திங்கள், செப்டம்பர் 20, 2010

தவி(ர்)ப்பு

கரிசனம் கொஞ்சமும்
காட்டிவிடக் கூடாதென்பதில்
ரொம்பவே
கவனமாக இருக்கிறாய்.

எங்கள்
இனிய கனவுகள்
சிதைபடும்போது
ஈரக்குலைகள்
அறுபடும்போது
நாயாய் நாங்கள்
உதைபடும்போது
தாயை அயலான்
தாக்கிடும்போது
சிங்கள நாய்கள்
நாக்கைச் சுழற்றி
எங்கள் சகோதரியை
தீண்டியபோது
சேலை இழந்த
பாஞ்சாலியாய்
கைகள் தூக்கி
கதறியபோது

கவனமாக இருந்தாய்
காரியம் பிறிதில்.

இனவரலாறு
எழுதிடும்போதும்
செம்மொழி பற்றி
சிலாகிக்கும் போதும்
தவிப்போடு
தவிர்த்து விடுகிறாய்
ஈழம் என்ற
இழவு வார்த்தையை.

எனக்குத் தெரியும்
அது
உனக்கும்  தெரியும் .
எனக்கும் உனக்குமான
தூரம்
உன்
உதட்டிற்கும்
மனசுக்குமானது தான்.

                        -சிவகுமாரன்

2 கருத்துகள்: