காட்டு.

காட்டுவாய் யாரென்று கானக் குயிற்குஞ்சு
ஓட்டை உடைப்பதை ஒத்து
.
ஒத்தக் கருத்துடன் ஒவ்வாத ஒன்றையும்
எத்தன்மை என்றுபார் ஆய்ந்து.

ஆய்ந்து தெளிந்தே அறுதியிடு! இல்லையேல்
பாய்ந்து  வரும்பார் பழி.

பழிக்குப் பயங்கொள்! பழம்பட்ட நோய்போல்
அழித்தே  ஒழிக்கும் அது.

அது-இது என்றெல்லாம் ஐயங்கள் இன்றி
எதிலும் துணிவாய் இறங்கு

இறக்கத்தில் கைதூக்கி ஏற்றியோர் தம்மை
மறக்காமல் என்றும் மதி

மதிப்பில்லை என்றால் மகேசன் எனினும்
விதிப்பயன் என்று வில(க்)கு.

விலக நினைக்காமல் வெல்லும் வெறிகொள்.
இலகுவாய் வெற்றிகள் ஏது?                                           ...70
                                                                                                                                                                                                                தொடரும் 


சிவகுமாரன் 

16 கருத்துகள்:

  1. அருமை அருமை
    நீண்ட நாட்களாகிவிட்டன நண்பரே
    தங்களை வலையில் சந்தித்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. நான் தற்போது இருக்கும் சூழலில் இணையத்தில் அதிக நேரம் செலவிட இயலவில்லை.

      நீக்கு
  2. மிகவும் அருமை....

    தொடருங்கள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. குறள் கற்கும் குழந்தைகளாகிறோம். தொடருங்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எல்லாம் இருக்கும் தைரியத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். நன்றி விஜூ

      நீக்கு
  4. வணக்கம்
    அற்புத வரிகள் வாழ்த்துக்கள் தொடருங்கள் த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

  5. வணக்கம்

    குன்றும் உகரத்தை நன்றே உணர்கின்ற
    அன்றே அமையும் அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அழகாக தவறைச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி அய்யா. திருத்தியிருக்கிறேன். சில இடங்களில் கருத்தை வலியுறுத்தும் பொருட்டு வழுவமைதி எனக் கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

      நீக்கு
  6. அனைத்தும் அருமை. முதல் குறளை அதிகம் ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு