ஞாயிறு, செப்டம்பர் 05, 2010

திண்ணை ராஜ்ஜியம்

                           

# புண்ணியவதி போய்ச்சேர்ந்து
   பத்து  வருஷமாச்சு.
  அவளோடு சேர்ந்து
  ஆதரவும் போயாச்சு!

# வருடம் ஒருமுறை
  அவள் திதிக்கு மட்டும்
  வக்கணையாய்
  சாப்பிட  முடிகிறது.

# பரிணாம வளர்ச்சியில் 
  அப்பா என்ற
  அழகிய சொல்
  முன்னிலையில்
  "பெரிசு" என்றும்
  படர்க்கையில்
  "கிழட்டுச் சனியன்" என்றும்
   உருமாறிப் போனது.

# முதியோர் இல்லம்
  அனுப்பிட 
  முனைப்போடிருக்கிறான்
  செல்லமகன். 
  மருமகளுத்தான்
  மனசில்லை.

# நர்சரி பேரனை
  அழைத்துவர,
  கமிஷன் அடிக்காமல்
  காய்கறி வாங்கிவர,
  வெளியூர் சென்றால்
  வீட்டைக் கவனித்துக்கொள்ள
  நம்பிக்கையான
  வேலையாள்
  கிடைக்கவில்லையாம்.

# விருந்தாளிகளை
   விவஸ்தையின்றி
   கடிக்கிறதாம் அல்சேஷன்.
   விற்றுவிட்டார்கள்.

# இப்போது எனக்கு
  வேலைமாற்றம் வந்திருக்கிறது.
  வீட்டுத்திண்ணைக்கு!

# வீசியெறியப்படுகிறது
  சோற்றுத்தட்டு.
  வாலிருந்தால்
  ஆட்டிக்காட்டலாம்
  பதிலாய்த்தான்
  ஆடிக்கொண்டிருக்கிறது
  தலை.

                       -சிவகுமாரன்

5 கருத்துகள்:

  1. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_05.html

    பதிலளிநீக்கு
  2. வயசு போனவங்க மனசு படுற கஸ்டமும் அவங்க நிலைமையும் பார்த்தா வயசு போய் உடம்பு தளரமுதலே நான் செத்திடணும்ன்னு இப்பவே சாமிகிட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன் !

    பதிலளிநீக்கு
  3. தோழி ஹேமாவின் அதே மன சஞ்சலம் தான் எனக்கும்...

    வலிக்கும் உண்மைகளை வார்த்தைகளில் சமைத்துள்ளீர்கள்...

    நன்று தோழா...

    நானும் கவிதை கிறுக்கன் தான். பொழுதிருப்பின் எனது வலைப்பூவிற்கு வாருங்கள்

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் ஹேமா . எனக்கும் அதே நெனைப்பு தான். ( நானே எங்க அம்மாவை கவனிக்காமல் வெளியூரில் இருக்கேன். அம்மா சொந்த ஊர்லேயிருந்து நகர மாட்டேங்கிறாங்க.)

    பதிலளிநீக்கு
  5. வருணபகவானின் வருகைக்கு நன்றி.
    வருகிறேன் உங்கள் வலைக்கு.

    பதிலளிநீக்கு